SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
தூய்மையான, நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. ஊட்டச்சத்தும் உணவுப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்தது.
நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமெனில், போதிய ஊட்டச்சத்துள்ள பாதுகாப்பான உணவு போதுமான அளவில் நமக்குத் தேவைப்படுகிறது.
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயனங்களால் மாசுபட்ட உணவு, வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை 200-க்கும் மேற்பட்ட நோய்களை உண்டாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலகளவில் பத்தில் ஒருவர் மாசுபட்ட உணவினால் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார், இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 4,20,000 பேர் உயிரிழக்கின்றனர்.
உணவு மூலம் பரவும் நோய்களால் உற்பத்தித் திறனிலும் மருத்துவச் செலவுகளிலும் சுமார் 9 லட்சம் கோடி ரூபாயை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் இழக்கின்றன.
உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் 40 சதவீதம் பேர் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர், இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 125,000 குழந்தைகள் உயிரிழக்கின்றன.
உணவு மூலம் பரவும் நோய்கள் சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளையும் பாதிக்கின்றன.
அதாவது நமது உணவு, ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையே இத்தகைய தொடர்பு உள்ளது.
அப்படிப்பட்ட உணவு விஷயத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? சமையலறையில் நாம் என்ன செய்ய வேண்டும்? காய்கறிகளையும் இறைச்சியையும் எந்தளவுக்கு நன்றாகச் சமைக்க வேண்டும்?
சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்
பட மூலாதாரம், Getty Images
சமையலறையில் பாக்டீரியாக்கள் மிக வேகமாகப் பரவுகின்றன.
இவை நமது கைகள், காய்கறி நறுக்கும் பலகைகள் மற்றும் கரண்டிகளுக்கு மட்டுமல்லாமல், உணவுக்கும் பரவக்கூடும்.
உணவைத் தொடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறைக்குச் சென்ற பிறகு அல்லது செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு, குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரால் உங்கள் கைகளைக் கழுவுங்கள்.
ஒரு உணவைச் சமைத்த பிறகு, மற்றொரு உணவைத் தயாரிப்பதற்கு முன்பு பாத்திரங்கள், கிண்ணங்கள் மற்றும் சமையல் மேடைகளைச் சூடான நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவும்.
சமையலறையைச் சுத்தம் செய்ய முடிந்தவரை காகிதத் துண்டுகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் துணியாலான துண்டுகளைப் பயன்படுத்தினால், அவற்றை அடிக்கடி வெந்நீரில் துவைக்கவும்.
பச்சை இறைச்சி இருந்த தட்டில் மற்ற உணவுகளை பரிமாறக்கூடாது
பட மூலாதாரம், Getty Images
- பழங்கள் மற்றும் காய்கறிகளை ஓடும் நீருக்கு அடியில் நன்கு கழுவவும். தோல் நீக்கப்பட்டு உண்ணப்படும் பழங்களுக்கும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
- கடினமான காய்கறிகளை நீரின் அடியில் வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.
- தகரப் பெட்டிகள் அல்லது டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் மூடிகளையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
- பாக்டீரியாக்கள் ஒரு உணவிலிருந்து மற்றொரு உணவிற்குப் பரவாமல் தடுப்பது முக்கியம்.
- சமைக்காத பச்சை இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளில் இருந்து மற்ற உணவுகளுக்கு பாக்டீரியாக்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை உண்ணத் தயாராக இருக்கும் உணவுகளிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
- சந்தையில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது, அவற்றை பைகளில் போடும்போது மற்றும் வீட்டிற்குக் கொண்டு வந்த பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, பச்சை இறைச்சி மற்றும் முட்டைகளை மற்ற பொருட்களிலிருந்து தனியாக வைக்கவும்.
- காய்கறிகளை நறுக்குவதற்கு ஒன்று மற்றும் பச்சை இறைச்சிக்கு மற்றொன்று என வெவ்வேறு தட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது.
- சமைத்த உணவுகளை ஒருபோதும் பச்சை இறைச்சி இருந்த அதே தட்டில் வைத்துப் பரிமாறக்கூடாது.
- இறைச்சியை ஊறவைக்கப் பயன்படுத்திய மசாலா கலவைகளை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
இறைச்சி வெந்துவிட்டதா என்று உறுதி செய்வது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
இறைச்சி, முட்டைகள் போன்றவை முழுமையாகச் சமைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க உணவு வெப்பமானி பயனுள்ளதாக இருக்கும். சமைத்த பொருட்களின் உட்புற வெப்பநிலையை அளவிட இதைப் பயன்படுத்தலாம்.
- இறைச்சியின் நிறம் மாறுவதை வைத்து மட்டும் அது வெந்துவிட்டதாக தீர்மானிக்கக் கூடாது, மாறாக வெப்பமானியைப் பயன்படுத்தி சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.
- இறைச்சி முழுமையாகச் சமைக்கப்பட வேண்டுமானால் அது 71°C வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும்.
- முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு நன்கு கெட்டியாகும் வரை சமைக்கவும். முட்டை உணவுகளும் 71°C வெப்பநிலைக்குச் சூடாக்கப்பட வேண்டும்.
- மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் போது, உணவை மூடி வைத்து அவ்வப்போது கிளறவும். சமைத்த பிறகு, சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெப்பமானி கொண்டு சோதிக்கவும்.
- மீதமுள்ள சூப்கள் மற்றும் சாஸ்களை மீண்டும் சூடாக்கும்போது, அவை நன்றாகக் கொதிப்பதை உறுதி செய்யவும்.
உணவில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல, உணவின் உட்புறம் வரை போதுமான அளவு அதிக வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



