Home தேசிய national tamil சாமுராய் என்றால் அச்சமற்ற போர் வீரன் என்பது உண்மையா? உலகமே வியக்கும் ஜப்பான் வீரர்களின் வரலாறு

சாமுராய் என்றால் அச்சமற்ற போர் வீரன் என்பது உண்மையா? உலகமே வியக்கும் ஜப்பான் வீரர்களின் வரலாறு

6
0

SOURCE :- BBC NEWS

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

இடைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து, ஷோகன் முதல் ஸ்டார் வார்ஸ் வரை கலை, புனைகதை, திரைப்படங்கள் என சாமுராய்கள் பல வகைகளில் காட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உண்மை கதை நாம் அறிந்ததைவிட மிகவும் சிக்கலானது, ஆச்சரியம் நிறைந்தது.

கலாசார வரலாற்றில், சாமுராய்களின் நீடித்த மரபு ஒரு தனித்துவமான நிகழ்வாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் உக்கியோ-இ அச்சுகள் முதல் சமகால வீடியோ கேம்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வரை வேறு எந்த இடைக்கால சமூகக் குழுவும் இவ்வளவு பிரபலமாக, இடைவிடாமல் கொண்டாடப்பட்டதாக இருக்கவில்லை.

பிரபலமான கதைகள் பெரும்பாலும் காலப்போக்கில் மிகைப்படுத்தப்படுகின்றன. சாமுராய்கள் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது. இந்தப் பழங்கால போர்வீரர்கள் எப்போதும் அச்சமற்றவர்கள், விசுவாசமானவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறரிடம் இருந்து உண்மையிலேயே வேறுபட்டவர்கள் என்று மக்கள் நம்பினர்.

ஆனால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நடக்கும் ஒரு புதிய கண்காட்சி இந்தக் கருத்துகளில் பலவும் கட்டுக்கதைகள் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கண்காட்சி கற்பனைகளை அகற்றி, சாமுராய்களின் உண்மையான, சுவாரஸ்யமான வரலாற்றை வெளிப்படுத்த முயல்கிறது.

சாமுராய் என்பவர்கள் உண்மையில் யார்? அவர்களின் கதை தொடங்கியது எப்படி?

“அவர்கள் ஒன்றும் வரலாறு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்த தனித்துவமான மக்கள் குழு இல்லை” என்று கண்காட்சியின் கண்காணிப்பாளர் ரோசினா பக்லேண்ட் பிபிசியிடம் கூறுகிறார்.

“மேற்கத்திய நாடுகளில் சாமுராய்கள் போர்வீரர்கள் என்பதுதான் பொதுக் கருத்தாக உள்ளதாக நினைக்கிறேன். அவர்கள் போர் வீரர்கள்தான். இடைக் காலத்தில் அவர்கள் அப்படித்தான் தோன்றி அதிகாரப் பதவிக்கு உயர்ந்தார்கள். ஆனால், அது மட்டுமே முழு கதை இல்லை.”

சாமுராய்களின் தோற்றம் 10ஆம் நூற்றாண்டில், அவர்கள் முதன்முதலில் ஏகாதிபத்திய அரசவைகளுக்கு கூலிப் படையினராக ஆள் சேர்ப்பு செய்யப்பட்ட போதுதான் தொடங்கியது.

அவர்கள் படிப்படியாக கிராமப்புற பிரபுக்களாக பரிணமித்தனர். ஆனால் பின்னர் மக்கள் நினைப்பதுபோல், அவர்கள் காலங்காலமாக மதிக்கப்படும் வீரமிக்க போர் வீரர்களாக இருக்கவில்லை. போரில் அவர்கள் பதுங்கியிருந்து ஏமாற்றுதல் போன்ற சந்தர்ப்பவாத தந்திரோபாயங்களைப் பயன்படுத்த முனைந்தனர். அவர்கள் பெரும்பாலும் மரியாதை அல்லது தன்னலமற்ற கடமை உணர்வைவிட நிலம் மற்றும் அந்தஸ்தின் வெகுமதிகளால் அதிகமாக உந்தப்பட்டனர்.

அவர்களின் தகவமைப்புக் கண்ணோட்டம், அவர்கள் பன்முக கலாசார தாக்கங்களையும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இது சாமுராய் அடையாளத்தின் மற்றோர் ஆச்சரியமான அம்சம்.

கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சாமுராய் உடையின் மார்புக் கவசம் போர்த்துகீசிய கவசத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இது கூர்மையான முன்பக்கத்தையும் தோட்டாக்கள் பட்டுச் சிதற உதவும் சாய்வான பக்கங்களையும் கொண்டுள்ளது. 1542ஆம் ஆண்டு ஐரோப்பிய துப்பாக்கிகள் ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு இந்த அம்சங்கள் அவசியமாயின.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், The Trustees of the British Museum

‘கலாசாரமே அதிகாரம்’

ஏகாதிபத்திய வாரிசுரிமை தொடர்பான குழப்பமும் சண்டையும் நிலவிய காலத்தில் சாமுராய்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். பின்னர் ஒரு வலுவான வம்சமான மினாமோட்டோ வம்சம், 1185இல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தது. அதேநேரத்தில், பேரரசரின் ஏகாதிபத்திய அரசவை இன்னும் இருந்தது.

காலப்போக்கில், வெவ்வேறு போர்வீரர் குடும்பங்கள் வம்சத் தலைவர்களுக்கு இடையிலான பல போர்களில் எழுச்சி பெற்று வீழ்ச்சியடைந்தன. ஆனால், வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் விளக்குவது போல, அந்த நேரத்தில்கூட கலாசாரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், கலாசாரமே மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியது.

ஷோகன்கள் என்று அழைக்கப்படும் ராணுவ தலைவர்கள், பழங்குடி போர்வீரர்களின் கண்ணோட்டம் மற்றும் மனநிலையை வைத்துக்கொண்டு அதிகாரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் தங்கள் ராணுவ வலிமையை அரசவை சமூகத்திற்குள் மிகவும் நுட்பமான, அதிநவீன அதிகாரத் தரகு முறைகளுடன் கூடுதலாக வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிந்தனர்.

அவர்களது அரசியல் கலைக்கான திட்டமிடுதல்கள் சீன தத்துவத்தை, முக்கியமாக கன்ஃபூசியஸின் கருத்துகளை, அடிப்படையாகக் கொண்டிருந்தது. “நியோ, கன்ஃபூசிய சிந்தனையில், ராணுவ சக்திக்கும் கலாசார திறனுக்கும் இடையே சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் பக்லேண்ட்.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், The Trustees of the British Museum

இதன் விளைவாக, அரசவையில் இருந்த மக்கள், தூபத்தால் நிரப்பப்பட்ட ஆடம்பரமான அரண்மனை அறைகளுக்குள் கலாசார செல்வாக்கு மற்றும் கண்ணியமான ராஜதந்திரத்தின் அடிப்படையில் அதிக முயற்சிகளை எடுக்கத் தொடங்கினர்.

போர்க் கலையில் திறமையானவர்களாக இருப்பதுடன், சாமுராய்கள் ஓவியம், கவிதை, இசை நிகழ்ச்சி, நாடகம், தேநீர் விழாக்கள் போன்ற நுட்பமான கலைகளில் தேர்ச்சி பெற்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக கண்காட்சியில் இருக்கும், 19ஆம் நூற்றாண்டில் ஒரு சாமுராய் கலைஞரால் வரையப்பட்ட, ஆர்க்கிட் பூக்களைக் காட்டும் ஒரு ரசிகரின் ஓவியம் மிக அழகான, ஆச்சரியமான பொருட்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது தயாரிப்பில் இருக்கும் டிஸ்னி/எஃப்எக்ஸ் தொடரான ஷோகன், சாமுராய் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு திருப்புமுனையின் கற்பனையான அணுகுமுறையை வழங்குகிறது. 1500களில், ஒரு வம்சத் தலைவரான டோகுகாவா இயாசு (தொடரில் கற்பனையான யோஷி டோரனாகாவால் குறிப்பிடப்படுகிறார்), 250 ஆண்டுகள் நீடித்த ஒரு வெற்றிகரமான அரசாங்கத்தை நிறுவினார்.

இதன் பொருள் ஜப்பானுக்குள் பெரிய போர்கள் எதுவும் இல்லை, சாமுராய்கள் வேறு புதிய பாத்திரங்களை வகிக்கத் தொடங்கினர் என்பதாகும். போர்க்களத்தை ஒழுங்கமைப்பதற்குப் பதிலாக, அவர்கள் அரசை நிர்வகித்தனர். “அவர்கள் அமைச்சர்கள், சட்டம் இயற்றுபவர்கள், வரி வசூலிப்பவர்களாக செயல்பட்டனர்” என்று பக்லேண்ட் கூறுகிறார். அவர்கள் அரசவை முழுவதும் பரவியிருந்த, “கோட்டை வாயில்களில் காவலர்களாக இருப்பது வரை” பல வேலைகளை ஏற்றுக்கொண்டனர்.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், The Trustees of the British Museum

பெண் சாமுராய்கள்

டோகுகாவா ஷோகுனேட் என்று அழைக்கப்படும் இந்தப் புதிய ஆட்சியின்போது, டைமியோக்களின் (ஜப்பானின் பிராந்திய பிரபுக்கள்) குடும்பங்கள் அவரது அதிகாரத் தளமான எடோ (டோக்கியோ) நகரில் வாழ வைக்கப்பட்டனர்.

“அவர்கள் ஒருவிதத்தில் பணயக் கைதிகளைப் போன்றவர்கள். ஷோகனுக்கு அருகில் இருப்பதால், அவரால் அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும்” என்று பக்லேண்ட் கூறுகிறார். இது சாமுராய்களின் கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் செயல்படுத்துவதற்கான ஒரு வழி.

“உங்கள் மனைவியும் வாரிசும் எடோவில் இருந்தால் நீங்கள் பிராந்தியங்களில் எந்தச் சதியையும் செய்ய முடியாது. ஏனெனில், நீங்கள் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் அல்லது அவர்கள் தூக்கிலிடப்படலாம்.”

இதன் விளைவாக, பக்லேண்டின் கூற்றுப்படி, சாமுராய் வட்டாரங்களில் பெண்களின் பங்கின் முக்கியத்துவம் அதிகரித்தது. “பெண்கள் தங்கள் கணவர்கள் இல்லாத நேரங்களில் இல்லங்களுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார்கள். ஒரு உயர் பதவியில் இருக்கும் சாமுராய் என்றால், அவரது வீட்டில் 40 முதல் 50 பேர் வரை இருக்கலாம். இதுவொரு சிறு தொழிலையே நடத்துவதைப் போன்றது.”

ஊழியர்கள், வர்த்தகர்களை மேற்பார்வை செய்வதோடு, அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியையும் நிர்வகித்து, விருந்தினர்களுக்குத் தேவையான சடங்குகள், நடைமுறைகளைப் பராமரித்தனர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களான அங்கி, ஆசார கையேடுகள், அணிகலன்கள், இந்த சாமுராய் பெண்களின் வாழ்க்கைக் கதைகளை எடுத்துரைக்கின்றன.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், John C Weber collection/ Photo: John Bigelow Taylor

டோகுகாவா ஷோகுனேட் ஆட்சிக் காலத்தில், நாடகங்கள், கவிதைகள், கலைப் படைப்புகள் கடந்த கால சாமுராய்களை சிறந்த நாயகர்களாகக் காட்டின. அவை அவர்களின் துணிச்சல், விசுவாசம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன. பெரும்பாலான கதைகள் ஆண் போர் வீரர்களைப் புகழ்ந்தன. சில பெண் சாமுராய்களைப் பற்றிய கதைகளையும் கூறின.

கடந்த 1852ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உக்கியோ-இ அச்சு இத்தகைய பெண்களில் ஒருவரைக் காட்டுகிறது. மினாமோட்டோ வம்சத்தைச் சேர்ந்த ஒரு தளபதியின் மனைவியான டோமோ கோசனின் கதைதான் அது. இது 1184இல் நடந்த அவாசு போரில் அவரின் பங்கைக் காட்டுகிறது. அங்கு அவர் அச்சுறுத்தும் போர்வீரன் ஹச்சிரோ மோரிஷிகேவை கண்டுபிடித்து, அவரது குதிரையில் இருந்து கீழே தள்ளி, தலையை வெறும் கைகளால் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இறப்பும் மறுபிறப்பும்

மெய்ஜியின் ஆட்சிக் காலத்தில் (1868-1912), ஜப்பான் தனது எல்லைகளை சர்வதேச வர்த்தகத்திற்காகத் திறந்து, அதன் தொழில்கள், ராணுவம் மற்றும் சமூகத்தை நவீனமயமாக்கத் தொடங்கியது.

அப்போது நடந்த ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், 1869இல் அதிகாரபூர்வமாக சாமுராய் வர்க்கம் முடிவுக்கு வந்தது. இது சாமுராய்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இதற்குப் பிறகு, சாமுராய் உருவம் புனைகதை போல மாறியதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். மக்கள் சுமார் 25 ஆண்டுகளாக சாமுராய் உருவத்தை நிராகரித்தனர், ஆனால் பின்னர் கடந்த காலம் குறித்தான ஏக்கம் மக்களிடையே மீண்டும் அதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Courtesy of Lucasfilm

ஜப்பானுக்கு வெளியிலும், மக்கள் சாமுராய்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டினர். 1899ஆம் ஆண்டு நிட்டோப் இனாசோ எழுதிய புஷிடோ: தி சோல் ஆஃப் ஜப்பான் போன்ற புத்தகங்கள் பிரபலமடைந்தன. இந்தப் புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார்.

“தியோடர் ரூஸ்வெல்ட் கூடத் தனது நண்பர்களுக்குக் கொடுக்க சில பிரதிகளை வாங்கினார். முதல் சீன-ஜப்பானிய போரில் ஜப்பான் வெற்றி பெற்ற பிறகும், பின்னர் போரில் ரஷ்யாவை தோற்கடித்த பிறகும் ஜப்பானின் வெற்றியை விளக்க மக்கள் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தினர்.”

20ஆம் நூற்றாண்டில், ஜப்பானுக்குள் சாமுராய்களின் உருவம் மாற்றப்பட்டு, ராணுவ பிரசாரம் மற்றும் தேசத்தின் சின்னம் உள்படப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சாமுராய்களின் கதைகள் மீண்டும் மறுபிறவி எடுத்தன. இந்த முறை அவை திரைப்படங்களின் கருப்பொருளாக உருவெடுத்தன. இந்தப் படங்களின் பின்னால் இருந்த இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் அகிரா குரோசாவா. அவரது காட்சிக் கதை சொல்லல் மற்றும் அதிரடி காட்சிகளைக் கையாளும் திறமை அமெரிக்க சினிமாவில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

குரோசாவாவின் செவன் சாமுராய் (1954), தி மேக்னிஃபிசென்ட் செவன் (1960) என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. மேலும் யோஜிம்போ(1961), எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964) உருவாவதற்கான ஊக்கத்தை அளித்தது.

சாமுராய், ஜப்பான், பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பின்னர், தி லாஸ்ட் சாமுராய் (2003), 47 ரோனின் (2013) போன்ற தனது சொந்த சாமுராய் திரைப்படங்களையும் ஹாலிவுட் தயாரித்தது. சாமுராய்களின் பிரபலத்தன்மை மிகச் சமீபத்தில் மேற்கூறிய ஷோகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியால் உறுதி செய்யப்பட்டது. இது ஆங்கிலேயே எழுத்தாளர் ஜேம்ஸ் கிளாவெல் எழுதிய 1975 நாவலை அடிப்படையாகக் கொண்டது.

கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போல, அசல் ஸ்டார் வார்ஸ் திரைப்படமான எ நியூ ஹோப் (1977) அகிரா குரோசாவாவின் தி ஹிடன் ஃபோர்ட்ரஸ் (1958) திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. டார்த் வேடார் கதாபாத்திரத்தின் கவச உடை உள்படப் பல உடைகள் சாமுராய் கவசத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தன.

சாமுராய்களின் உண்மையான வரலாறு, மாற்றம் மற்றும் தழுவலை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். அவர்கள் இடைக் காலத்தில் கூலிக்குப் பணியாற்றும் வீரர்களாகத் தொடங்கி, பின்னர் படித்த அதிகாரிகளாகவும் கலையை ஆதரிப்பவர்களாகவும் உருவெடுத்தனர். ஆனால், சாமுராய்களின் கதை பல ஆண்டுகளாக கலை, திரைப்படங்கள், வீடியோ கேம்கள், கதைகள் மூலம் மக்களிடையே அவர்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சாமுராய்களை பற்றிய புதிய யோசனைகள் மற்றும் கதைகளை உருவாக்கப் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நம்புகிறது” என்று வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU