SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
5 ஜூன் 2025
புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்
கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தால், கர்நாடக மாநிலத்தில் அவருடைய ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகும் தருணத்தில் இதுபோல சர்ச்சை ஏற்படுவது முதல் முறையல்ல. அப்படி சர்ச்சைக்குள்ளாகி வெளியாவதில் சிக்கலைச் சந்தித்த படங்கள் எவை? அந்தச் சர்ச்சைகளின் பின்னணி என்ன?
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது” என்று கூறியது, கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், எல்லா இடங்களிலும் ஜூன் 5ஆம் தேதி அந்தப் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கமல்ஹாசனின் திரைப்படங்கள் இதுபோல சிக்கலில் சிக்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவரது பல திரைப்படங்கள் இதுபோல சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன. ‘தக் லைஃப்’ படத்திற்கு முன்பாக இதுபோல சர்ச்சையில் சிக்கிய படங்கள் என்னென்ன, அவை ஏன் சர்ச்சையில் சிக்கின என்பதைப் பார்க்கலாம்.

1. விஸ்வரூபம் (2013):
கமல்ஹாசன் இயக்கி, நடித்த இந்தத் திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டவுடனேயே இந்து மக்கள் கட்சி படத்தின் தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தப் படத்தின் தலைப்பு சமஸ்கிருதத்தில் இருப்பதாகவும் தமிழ் தலைப்பை வைக்க வேண்டுமென்றும் அந்த அமைப்பு கூறியது. ஆனால், இந்த எதிர்ப்பிற்கு படக்குழுவினர் இணங்கவில்லை. படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
அடுத்த சர்ச்சை, படத்தின் வெளியீடு தொடர்பாக எழுந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக நேரடியாக டிடிஎச்சில் ஒரு முறை வெளியிடப்போவதாக அறிவித்தார் கமல்ஹாசன். இதற்காக டிடிஎச் நிறுவனங்களுடம் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. படம் வெளியாவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு முறை டிடிஎச்சில் திரையிடப்படும் என்றும் ஆயிரம் ரூபாய் வரை இதற்கு கட்டணம் இருக்குமென்றும் கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, திரையரங்க உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழிலும் தெலுங்கிலும் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் இந்தியில் வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகும் டிடிஎச்சில் வெளியிட முடிவெடுக்கப்பட்டது.

இந்தப் படத்தை 2013ஆம் ஆண்டு ஜனவரி 25 வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள், விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்கள் மோசமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் படத்திற்கு ஜனவரி 28ஆம் தேதிவரை தடை விதித்தது. இதற்குப் பிறகு, அந்தத் தடை செல்லுமென ஜனவரி 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கிடையில் பிற மாநிலங்களில் படம் வெளியானது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் பல மாநிலங்களில் படம் திரையரங்குகளில் ஓடுவது நிறுத்தப்பட்டது. இலங்கை, மலேசியாவிலும்கூட படம் நிறுத்தப்பட்டது.
இதற்குப் பிறகு தன் வீட்டிலிருந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்த நாட்டைவிட்டே வெளியேற விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சில இடங்களில் வசனங்களை மௌனமாக்க கமல் ஒப்புக்கொண்டார். பிறகு ஒருவழியாக பிப்ரவரி ஏழாம் தேதி படம் தமிழ்நாட்டில் வெளியானது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக, தானும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் பங்கேற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பிரதமராவதைப் பார்க்க விரும்புவதாகக் கூறியதுதான் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை ஆத்திரப்படுத்திவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குற்றம்சாட்டினார்.
இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான இந்தப் படம் சுமார் 220 கோடி ரூபாயை வசூலித்ததாக சொல்லப்பட்டது.
2. உத்தமவில்லன் (2015)

பட மூலாதாரம், SonyMusic South
லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் உத்தமவில்லன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தப் படத்தில் ‘என் உதிரத்தின் விதை’ என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற வரி வருகிறது; இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது; எனவே இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. படத்தை எதிர்த்து சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இருந்தபோதும் படம் வெளியானது.
3. தசாவதாரம் (2008)

பட மூலாதாரம், IMDB
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்த திரைப்படம் தசாவதாரம். இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். முதலில் இந்தப் படத்தின் கதை தன்னுடயது என்று கூறி, தாம்பரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இரு கதைகளிலும் 10 வேடங்கள் என்பதைத் தவிர வேறு ஒற்றுமைகள் இல்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், இந்தப் படம் சைவ – வைணவ மோதல்களைத் தூண்டுவதாகவும் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சனாதன் கழகம் என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மனுதாரர் முதலில் படத்தைப் பார்க்க வேண்டும்; அதற்கு முன்பே தடையைக் கோருவது சரியல்ல” என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. 2008ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி படம் வெளியானது.
4. விருமாண்டி (2004)

பட மூலாதாரம், IMDB
தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசனே இயக்கிய திரைப்படம் விருமாண்டி. இந்தப் படத்தின் முதல் கட்ட விளம்பரங்கள் வெளியானபோது, படத்திற்கு ‘சண்டியர்’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணாமி, படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தத் தலைப்போடு படம் வெளியானால், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறினார். தேனி மாவட்டத்தில் நடந்துவந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்த கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு பாதுகாப்புத் தரும்படி கோரினார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிறகு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார் கமல். பிறகு படத்தின் தலைப்பு விருமாண்டி என மாற்றப்படுவதாக அறிவித்தார். 2014ஆம் ஆண்டில் சோழதேவன் என்பவர் இயக்கத்தில் சண்டியர் என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளியானது. ஆனால், அதில் சர்ச்சை ஏதும் ஏற்படவில்லை.
5. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)

பட மூலாதாரம், SunNXT
இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி சஞ்சய் தத் நடிப்பில் வெளிவந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படம், சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் தலைப்பிற்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கே.ஆர். பாலசுப்பிரமணியன் எதிர்ப்புத் தெரிவித்தார். மருத்துவர்கள் அனைவரும் வசூல் ராஜாக்கள் எனக் குறிப்பிட்டு, அவதூறு செய்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஏ.கே. ராஜன் அமர்வு, வசூல் ராஜா என்பது ஒரு நபரின் செல்லப் பெயராக இருக்கலாம் என்றும் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லையென்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC