SOURCE :- BBC NEWS

இந்தியா – சீனா இடையே வங்கதேசம் ஆடும் ஆபத்தான அரசியல் விளையாட்டு
21 நிமிடங்களுக்கு முன்னர்
வங்கதேசம் – சீன வர்த்தக மாநாடு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது வங்கதேசத்தின் தலைமை ஆலோசகரான பேராசிரியர் முகமது யூனஸ், வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு சீன முதலீட்டாளர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
மாநாட்டின் போது, சீன முதலீட்டாளர்களை வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த அவர், சீனாவும் வங்கதேசமும் இணைந்து செயல்பட்டால் பல வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.
“சீன முதலீட்டாளர்கள் தெற்காசியாவின் பல நாடுகளின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளனர், வங்கதேசத்திலும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்” என்று முகமது யூனுஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்களுக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது வங்கதேசத்தின் விருப்பம். இதற்காக முதலீட்டைப் பெருக்கும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 மாதங்களுக்கு முன்பு இடைக்கால அரசு அமைக்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன,” என்று கூறினார்.
முந்தைய ஷேக் ஹசீனா அரசாங்கத்தை குறிப்பிடும் விதமாகப் பேசிய முகமது யூனுஸ், “பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் அவை காலியாகவே இருந்தன. பசுக்களும் எருமைகளும் அங்கு மேயத் தொடங்கின” என்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட எழுச்சியுடன் நாட்டில் ‘முக்கியமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின’, என்று பேசிய முகமது யூனுஸ்,
“முதலீட்டாளர்கள் வங்கதேச வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து, முன்னேற்றத்தின் பாதையில் எங்களுடன் ஒன்றாக நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக தனது இடைக்கால அரசாங்கம் மேலாளர்களை நியமித்துள்ளதாக கூறிய முகமது யூனுஸ்,
“வங்கதேசத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், வங்கதேசத்தை தங்கள் வீடாகவும், அதை தங்கள் உற்பத்தி மையமாகவும் மாற்றுங்கள் என்று சீன முதலீட்டாளர்களிடம் நான் கூற விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைத் தவிர, வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ மற்றும் வங்கதேசத்திற்கான சீனத் தூதர் யாவ் வென் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
“வங்கதேசத்தின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பலதரப்பு வர்த்தக அமைப்பை கூட்டாகப் பராமரிக்கவும், உலகப் பொருளாதாரத்தில் இன்னும் அதிகமான உறுதித்தன்மையையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த உதவுவதற்கும், சீனா தயாராக உள்ளது,” என்று வாங் வென்டாவோ கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் உள்ள ஜேஎன்யுவின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் முன்னாள் ராஜ்ஜீய அதிகாரி மற்றும் பேராசிரியர் எமரிட்டஸ் எஸ்டி முனி கூறுகையில், “வங்கதேசம் எப்போதும் சீனாவுடன் நெருக்கமாக இருந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் காலத்திலும் அது வங்கதேசத்துடன் நெருக்கமாக இருந்துள்ளது. 1975 க்கு முன்பு, சீனா வங்கதேசத்தை அங்கீகரிக்கவில்லை, அதுவரை உறவுகளில் இடைவெளி இருந்தது. இதற்குப் பிறகு, அது தொடர்ந்து வங்கதேசத்தில் முதலீடு செய்து வந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி நிபுணர் முனைவர் ஸ்மிருதி எஸ். பட்நாயக் கூறுகையில், “யூனுஸ் அரசாங்கம் சீனாவுடன் உள்ள தொடர்பை விட, அதிக நெருக்கமாக இருப்பது போல வெளிப்படுத்த முயல்கிறது. அவர் இவ்வாறு செய்வது, இந்தியாவில் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும்” என்று கூறுகிறார்.
“பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் (BRI) சீனா 42 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசிய முனைவர் ஸ்மிருதி எஸ். பட்நாயக், “அமெரிக்காவின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்கக்கூடாது, இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக அதிகரிக்கக்கூடாது என்று சீனா கவலைப்படுவதால், வங்கதேசத்தில் தனது இருப்பை அதிகரிக்க விரும்புகிறது. தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள, பாகிஸ்தானுக்குப் பிறகு வங்கதேசத்திற்கு சீனா அதிக ராணுவ உதவியை வழங்கி வருகிறது. அது நீர்மூழ்கிக் கப்பல்களையும் வழங்கியுள்ளது, ஆனால் அதன் முறை வேறுபட்டது.”என்றார்.
“ஷேக் ஹசீனாவுக்குக் கிடைத்த முன்னுரிமையை, இந்தியா முகமது யூனுஸுக்கு வழங்கவில்லை. அதனால்தான் அவர் இந்தியாவுக்கு எதிரான அமைப்பை எங்கு கண்டாலும், அங்கு செல்வார். இது அவருக்கு அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளைத் தருகிறது” என்றும் முனி கூறுகிறார்.
சீனாவிலிருந்து முதலீட்டைப் பெறுவது எவ்வளவு எளிதானதோ, அதே அளவு பின்னர் அதைத் திருப்பிச் செலுத்துவது கடினம் என்ற கருத்தை இரு நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் கூறியது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC