Home தேசிய national tamil வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை

வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை

10
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நீரும் ஒரு ஆயுதமாகிறதா?

பட மூலாதாரம், BBC and Getty Images

குறைந்து வரும் இயற்கை வளங்களின் பின்னணியில் நடக்கும் மோதல்களைச் சித்தரிக்கும் ஏராளமான கற்பனை நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் காட்சிகள், குறிப்பாக அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் எதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை.

எதிர்பார்த்தபடியே, இந்தப் போர் ஓரளவு எண்ணெயைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது; இது இப்பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய ஒரு வளமாகும். ஆனால், இந்தப் போர் விரிவடைந்து வளைகுடா நாடுகளையும் உள்ளிழுக்கும்போது, மற்றொரு பாதிக்கப்படக்கூடிய வளமான ‘நீர்’ ஒரு சாத்தியமான மோதல் காரணியாக மாறியுள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகளாவிய புதுப்பிக்கத்தக்க நன்னீர் வளத்தில் வளைகுடா நாடுகள் வெறும் 2% மட்டுமே கொண்டுள்ளன என்பதால் கடல்நீரை நன்னீராக்கும் முறையையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக 1950-களில் இருந்து எண்ணெய் தொழிலின் வளர்ச்சி இப்பிராந்தியத்திற்குக் கொடுத்த அழுத்தங்கள் மற்றும் அதன் வரையறுக்கப்பட்ட நீர் விநியோகத்தில் இது ஏற்படுத்திய தாக்கங்கள் இதற்கு முக்கியக் காரணமாகும். சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தின்படி (French Institute of International Relations), குவைத்தின் 90% நீர் கடல்நீரை நன்னீராக்குவதன் மூலம் கிடைக்கிறது; அதோடு ஓமனில் 86%, செளதி அரேபியாவில் 70% மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் 42% நீர் இவ்வாறே கிடைக்கிறது.

“கடந்த 2021ஆம் ஆண்டில், வளைகுடாவில் நீரை எடுக்கும் கடல்நீர் நன்னீராக்கும் ஆலைகளின் மொத்த உற்பத்தி அளவு ஒரு நாளைக்கு 20 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமாக இருந்தது – இது ஒரு நாளைக்கு 8,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்குச் சமம்” என்று ஓமனில் உள்ள கடல் அறிவியல், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மையத்தைச் சேர்ந்த வில் லெ குவெஸ்னே, பிபிசி உலக சேவையின் ‘நியூஸ்டே’ நிகழ்ச்சியில் கூறினார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நீரும் ஒரு ஆயுதமாகிறதா?

பட மூலாதாரம், Fadel Senna / AFP via Getty Images

வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் இருப்பு இப்பிராந்தியம் முழுவதும் கடுமையாகக் குறைந்துவிட்டதால், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியும் வளைகுடாவில் நன்னீராக்கப்பட்ட நீரையே சார்ந்துள்ளன.

இந்தச் சார்புத்தன்மை, நீர் உள்கட்டமைப்பை உத்தி ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாற்றுகிறது; இதை அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளுமே பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இரானின் அணுகுமுறையை ஆய்வாளர்கள் “கிடைமட்ட விரிவாக்கம்” என்று விவரிக்கிறார்கள்; அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நேரடியாக எதிர்கொள்வதைவிட மோதலின் எல்லையை விரிவுபடுத்துவது. நீர் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பது பழிவாங்கல் என்றே கட்டமைக்கப்பட்டாலும்கூட இரானின் வியூகத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது.

“வளைகுடா அரசுகள் தங்கள் நீர் உள்கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவதாக நம்பினால், அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது” என்று கத்தாரில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஓவன் ஜோன்ஸ் கூறுகிறார். இரானின் தாக்குதல்கள் “பீதியை உருவாக்குவதை” நோக்கமாகக் கொண்டுள்ளன, இது “தங்குவதா அல்லது வெளியேறுவதா” என பொதுமக்களைத் தீர்மானிக்க வைக்கிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நீரும் ஒரு ஆயுதமாகிறதா?

பட மூலாதாரம், Fadel Senna / AFP via Getty Images

கடல்நீரை நன்னீராக்கும் ஆலை மீது இரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தியதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது; அதே நேரத்தில் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் உள்ள நீர் வசதியை முன்னதாக அமெரிக்கா நடத்திய தாக்குதல் சேதப்படுத்தியதாக இரான் கூறுகிறது.

துபையின் ஜபெல் அலி துறைமுகம் மீதான இரானிய தாக்குதல்கள் உலகின் மிகப்பெரிய நன்னீராக்கும் ஆலைகளில் ஒன்றுக்கு மிக அருகில் விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா எஃப்1 சுதந்திர நீர் மற்றும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்கிடமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது – இது இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குவைத்தின் தோஹா மேற்கு ஆலையும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் இது அருகில் உள்ள துறைமுகத் தாக்குதல்கள் அல்லது டிரோன் தாக்குதல்களில் இருந்து விழுந்த சிதைவுகள் மூலம் மறைமுகமாக நடந்துள்ளது.

“[இரானை பொறுத்தவரை] இது ஒரு சமிக்ஞை விளையாட்டு” என்று ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் காவே மதனி பிபிசி உலக சேவையிடம் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

இரான் எந்தவொரு செயலையும் தனக்கு எதிரான தாக்குதல்களுக்கு “நியாயமான” பதில் என்று கட்டமைத்துள்ளது – குறிப்பாக கெஷ்ம் தீவு மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே பஹ்ரைன் தாக்குதல்களை அது முன்வைக்கிறது.

முக்கியமான நீர் உள்கட்டமைப்பின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரானின் திறனையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக அது எவ்வளவு தூரம் செல்லத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

ஆனால், வளைகுடாவின் விலைமதிப்பற்ற நீர் விநியோகத்தின் மீது இன்னும் தொடர்ச்சியான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்துவோம் என்ற அச்சுறுத்தலிலேயே அதன் வலிமை உள்ளது; இது இரான் எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன செய்யும் என்பதற்கான அறிகுறி அல்ல என்று மதனி குறிப்பிடுகிறார். “நீர் [வரலாற்று ரீதியாக] எப்போதும் அச்சுறுத்துவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறுகிறார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நீரும் ஒரு ஆயுதமாகிறதா?

பட மூலாதாரம், EPA

வளைகுடாவில் உள்ள நன்னீராக்கும் ஆலைகள் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதல்களைத் தொடுப்பதில் தெஹ்ரான் காட்டும் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டிற்கும், தனது சொந்தத் தாக்குதல்களைப் பழிவாங்கல் என்று வேண்டுமென்றே கட்டமைப்பதற்கும் ஜெனீவா உடன்படிக்கையின் 45வது பிரிவு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்று மதனி சுட்டிக்காட்டுகிறார்.

“பொதுமக்கள் உள்கட்டமைப்பைத் தாக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது – ஆனால் [இரான்] அதைத் தொடங்கவில்லை. அதுதான் அப்பாஸ் அராக்சியின் [சமூக ஊடகப் பதிவில்] இருந்தது” என்று இரானிய வெளியுறவு அமைச்சரின் கருத்துகளை மதனி மேற்கோள் காட்டுகிறார்.

கெஷ்ம் தீவு மீதான தாக்குதலை “கடுமையான விளைவுகளைக் கொண்ட ஓர் ஆபத்தான நடவடிக்கை… பல கிராமங்களுக்கான நீர் விநியோகத்தைக் குறைத்திருக்கும் ஓர் அப்பட்டமான வெறிகொண்ட குற்றம்” என்று அராக்சி அழைத்தார்.

இது தொடர்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தச் சம்பவங்கள் நீர் பாதுகாப்பைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் அணி சேர்ந்துள்ள நாடுகளின் பலவீனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரானும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது, இருப்பினும் அதன் நீர் விநியோகம் அதன் வளைகுடா நாடுகளைவிடப் பன்முகத்தன்மை கொண்டது, எனவே கடல்நீர் நன்னீராக்கலை அது குறைவாகவே சார்ந்துள்ளது என்று மதனி குறிப்பிடுகிறார்.

இருப்பினும், வளைகுடாவின் முக்கியமான நீர் உள்கட்டமைப்பின் மீது இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அதன் சொந்த நீர் உள்கட்டமைப்பின் மீது பழிவாங்கும் தாக்குதல்களை விளைவிக்கக்கூடும் என்று மற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரான் சில காலமாகவே “முழுமையான நீர் பற்றாக்குறை” நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குறைந்த மழைப்பொழிவு, “தலைநகரின் நூற்றாண்டு கால நீர் உள்கட்டமைப்பில் ஏற்படும் நீர் கசிவுகள்” மற்றும் கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போர் ஆகிய அனைத்தும் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்தன என்று எரிசக்தி அமைச்சர் அப்பாஸ் அலியாபாடி தெரிவித்தார்.

நாட்டின் தேசிய காலநிலை மற்றும் வறட்சி நெருக்கடி மேலாண்மை மையத்தின் அஹ்மத் வசிஃபெஹ் கருத்துப்படி, நாடு முழுவதும் உள்ள அணைகள் ஏற்கெனவே “கவலைக்குரிய நிலையில்” உள்ளன. முக்கிய நிலத்தடி நீர் அடுக்குகள் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளன, சாயந்தே ரூட் போன்ற ஆறுகளில் நீர் வரத்து குறைந்துவிட்டன மற்றும் உருமியா ஏரி பெரிதும் சுருங்கிவிட்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நீரும் ஒரு ஆயுதமாகிறதா?

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஃப்ரெட் பியர்ஸ் கூற்றுப்படி, பல தசாப்த கால அணை கட்டுதல், நீர்-தேவைப்படும் விவசாயம், தவறான மேலாண்மை ஆகியவை நிலைமையை மோசமாக்கியுள்ளன. சில பகுதிகளில், நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் கடுமையான நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான் நகரம் ஒரு நாள் நீர் பங்கீடு அல்லது பகுதியளவு வெளியேற்றத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது ஒரு சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்; இது இரானின் உள் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீள்திறனைப் பாதிக்கிறது – இவை அனைத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான வாரக்கணக்கான தீவிர மோதலால் மோசமடைந்துள்ளன.

போருக்கு முன்னரே, நீர் பற்றாக்குறை இரானில் உள்நாட்டு அமைதியின்மைக்குக் காரணமாக இருந்தது; குசெஸ்தான், இஸ்ஃபஹான் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டங்கள், விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் சூழல் குறித்த பரந்த குறைகளுடன் இணைந்தன.

பிரச்னைகளைப் பேசுவோம்

இரானின் நீர் சவால்கள் பிராந்திய பதற்றங்களுடனும் குறுக்கிடுகின்றன. ஹெல்மண்ட் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தானுடனும், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் தொடர்பாக துருக்கியுடனும் மற்றும் பகிரப்பட்ட நீர்வழிகள் தொடர்பாக இராக்குடனும் அது நீண்டகாலப் பிணக்குகளைக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கின் நீர் அமைப்புகள் எவ்வளவு பலவீனமடைந்துள்ளன என்பதையும், அவை மோதலின் திசையையும் காலத்தையும் எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் இந்தப் போர் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு போன்ற காரணிகளுடன் சுற்றுச்சூழல் அழுத்தங்களும் இப்போது மோதல் தீவிரமடைவதற்கான அபாயங்களை அதிகரிக்கின்றன.

இப்பகுதியில் எதிர்கால மோதல்கள் குழாய்கள் மற்றும் டேங்கர்களால் மட்டுமல்லாமல், ஆறுகள், நிலத்தடி நீர் அடுக்குகள் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் ஆலைகளாலும் தீர்மானிக்கப்படலாம். இந்தப் போரிலும் அதற்கு அப்பாலும், நீர் உண்மையில் எண்ணெயைவிட முக்கியமானது என நிரூபிக்கப்படலாம்.

கூடுதல் தகவல்கள் – பிபிசி பாரசீக சேவை

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU