Home தேசிய national tamil கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு யாரெல்லாம் செல்லலாம்? விண்ணப்பிப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு யாரெல்லாம் செல்லலாம்? விண்ணப்பிப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

5
0

SOURCE :- BBC NEWS

கைலாய மலை

பட மூலாதாரம், Getty Images

12 நிமிடங்களுக்கு முன்னர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. பக்தர்கள் இணையதளம் மூலம் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மே 13, 2025 என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் பயணம் ஜூன் 30 அன்று புது டெல்லியில் இருந்து லிபுலேக் வழியாகத் தொடங்கும்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 900 இந்திய பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு வருகை தருகின்றனர். சிவபெருமான் கைலாய மானசரோவரில் வசிக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கையாக உள்ளது.

இந்து மதத்தின் பல புனித நூல்களில் இது குறித்த குறிப்புகள் உள்ளன. இங்கு ஏரியைச் சுற்றி வருவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலை, மானசரோவர் ஏரி ஆகியவை பௌத்தம் மற்றும் சமண மதத்திலும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

யார் விண்ணப்பிக்கலாம்?

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான விதிகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன் முதல் தகுதி என்னவென்றால், யாத்ரீகர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பதுதான்.

  • யாத்ரீகர் செப்டம்பர் 1ஆம் தேதி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
  • நடப்பு ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • புனித யாத்திரைக்கு மிக முக்கியமான விஷயம் உடல் நிறை குறியீட்டெண் அதாவது யாத்திரை செல்பவரின் பிஎம்ஐ. அதாவது, 25 அல்லது அதற்கும் குறைவான பிஎம்ஐ உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • இந்தப் பயணத்திற்குச் செல்லும் நபர் உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
  • வெளிநாட்டினர் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல், வெளிநாட்டு இந்திய குடிமகன் அதாவது ஓசிஐ (OCI) அட்டை வைத்திருப்பவர்களும் இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும்போது மனதில் கொள்ள வேண்டியவை

கைலாய மலை

பட மூலாதாரம், Getty Images

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான குலுக்கல் முறையிலான தேர்வு, கணினி மூலம் நடத்தப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு இருப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

  • விண்ணப்பிக்கும்போது, ​​செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி குறைந்தது ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் அதன் முதல் மற்றும் கடைசி பக்கத்தின் நகல் உங்களிடம் இருக்க வேண்டும்.
  • இதனுடன், விண்ணப்பிக்கும் நபரின் புகைப்படம் ஜேபிஜே வடிவத்தில் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, ஒரு கணக்கில் இருந்து இரண்டு விண்ணப்பங்களை மட்டுமே நிரப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • இதற்குப் பிறகு, பாஸ்போர்ட்டில் எழுதப்பட்ட தகவலின்படி ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உங்கள் பெயர், முகவரி அல்லது வேறு ஏதேனும் தகவலை மறைத்தால், நீங்கள் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம்.

பயணத்திற்கான தேர்வு எப்படி நடக்கிறது?

கைலாய மலை

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, விண்ணப்பித்தவர்களில் இருந்து யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் வெளிவிவகார அமைச்சகம் தேர்ந்தெடுக்கிறது.

பயணிகள் செல்ல வேண்டிய பாதை மற்றும் அவர்கள் சேர்ந்து செல்ல வேண்டிய குழுவும், கணினி மூலமான குலுக்கல் (தேர்வு) நடைபெறும் போதே ஒதுக்கப்படுகின்றன.

குலுக்கலுக்குப் (தேர்வுக்கு) பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் யாத்திரைக்கு விண்ணப்பித்திருந்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும், பதிவு செய்யப்பட்ட அவர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கும். இது தவிர, எந்தவொரு நபரும் 011-23088133 என்ற உதவி எண் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம்.

இதன் பிறகு, விண்ணப்பதாரர் ‘பயணிகளுக்கான கட்டணம் மற்றும் செலவுகள்’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பயணச் செலவுகளை அமைச்சகம் வழங்கிய காலக்கெடுவுக்கு முன்னர் ‘குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம்’ அல்லது சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் டெல்லிக்கு செல்லும் முன்பாகவே ஆன்லைனில் தமது குழுவை (batch) உறுதிப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகுதான் அந்தக் குழுவில் சேர்க்கப்பட்டதாக அதிகாரபூர்வமாகக் கருதப்படும்.

குழுவினருக்கு, பயணம் தொடங்குவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். இதற்காக, திட்டமிடப்பட்ட தேதியில் டெல்லியில் உள்ள ‘ஹார்ட் அண்ட் லங் இன்ஸ்டிட்யூட்’ (Heart and Lung Institute) சென்று யாத்ரீகர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில், அவரின் பெயர் குழுவிலிருந்து நீக்கப்படும்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்படி, அனைத்துப் பயணிகளும் ஒன்றாகப் பயணம் செய்து திரும்புவது கட்டாயம். அனைத்துப் பயணிகளும் தங்களது பயணத்தை டெல்லியில் இருந்து தொடங்க வேண்டும்.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், ஆறு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டரி சான்றளிக்கப்பட்ட இழப்பீட்டுப் பத்திரத்தை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றுடன், அவசரக் காலங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுவதற்கான பிரமாணப் பத்திரமும், சீன பகுதியில் இறந்தால், அங்கேயே சடலத்தைத் தகனம் செய்வதற்கான ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால், பயணத்துக்கான அனுமதி வழங்கப்படாது.

பயணத்திற்கு எவ்வளவு செலவாகும்?

 கைலாஷ் மானசரோவர் யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை லிபுலேக் கணவாய் (உத்தரகாண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்) போன்ற இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை ஏற்பாடு செய்கிறது.

யாத்திரைக்கான செலவு பாதைக்குப் பாதை மாறுபடும். இந்தியாவில் கைலாஷ் மானசரோவர் இல்லை என்பதும், இது சீனாவின் திபெத்தில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்படி, எந்தவொரு தனியார் அமைப்பும் லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்) மற்றும் நாதுலா (சிக்கிம்) வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை ஏற்பாடு செய்வதில்லை. இந்த முறை கைலாஷ் மானசரோவர் பயணம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

முதலில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகவும், பின்னர் கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை காரணமாகவும், இந்தப் பயணம் 2020-2024 வரை தடைபட்டது.

பயண வலைதளத்தின்படி, லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்) இலிருந்து பயணத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1 லட்சத்து 74 ஆயிரம். இந்தப் பாதையில் சுமார் 200 கிலோமீட்டர் மலைப் பாதையில் பயணிக்க வேண்டும். இந்த வழித்தடத்தின் வழியாக ஐந்து தொகுதிகளாக யாத்ரீகர்கள் அனுப்பப்படுவார்கள், முழு பயணமும் முடிவடைய 22 நாட்கள் ஆகலாம்.

நாது லா கணவாய் வழியாகப் பயணிப்பவர்களுக்கான தோரயமான செலவு ரூ.2 லட்சத்து 83 ஆயிரமாக அதிகரிக்கும். இந்தப் பாதையில் சுமார் 36 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும். இந்தப் பாதை வழியாக 10 குழுக்களாக யாத்ரீகர்கள் பயணிக்கலாம். இந்தப் பயணம் 21 நாட்களில் நிறைவடையும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU