Home தேசிய national tamil தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

4
0

SOURCE :- BBC NEWS

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், Getty Images

“புதிய கட்சிகளுக்கு திமுக போட்டியிட்ட இடங்களை தானமாக வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டணி நலன் கருதி கூட்டணி கட்சிகளும் சில இடங்களை விட்டுத் தர வேண்டும்,”

திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தங்களிடம் இவ்வாறு கூறியதாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக-முஸ்லிம் லீக் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

“நீங்கள் 3 இடங்களில் போட்டியிட்டீர்கள், தொகுதியை குறைக்கச் சொல்லி கேட்கவில்லை. ஆனால் ஏதாவது ஒரு தொகுதியை தானமாக கொடுத்தால் நன்றாக இருக்கும். கூட்டணி கட்சிகளில் உள்ளவர்களிடம் தொகுதிகளைக் குறைக்குமாறு கேட்கிறோம், அந்த அடிப்படையிலே உங்களிடமும் கேட்கிறோம்.’ என்று திமுக தரப்பில் கூறினார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், ANI

மறுநாள் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “கடந்த முறை 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றோம். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்திலே போட்டியிடுவோம். 5 இடங்களைக் கேட்டுள்ளோம். இது முதல்கட்ட பேச்சுவார்த்தை தான். அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் எனக் கூறியிருக்கிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இருந்தன. வேறு சில சிறிய கட்சிகளும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஆகியவை இணைந்துள்ளன.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் கூட்டணி கட்சிகள், கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் இடங்களைக் கேட்பதாகவே தெரிவித்து வருகின்றன.

“விரைவில் உடன்படிக்கை எட்டப்படும்” – காங்கிரஸ்

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், X/Gopanna

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி தான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்திருந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, “காங்கிரஸ் தலைமையின் முடிவு திமுக தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாகவே உள்ளது. விரைவில் உடன்படிக்கை எட்டப்படும்,” எனத் தெரிவித்தார்.

“எங்களுக்கான நியாயம் உள்ளது” – விசிக

கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான நியாயம் விசிகவுக்கு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தேமுதிகவின் வருகை கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது உண்மை தான். ஆனால் விசிக அல்லது இடதுசாரி கட்சிகள் நீண்ட காலமாக ஒரே கூட்டணியில் உள்ளன. இரு தரப்புக்கு இடையே பேரம் நடத்தவில்லை. எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சந்தை அணுகுமுறை இல்லாமல் கொள்கை அணுகுமுறையையே கடைபிடிக்க விரும்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக 4 இடங்களில் வென்றிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு வென்றிருந்தது.

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், X/Sinthanai Selvan

“கடந்த சில வருடங்களில் கட்டமைப்பு ரீதியாக வளர்ந்துள்ளோம், இதை திமுகவும் ஒப்புக்கொள்ளும். இப்போது ஒரு மையநீரோட்ட கட்சியாக வளர்ந்துள்ளோம். திமுக தலைமையும் விசிகவின் இடத்தை புரிந்துகொண்டுள்ளது. எங்களுடைய வெற்றி விகிதமும் அதிகமாக உள்ளது. அதனால் நிச்சயம் கடந்த முறை போட்டியிட்டதைவிட இந்த முறை கூடுதலான இடங்களைக் கேட்போம்.” என்றும் குறிப்பிட்டார்.

புதிய கட்சிகளைச் சேர்க்க வேண்டிய தேவையை தவிர்த்துவிட முடியாது எனக் கூறும் சிந்தனை செல்வன், “அதே வேளையில் எங்களுக்கான நியாயங்களும் உள்ளன. அதற்கேற்ப இடங்களைக் கேட்டுப் பெறுவோம். அதற்கான பக்குவப்பட்ட தலைமை இரண்டு கட்சிகளிலும் உள்ளது.” என்றும் தெரிவித்தார்.

“இரட்டை இலக்கத்தில் போட்டி” – சிபிஎம்

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், X/Shanmugam P

இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம் 2 இடங்களில் வென்றிருந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய சண்முகம், “நாங்கள் அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறோம். இரட்டை இலக்க இடங்களில் போட்டியிடுவது தான் கட்சியின் நிலைப்பாடு என முன்னர் அறிவித்திருந்தோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் அதையே வலியுறுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.

“மதிமுக முன்வைத்த 3 கோரிக்கைகள்”

பேச்சுவார்த்தையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழு மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறுகிறார் அக்கட்சியின் பொருளாளர் செந்தில் அதிபன்.

கடந்த முறை 6 இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக அதில் 4 இடங்களில் வென்றிருந்தது.

“மதிமுகவும் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. கடந்த முறை போட்டியிட இடங்களை விட கூடுதலான இடங்களைக் கேட்டுள்ளோம். அதோடு ஒரு மாநிலங்களவை இடமும், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்,” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

“திமுக குறைவான இடங்களில் போட்டியிடலாம்”

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

“முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை மூன்று இடங்களில் தோல்வியடைந்தது. அதோடு திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் உள்ளது, கூடுதலாக தமிமுன் அன்சாரியும் இருக்கிறார். தற்போது எஸ்டிபிஐ கட்சியும் உள்ளது. எனவே சில இடங்களைப் பிரித்து இதர இஸ்லாமிய கட்சிகளுக்கு வழங்கலாம் என திமுக நினைத்திருக்கலாம். ஆனால் விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை,” என்கிறார் பிரியன்.

“திமுக கூட்டணியில் கடந்த முறையே இடங்கள் பங்கீடு என்பது சவாலானதாக இருந்தது. தற்போது புதிதாக மேலும் சில கட்சிகள் இணைந்திருப்பது கூடுதல் சவாலானதாகவே இருக்கும். திமுக குறைவான இடங்களில் போட்டியிட தயாராக என்றாலும் கூட்டணி கட்சிகள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பது கேள்விக்குறி தான்.” என்கிறார் அவர்.

“இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?”

புதிய கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என்கிற இரட்டைச் சவாலை திமுக சந்தித்து வருவதாகக் கூறுகிறார் பிரியன்.

“கடந்த தேர்தலில் பெற்ற வெற்றி சதவிகிதம் (ஸ்ட்ரைக் ரேட்) ஒரு கருதுகோலாக இருந்தாலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் தற்போது சூழல் மாறியுள்ளது. போட்டி கடுமையாக உள்ள, குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள இடங்களைக் குறிவைத்து தான் பல கட்சிகளை கூட்டணியில் திமுக இணைத்து வருகிறது. இது சிறிய கட்சிகளுக்கு பேச்சுவார்த்தையில் வலு சேர்க்கிறது.”

“இதனால் நீண்ட காலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கின்ற போது திமுகவால் அதனை தவிர்க்க முடியாது. சிறிய கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கூறலாம். எனவே புதிய கட்சிகளுக்கு இடம் கொடுத்து கூட்டணி கட்சிகளுக்கும் கூடுதல் இடம் கொடுத்தால் திமுக இம்முறை 18 இடங்கள் வரை குறைவாகவே போட்டியிடும் சூழல் உருவாகலாம்.” எனத் தெரிவித்தார்.

“கூட்டணியின் வெற்றி முக்கியம்” – திமுக

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், Constantine Ravindran

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்புக்கும் இணக்கமான சூழல் எட்டப்படும் என்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

“திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அப்படியே இருக்கின்றன. புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணைந்து வருகின்றன. இந்தச் சூழலில் கட்சியின் வெற்றி என்பதை விட கூட்டணியின் வெற்றி என்பதும் முக்கியமானது. எனவே கூட்டணியின் வெற்றியைக் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்,” என்றார்.

கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிடும் தங்களின் விருப்பத்தை வெளிப்படையாக கூறி வருகின்றன. அதைப் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஸ்ட்ரைக் ரேட் என்பது இரண்டாம் பட்சம் தான். நீண்ட காலமாக கூட்டணியில் தொடரும் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்பதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் புதிய கட்சிகள் இணைவதால், திமுக கூடுதல் இடங்களை வழங்குவதற்கு தயாரா என்பதை விடவும் அது சாத்தியமா என்பதைப் பார்க்க வேண்டும். வெற்றி பெறும் சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான தேவையும் இருக்கிறது. தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும்.” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU