SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், ANI
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று மாலை செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் இரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.
“வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இரானிய வெளியுறவு அமைச்சரும் சமீப நாட்களில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடைசி உரையாடலில், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தாண்டி கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
இந்நிலையில் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை இரவு இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் பேசினார்.
மார்ச் 13, வெள்ளிக்கிழமை அன்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று இரவு இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் ஒருமுறை உரையாடினேன். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதற்கிடையே வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான இரான் தூதர் முகமது ஃபதாலி, ஹோர்முஸ் நீரிணை வழியாக வழியாக இந்தியாவிற்கு பாதுகாப்பான பாதையை இரான் வழங்கும் என கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல முடியுமா என இரான் தூதரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ”ஆம், ஏனென்றால் இந்தியா எங்கள் நட்பு நாடு” என்று பதிலளித்தார்.
பட மூலாதாரம், ANI
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பாதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே சென்றது. ஆனால் இன்று 70 சதவீதம் பிற மாற்று வழிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது, இது விநியோக அபாயத்தை கணிசமாகக் குறைத்துள்ளது என பத்திரிகை தகவல் பணியகம் கூறியுள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் சின்ஹா வியாழக்கிழமை இதுகுறித்துக் கூறுகையில், தற்போது 28 இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கிலும் கிழக்கிலும் இயங்கி வருவதாகவும், அவற்றில் குறைந்தது 667 இந்திய மாலுமிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையில் புதன்கிழமை தாக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து வியாழக்கிழமையன்று எதிர்வினையாற்றிய வெளியுறவு அமைச்சகம், “தற்போது நடந்து வரும் மோதலில் வணிகக் கப்பல்கள் ராணுவத் தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதை இந்தியா கண்டிக்கிறது” என்று தெரிவித்தது.
காமெனியிக்கு இரங்கல்
பட மூலாதாரம், AFP via Getty Images
இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மறைவுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு இரங்கல் தெரிவித்த செய்தி குறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “மார்ச் 5 அன்று இரங்கல் புத்தகம் முதல்முறையாகத் திறக்கப்பட்ட நாளிலேயே, இந்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் இரானிய தூதரகம் சென்று அதில் கையெழுத்திட்டார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு இந்திய அரசு எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மார்ச் 5-ஆம் தேதி இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
அப்போது, அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை பெருமளவில் விமர்சிக்கப்பட்டது.
பட மூலாதாரம், AFP via Getty Images
இரானில் உள்ள 9000 இந்திய குடிமக்களின் நிலை என்ன?
“தற்போது இரானில் சுமார் 9,000 இந்தியக் குடிமக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கல்விக்காக அங்கு சென்றுள்ளனர். மேலும் மாலுமிகள், வணிக உலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில யாத்ரீகர்களும் அங்கு உள்ளனர். பிப்ரவரி 23 அன்று நாங்கள் அறிவுறுத்தலை வெளியிட்ட போதே, குறிப்பாக மாணவர்கள் இரானை விட்டு வெளியேறிவிட்டனர்.” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
மேலும், இதையும் மீறி அங்கு தங்கியிருப்பவர்கள் தெஹ்ரானில் இருந்து மற்ற நகரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
”இந்தியா திரும்ப விரும்பும் பல குடிமக்கள் அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக சாலை மார்க்கமாக பயணம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தூதரகம் உதவி வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.
”தெஹ்ரானில் உள்ள எங்களது தூதரகம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது மற்றும் இந்திய சமூகத்தினரின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அவர்களுடன் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளது.” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



