SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ANI
புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார்.
“தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார்.
“அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே1 ம் தேதிக்கு முன்னதாக திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.”
தூதரகங்களில் நடவடிக்கைகள் குறைப்பு

பட மூலாதாரம், PTI
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார்.
“பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாக பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகள் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மே 1ம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பின், பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU