Home தேசிய national tamil படைகளின் கட்டுப்பாட்டில் இலங்கை வடக்கு மாகாண நிலங்கள் – ஜனாதிபதியின் ‘1,000 ஏக்கர்...

படைகளின் கட்டுப்பாட்டில் இலங்கை வடக்கு மாகாண நிலங்கள் – ஜனாதிபதியின் ‘1,000 ஏக்கர் வாக்குறுதி’ தீர்வைக் கொடுக்குமா?

3
0

SOURCE :- BBC NEWS

இலங்கை ஜனாதிபதி

“இராணுவம் எனது நிலத்தில் பலன் பெறுகிறது. எமது நிலங்களில் விவசாயம் செய்கின்றனர், ஆனால் நிலத்தின் உரிமையாளரான என்னால் எனது வீட்டிற்குள் கூட நுழைய முடியவில்லை.”

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் தனது காணியை மீட்டெடுக்க நீண்டகாலமாகப் போராடி வரும் விவேகானந்தன் இந்திரதேவியின் வார்த்தைகள் இவை.

தேர்தல் காலத்தில் ‘சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவோம்’ என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார் .

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், வடக்கு – கிழக்கில் நீண்டகாலமாக நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரத்தில் புதிய வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், அது உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பும் நாடாளுமன்றத் தரவுகளும்

அண்மையில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது, குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போது எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக எஞ்சிய காணிகளை முறையாக மேலாண்மை செய்வதே அரசின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஜனவரி 1 முதல் அக்டோபர் வரை மொத்தம் 672.24 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த அரச காணிகளும் அடங்கும் எனவும், மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வசாவிலான் பகுதியில் 36 ஆண்டுகளாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். “காணி விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை” எனவும் அவர் உறுதியளித்தார்.

“இது ஓர் ஏமாற்று வேலை”: தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கண்டனம்

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மறுக்கின்றனர். அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை கொடுத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிவஞானம் சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “யுத்தம் (விடுதலைப்புலிகளுக்கு எதிரானது) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நீண்டகாலமாகின்ற போதிலும், வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் இன்னமும் தமது வசமே வைத்துள்ளனர். ” என்றார்.

குறிப்பாக, வலிகாமம் வடக்கில் மட்டும் மக்களின் 2,200 ஏக்கர் விவசாய நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், “நிலங்களை விடுவிப்பதாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கூறி வந்தாலும், நடைமுறையில் அவை படையினரிடமே உள்ளன. இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வேலையையே முன்னெடுப்பதை எம்மால் காண முடிகின்றது.” என்றார்.

விரைவில் காணிகளை விடுவிப்போம் என அவ்வப்போது கூறினாலும், அரசாங்கத்திடம் அதற்கான உண்மையான நோக்கம் இருப்பதாகத் தான் உணரவில்லை எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ரவிகரன்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இது குறித்து பிபிசி தமிழுக்கு கூறுகையில், “கடந்த ஜனவரி முதல் 1,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவை எங்கே, எப்போது விடுவிக்கப்பட்டது என்று எமக்குத் தெரியவில்லை. கேப்பாப்புலவில் 160 ஏக்கர் நிலம் இன்னும் இராணுவ வசம் உள்ளது. இதனால் நந்திக்கடலுடன் ஒட்டிய மீனவ வாழ்வாதாரமும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த அரசாங்கத்தை எதிர்க்காது இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த நம்பிக்கையை ஜனாதிபதி காப்பாற்ற வேண்டும்.” என்றார்.

மன்னார் மாவட்டத்தின் நிலைமைகளை எடுத்துக்கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், “முள்ளிக்குளம் பகுதியில் கடற்படை வசம் உள்ள மக்களின் வயல் நிலங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம். சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், ஆயருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தேவாலய நிலங்கள் அனைத்தும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கை.” என்றார்.

ஆய்வில் கிடைத்த தரவுகள் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் மட்டும் முப்படைகள் மற்றும் காவல்துறை வசமுள்ள மக்களின் சொந்த உறுதிக்காணிகளின் விபரங்கள் குறித்து கண்டறிய முடிந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தம்: 2,624.286 ஏக்கர் படையணிகளிடம் உள்ளது. இராணுவத்திடம் 1,775 ஏக்கர், விமானப்படையிடம் 600 ஏக்கர் மற்றும் கடற்படையிடம் 160 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இது தவிர காவல்துறையிடமும் கணிசமான நிலம் உள்ளது.

இது தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 1,209.22 ஏக்கர், முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 1,494.13 ஏக்கர், நிலங்கள் பாதுகாப்பு படைகளிடம் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர் மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் மட்டும் 398.59 ஏக்கர் தனியார் காணிகள் முப்படைகள் வசம் உள்ளன. மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் நானாட்டான் பகுதிகளில் மட்டும் 28 இடங்களில் மக்களின் நிலங்கள் கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட தரவுகள் குறிப்பிடுகின்றன.

சிவில் அமைப்புகளின் புகார் என்ன?

இரத்தினசிங்கம் முரளிதரன்

” யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நீண்ட காலமாகியுள்ள நிலையில், நாட்டில் அமைதியும் அபிவிருத்தியும் நிலவுவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கங்கள், இன்னமும் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது நியாயமற்றது” என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

” இலங்கையின் ஏனைய மாகாணங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் கையகப்படுத்தப்பட்டாலும், வடக்கு – கிழக்கில் மாத்திரம் ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் முப்படைகளினால் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன” என அவர் கூறினார். அத்துடன், தொல்பொருள், கரையோரப் பாதுகாப்பு போன்ற திணைக்களங்களின் பெயர்களைப் பயன்படுத்திச் சட்ட ரீதியாக இந்த ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடபுலத்திலேயே அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனாவசியமாக நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றினாலே மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க முடியும் என்றும், இந்தத் தொடர் ஆக்கிரமிப்பால் மக்களின் வாழ்வாதாரமும் நிம்மதியும் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ‘மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்’ என்பதே தமது நியாயமான கோரிக்கை எனவும் அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கையா? ஏமாற்றமா?

ஜனாதிபதியின் 1,000 ஏக்கர் விடுவிப்புத் திட்டம் ஒருபுறம் புதிய நம்பிக்கையை விதைப்பதாகத் தெரிந்தாலும், அரச திணைக்களங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட தரவுகள் முற்றிலும் மாறுபட்ட நிலையை காட்டுகின்றன.

விடுவிப்பு என்ற பெயரில் சில ஏக்கர் நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டாலும், எஞ்சிய நிலங்களில் படையினர் விவசாயம் செய்து பலன் பெறுவதும், மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைவதற்குக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதும் தொடர்கதையாகவே உள்ளது என விவேகானந்தன் இந்திரதேவி போன்ற காணி உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU