SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
5 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், ‘ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி’ எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது.
ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை
பட மூலாதாரம், Getty Images
ஹைப்பர்பேரிக் என்ற சொல், சாதாரண அளவை விட அதிகமான என்ற பொருள் கொண்ட ‘ஹைப்பர்’ மற்றும் அழுத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் ‘பேரிக்’ ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.
ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, சாதாரண அளவை விட அதிகப்படியான ஆக்சிஜனை வழங்கி, உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும்.
அறிவியல் ரீதியாக, நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இதில் சிசிச்சை பெறும் நபருக்கு 100% சுத்தமான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
இந்த ஆக்சிஜன் ஒரு சிறப்பு அழுத்த கேபினில் வழங்கப்படுகிறது, அங்கு காற்றின் அழுத்தம் சாதாரண நிலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.
அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிசிச்சை பெறும் நபரின் நுரையீரல்கள் சாதாரண நிலையை விட மிக அதிகமான ஆக்சிஜனை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
இந்தக் கூடுதல் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக உடலில் காயம், புண் அல்லது தொற்று உள்ள பகுதிகளை சென்றடைகிறது.
” திசுக்கள் அல்லது காயமடைந்த பகுதிகள் அதிக ஆக்சிஜன் பெறுவதால் வேகமாக குணமடைகின்றன. இதன் மூலம் உடலில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை மேலும் விரைவாகிறது.” என்கிறார் சௌரப் சிங்.
மேற்கத்திய நாடுகளில் இது ஆரம்பத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கே பயன்படுத்தப்பட்டது.
“ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்பட்டு வருகிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்த இதன் பயன்பாடு, தற்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவர்களும் நோயாளிகளும் இந்தத் தெரபியைத் தேர்வு செய்யும் அளவில் மேம்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் சௌரப் சிங்.
பட மூலாதாரம், ANI
எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
டாக்டர் சௌரப்பின் கூற்றுப்படி, இந்தத் தெரபி மிகவும் நல்ல பலன்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக செல்கள் வேகமாக உருவாகி அழியும் பகுதிகளில், குணமடைய அதிக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் இந்த சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
“பார்வை இழப்பு, கதிர்வீச்சினால் ஏற்படும் திசு சேதம், கடுமையான ரத்த சோகை, தோல் ஒட்டுதல் அதாவது ‘ஸ்கின் கிராஃப்டிங்’ எனப்படும் உடலின் ஒரு பகுதியில் உள்ள தோலை நீக்கிவிட்டு மற்றொரு பகுதியின் தோலைப் பொருத்தும் முறை, பலத்த காயம், எலும்பு அல்லது தோலில் ஏற்படும் தீவிரத் தொற்றுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்” என்று கூறுகிறார்.
“அதேபோல், தீக்காயங்களால் தோல் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ‘ஆஸ்டியோமைலிடிஸ்’ எனப்படும் எலும்பில் ஏற்படும் தீவிரத் தொற்று, கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும் பிரச்னைக்கும் தற்போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது,” என்று டாக்டர் சௌரப் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
இந்தியாவில் இந்த சிகிச்சையை வழங்கும் மையங்கள் அல்லது நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அரசு மையங்களில் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்தில் ஒரு அமர்வுக்கு நோயாளியிடமிருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.” என்கிறார் சௌரப் சிங்.
அதே நேரத்தில், தனியார் மையங்களில் ஒரு அமர்வுக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது உங்கள் காயம் அல்லது உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தது. சராசரியாக ஒவ்வொரு அமர்வும் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும்.

அழகுக்கலையில் பயன்பாடு
வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காகவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காகவும் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி பயன்படுத்தப்படுவதாக இணையதளங்களில் பார்க்கமுடிகிறது.
பல அழகு நிலையங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த சிகிச்சை உண்மையிலேயே பாதுகாப்பானதா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சௌரப், “உண்மையில், இந்தத் தெரபியை எடுத்துக்கொள்வதால் சருமம் இளமையாக மாறும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் முகம் பொலிவு பெற்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவை தனிப்பட்ட அனுபவங்களே தவிர, இதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இல்லை” என்று கூறுகிறார்.
விடாமுயற்சி
ரிஷப் பண்ட் மற்றும் அவரைப் போன்ற மற்ற வீரர்கள் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு வர இந்த சிகிச்சைமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
2022-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையானவை. பண்ட் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், மிகவும் அதிரடியாகத் தனது வருகையைப் பதிவு செய்தார். இருப்பினும், விளையாட்டின் போது அவருக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்களில் இருந்து வெளிவர அவர் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியை மேற்கொள்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



