Home தேசிய national tamil “நிலப்பரப்பில் கப்பல்கள்” – மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர்

“நிலப்பரப்பில் கப்பல்கள்” – மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர்

5
0

SOURCE :- BBC NEWS

ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்

பட மூலாதாரம், Windward

நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் வரைபடத்தில் தவறான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விண்ட்வார்டில் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளராக இருக்கும் மிஷெல் வைஸ் போக்மேன், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அருகே இருந்த வணிகக் கப்பல்களின் நேரடி இருப்பிடங்களைச் சரிபார்க்கும்போது இதைக் கவனித்தார்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் அருகிலுள்ள கடல்வழிகளின் வரைபடத்தைப் பார்க்கும்போது சுமார் 35 அசாதாரண தொகுப்புகளை அவர் கண்டார். வரைபடத்தில், இந்தத் தொகுப்புகள் பல கப்பல் சின்னங்களால் ஆன வட்டங்களாகத் தோன்றும். ஒவ்வொரு குறியீடும் ஓர் உண்மையான கப்பலைக் குறிக்கும்.

ஆனால், கப்பல்கள் பொதுவாக இதுபோன்ற சரியான வட்டங்களில் கூடுவதில்லை. இந்தத் தொகுப்புகளில் சில நிலத்தில்கூடத் தோன்றும். இது கப்பல்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது. இதன் பொருள் அவற்றின் நிலைகளைக் காட்டும் ஜிபிஎஸ் சிக்னல்கள் இடையூறு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான இடங்களை மறைக்கின்றன.

நவீன மோதல்களில், போர்கள் துப்பாக்கிகள், குண்டுகளால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. மின்னணு சிக்னல்களும் இந்த மோதலில் பங்காற்றுகின்றன. ஜிபிஎஸ் ஜாமிங் எனப்படும் ஒரு நுட்பம் வழிசெலுத்தல் சிக்னல்களில் தலையிடுகிறது. இது தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைத்து ஆபத்தான விபத்துகளுக்குக்கூட வழிவகுக்கும்.

சமீபத்திய ஆண்டுகளில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பயன்படுத்தும் விமானம் உள்பட, ஐரோப்பாவில் உள்ள விமானங்களையும் இந்த ஜிபிஎஸ் ஜாமிங் பாதித்துள்ளது. யுக்ரேனில் நடக்கும் போரிலும் இது வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதால், இந்த வகையான மின்னணு போர் மேலும் பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல்களை இப்போது பாதிக்கும் சிக்னல் குறுக்கீடு பிரச்னையை மிஷெல் வைஸ் போக்மேன் காண்பது இது முதல் முறையல்ல. கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) செயல்பாட்டை ஜிபிஎஸ் ஜாமிங் பாதிக்கிறது என அவர் முன்பு கவனித்துள்ளார்.

இஸ்ரேல், இரான் இடையிலான குறுகிய மோதலின்போது கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் இதே பிரச்னை ஏற்பட்டது. பால்டிக் கடலிலுள்ள கப்பல்களும் இதேபோன்ற மின்னணு குறுக்கீட்டை எதிர்கொண்டன. ஆனால், இந்த முறை, நிலைமை மிகவும் தீவிரமானது என்று போக்மேன் கூறுகிறார்.

இது கப்பல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்குப் பெரிய ஆபத்தை உருவாக்குவதாக அவர் எச்சரிக்கிறார். பாகிஸ்தான் தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகமும், பிராந்தியத்தில் உள்ள கப்பல்களை சிக்னல் குறுக்கீடு பாதிப்பதாக எச்சரித்துள்ளது.

கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க ஏ.ஐ.எஸ்-ஐ ஓரளவு பயன்படுத்துகின்றது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள், அதிகளவு எண்ணெயை சுமந்து செல்லக் கூடியவை. அவற்றால் விரைவாகத் திரும்பவோ, நிறத்தவோ முடியாது. திசையை மாற்றிய பிறகு, அவை தமது பாதையை முழுமையாக சரிசெய்யாமல் பல கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடும்.

ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

கப்பல் குழுவினரால் பிற கப்பல்கள் எங்கு அமைந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண முடியாவிட்டால், குறிப்பாக இரவில் அல்லது மோசமான வானிலையில் இது மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் உட்வோர்ட் விளக்குவது போல, ஒரு கப்பலைச் சுற்றியுள்ள பிற கப்பல்கள் எங்கு செல்கின்றன என்பதை அறியாமல் இருப்பதே முக்கியமான ஆபத்து.

ஜிபிஎஸ் ஜாமிங்குக்கு யார் காரணம் என்பது குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இருப்பினும், கப்பல்களின் வழிசெலுத்தல் அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கு இரான் காரணமாக இருக்கலாம் என்று பல ராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கக்கூடும் என்று இரான் எச்சரித்துள்ளது.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் விடிங்டனின் கூற்றுப்படி, இரான் பயன்படுத்தும் ஜிபிஎஸ் ஜாமிங் கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது ரஷ்யா அல்லது சீனாவில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.

மேலும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் தங்கள் ராணுவ தளங்கள், வீரர்கள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் வழிசெலுத்தலை நம்பியிருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து பாதுகாக்க இதேபோன்ற ஜாமிங் அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்துக் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட ராணுவ அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை பிபிசியிடம் கூறியது.

ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்

பட மூலாதாரம், Zephr.xyz

இதற்கிடையில், Zephr.xyz தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷான் கோர்மன், யுக்ரேன் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் ஜாமிங் குறித்து ஆய்வு செய்து வருகிறார். வழக்கமாக, விமானங்களில் இருந்து வரும் தரவுகள் ஜிபிஎஸ் ஜாமிங்கை கண்டறிய உதவுகின்றன. ஆனால், இரான் மீதுள்ள வான்வெளி தற்போது மூடப்பட்டிருப்பதால், கோர்மன் வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

சமீபத்தில், இரானில் ஜாமிங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிய ஒரு செயற்கைக்கோளில் இருந்து ரேடார் தரவுகளைப் பயன்படுத்தினார். பிபிசி இந்தத் தரவை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஜாமிங் சாதனங்கள் ரேடார் சிக்னல்களில் சிறிய இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோர்மன் கூறுகிறார். இந்த சிக்னல்களை ஆராய்வதன் மூலம், நாடு முழுவதும் ஜிபிஎஸ் ஜாமிங் ஏற்படக்கூடிய இடங்களை அவரால் அடையாளம் காண முடியும்.

கடந்த 2024ஆம் ஆண்டில், ஷான் கோர்மனும் அவரது குழுவினரும் யுக்ரேனில் ட்ரோன்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் ஜாமிங் பற்றி ஆய்வு செய்தனர். அவர்கள் ட்ரோன்களுடன் ஸ்மார்ட்போன்களை இணைத்து சுற்றியும் பறக்கவிட்டனர். அவை பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள் ஜிபிஎஸ் சிக்னல்களை பதிவு செய்தன. இது ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்னல் குறுக்கீட்டைக் கண்டறிய உதவியது. பல ஸ்மார்ட்போன்களில் இருந்து ஜிபிஎஸ் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜாமிங் சாதனத்தின் சரியான இடத்தை அவர்களால் மதிப்பிட முடிந்தது.

ஜாமிங் எவ்வளவு வலிமையானது மற்றும் பரவலாக இருந்தது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாக கோர்மன் கூறுகிறார்.

ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்

பட மூலாதாரம், Advanced Navigation

இன்று, ஜிபிஎஸ் ஜாமிங்கில் இருந்து அமைப்புகளைப் பாதுகாக்கப் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. சில அமைப்புகள் தானாகவே குறுக்கீட்டைக் கண்டறிந்து பாதிக்கப்படாத மற்றொரு சிக்னல் அதிர்வெண்ணுக்கு மாறலாம்.

உதாரணமாக, ரேதியோன் யுகே என்ற பாதுகாப்பு நிறுவனம் லேண்ட்ஷீல்ட் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனம் மிகச் சிறியது. இதை கார்கள், விமானம் போன்ற பல வகையான வாகனங்களில் நிறுவ முடியும். இந்த “ஜாமிங்-எதிர்ப்பு ஆன்டெனா அமைப்பு” ஜாமிங்கின்போதுகூட வழிசெலுத்தலை வேலை செய்ய வைக்கப் பல சிக்னல்களை கொண்ட சேனல்களை பயன்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலெக்ஸ் ரோஸ்-பார்ஃபிட்டின் கூற்றுப்படி, ஜாமிங் எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது.

மற்றொரு நிறுவனமான அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஒரு வித்தியாசமான தீர்வை உருவாக்கியுள்ளது. ஜிபிஎஸ்-ஐ மட்டும் நம்புவதற்குப் பதிலாக, அவர்களின் அமைப்பினால் கைரோஸ்கோப்புகள் மற்றும் முடுக்கமானிகள் (accelerometers) போன்ற சென்சார்களை பயன்படுத்தி கப்பலின் நிலையைக் கண்டறிய முடியும். இவை ஸ்மார்ட்போன்களில் இயக்கத்தைக் கண்டறிய அல்லது தொலைபேசி பக்கவாட்டில் திருப்பப்படும்போது பயன்படுத்தப்படும் அதே வகையான சென்சார்கள். இது ஜிபிஎஸ் சிக்னல்கள் தடைபட்டாலும் வழிசெலுத்தலைத் தொடர அனுமதிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அட்வான்ஸ்ட் நேவிகேஷனின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ஷா, ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யாதபோதும் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்கிறார்.

சுற்றியுள்ள பகுதியின் படங்களை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டு இருப்பிடத்தை அடையாளம் காண்பது, ஒருமுறை. கணினி மென்பொருளைப் பயன்படுத்தி வானத்திலுள்ள நட்சத்திரங்களின் நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, மற்றொரு முறை. இதற்குப் பயன்படுத்தப்படும் பட செயலாக்க தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது எனக் கூறுகிறார் ஷா. இருப்பினும், நட்சத்திர-மேப்பிங் மலிவானது என்றாலும் மிகவும் துல்லியமானது இல்லை. இதன் காரணமாக, இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான பல்வேறு முறைகளை ஒன்றாகப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

சிறந்த பாதுகாப்பு இல்லாமல், ஜிபிஎஸ் தாக்கப்படுவது எளிது. ஜிபிஎஸ் பயன்படுத்தும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இது அவற்றைத் தடுப்பதை அல்லது இடையூறு விளைவிப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், ராணுவ படைகள், எம்-கோட் எனப்படும் தனித்துவமான, பாதுகாப்பான ஜிபிஎஸ் பதிப்பைப் பயன்படுத்துகின்றன. இது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதால் ஜாம் செய்வது மிகவும் கடினம்.

இரானுக்கு அருகிலுள்ள ஜிபிஎஸ் ஜாமிங் கடலில் விபத்துகளின் அபாயத்தை அதிகரிப்பதாக ராயல் நேவிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ராம்சே ஃபராகர் எச்சரிக்கிறார். ஜாமிங் மிகவும் பொதுவானதாகி வருவதால், எதிர்காலத்தில் புதிய, மிகவும் பாதுகாப்பான வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.

இந்தச் சூழ்நிலையை அவர் வை-ஃபை இணைப்பின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகிறார். அப்போது நெட்வொர்க்குகள் திறக்கப்பட்டிருந்தன. யார் வேண்டுமானாலும் வை-ஃபை இணைப்பை அணுகும் விதத்தில் இருந்தன. பின்னர் அவை கடவுச்சொற்களால் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், எதிர்காலத்தில் மக்கள் இன்றைய திறந்த ஜி.என்.எஸ்.எஸ் சிக்னல்களை திரும்பிப் பார்த்து, வலுவான பாதுகாப்பின்றி அவை ஏன் பயன்படுத்தப்பட்டன என்று சிந்திக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU