SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Pakistan’s PM Office/Getty Images
புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கி இந்தியா தவறிழைத்துவிட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். “இதற்கு அவர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.
பாகிஸ்தான் பின்வாங்கி விடும் என இந்தியா நினைத்திருந்ததாகவும், ஆனால் “தங்கள் நாட்டுக்காக போராடத் தெரிந்த தேசம் இது என்பதை இந்தியா மறந்துவிட்டது” என அவர் கூறினார்.
தங்கள் நாட்டு பாதுகாப்புப் படைகள் இந்தியாவின் தாக்குதலை எதிர்த்ததாகக் கூறினார். அப்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த கூற்றை இந்தியா உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவின் தாக்குதலுக்கு “எங்கள் தரப்பிலான பதிலடி அது” என பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.
இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், தன் தாய் மற்றும் சகோதரனுடன் வீட்டில் இருந்தபோது ஏழு வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் நாங்கள் பழிதீர்ப்போம் என நான் சத்தியம் செய்கிறேன்.”

இந்தியாவின் தாக்குதல்களை “கோழைத்தனமானவை” என அவர் விவரித்தார். மேலும், தங்கள் நாடு எதிர்த்து சண்டையிடும் என்பதை நேற்றிரவு காட்டியதாகவும் அவர் கூறினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு மணிநேரத்துக்குள் “தொடர்ச்சியாக சண்டை” நிகழ்ந்ததாக அவர் கூறினார். அது தங்களின் தைரியத்தைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
“எங்களை தாக்கியவர்கள் மற்றும் எதிரிகளின் போர் விமானங்களை எங்களின் படைகள் அழித்தன” எனவும் அவர் கூறினார். இந்திய விமானங்களை பாகிஸ்தான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மீண்டும் அவர் குறிப்பிட்டார், ஆனால் இதுகுறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும் பேசிய அவர், “பாகிஸ்தான் மக்களே, உங்களின் சொந்த பாதுகாப்புக்காக மக்களும் ராணுவமும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக (இந்தியாவுக்கு) நின்று வெற்றி பெறுவோம்.”
நாட்டின் பாதுகாப்புக்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் தனக்கு தேவை எனக்கூறி அவர் தன் உரையை முடித்தார். “ஏனெனில் நாம் உண்மைக்காக போராடுகிறோம், கடவுள் நம்முடன் எப்போதும் உடன் நிற்பார் என நம்புகிறேன்.”
“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா இன்று அதிகாலை அறிவித்தது.
“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இந்திய அரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
இதன் சமீபத்திய தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான்
இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை தங்கள் நாட்டின் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் இரண்டு விமானங்கள் காஷ்மீரிலும் ஒன்று இந்தியாவின் பதிண்டாவிலும் வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் முன்பு கூறிய கூற்றுகளையே அந்நாட்டு பிரதமரும் பிரதிபலித்தார். பாகிஸ்தான் பிரதமர் கூறுவது குறித்து இந்தியா கருத்து தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை பகிர்ந்துள்ள காணொளியில் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி, “மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு எஸ்யூ-30 மற்றும் ஒரு எம்ஐஜி-29, ஒரு ஹெரான் ட்ரோன் விமானம் உட்பட 5 இந்திய விமானங்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
‘அப்பாவி மக்களை கொன்றவர்களையே கொன்றோம்’

பட மூலாதாரம், ANI
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் ‘துல்லியமாகவும் விழிப்புடனும் கூர் உணர்வுடனும்’ நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) நிறுவன நாளையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோதியின் வழிகாட்டுதலின்படி, இந்திய ராணுவம் இந்தியர்கள் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது” என்றார்.
இந்திய ராணுவம் புதிய வரலாற்றை படைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் கூறுகையில், “துல்லியமாகவும் விழிப்புடனும் கூர் உணர்வுடனும் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு துல்லியமாக இலக்குகளை தாக்கியுள்ளோம். எந்தவொரு குடிமக்கள் பகுதிகளும் பாதிக்காத வண்ணம் இத்தாக்குதல் நடத்தப்படுவதை உறுதி செய்தோம்,” என்றார்.
ராமாயணத்தை மேற்கோளிட்டு பேசிய அவர், அனுமனின் கொள்கைகளை இந்திய ராணுவம் பின்பற்றுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், “அப்பாவி மக்களை கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்.” என்றார்.
அமித் ஷா ஆலோசனை
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து பேசினார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் எல்லையோர மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், பிகார், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஆனால், பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் காஷ்மீரில் எரிந்த வீடுகள்
இந்தியாவின் காஷ்மீரில் தாங்தாரில் வசிக்கும் தஸ்வீர் அஹ்மத் கூறுகையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய தாக்குதலில் தனது வீடு உட்பட குறைந்தது ஆறு வீடுகள் அழிக்கப்பட்டதாக கூறினார்.
அவரது குடும்பம் உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவர்களது உடைமைகள் எதையும் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பாதுகாப்பான பகுதி என்று நாங்கள் நினைத்த இடத்துக்கு ஓடினோம், ஆனால் அதுவும் தீயில் சிக்கியது” என்று பிபிசியிடம் கூறிய அஹ்மத் ,
“உணவு, உடைகள் மற்றும் எங்கள் தலைக்கு மேல் கூரை என, எங்களிடம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் எச்சரிக்கையின்றி தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார்.
“அந்த பகுதியில் முழுமையான அமைதி இருந்தது. திடீரென்று குழப்பம் ஏற்பட்டது . இவ்வாறு நடக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை,” என்றும் அஹ்மத் தெரிவித்தார்.
பிபிசியுடன் அவர் பகிர்ந்த வீடியோவில், ஒரு வீடு முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டிருப்பது காணப்பட்டது. அந்தக் காட்சிகளை எங்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுமார் 550 விமானங்கள் ரத்து
வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் (கிட்டத்தட்ட) 550 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிகழ்நேர விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 வழங்கிய தரவுகளின்படி, வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு திட்டமிடப்பட்ட பயணியர் விமானங்களில், பாகிஸ்தானில் 16% விமானங்களும், இந்தியாவில் 3% விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில், 135 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 417 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று Flightradar24 தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்
இதனிடையே, பயங்கரவாத முகாம்கள் குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுக்கிறது.
பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் தலைமையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தனது நாட்டில் பயங்கரவாத முகாம்கள் உள்ளன என்று இந்தியா கூறியதை நிராகரித்த பாகிஸ்தான், அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளது.
“22 ஏப்ரல் 2025க்குப் பிறகு, நம்பகமான, வெளிப்படையான மற்றும் நடுநிலையான விசாரணை நடைபெறுவதற்கு பாகிஸ்தான் நேர்மையான ஒரு யோசனையை முன்வைத்தது. அது துரதிர்ஷ்டவசமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘பயங்கரவாத முகாம்கள்’ என்று கூறப்படும் இடங்களுக்கு சர்வதேச ஊடகங்கள் மே 6 ஆம் தேதியன்று பயணம் செய்ததாகவும், இன்று மேலும் பல ஊடகங்கள் வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா தனது கூற்றுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்காமல், ‘தன் குறுகிய பார்வை கொண்ட அரசியல் நோக்கங்களைத் திருப்திபடுத்துவதற்காக அப்பாவி பொதுமக்களைத் தாக்கியுள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியில் இந்தியா நடத்திய தாக்குதலில், ஐ.நாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தெரிவித்துள்ளது.
அவர் தலைமையில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இறந்தவர்களில் அவரது மூத்த சகோதரியும் அவரது கணவரும், மசூத் அசாரின் மருமகனும் அவரது மனைவியும், ஒரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளும் அடங்குவர்.
பிப்ரவரி 2019இல் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது நடத்தியது. இது இந்தியா, பாகிஸ்தானை போரின் விளிம்புக்குக் கொண்டு சென்றது.
இந்தத் தாக்குதலில் அசூத் அசாரின் நெருங்கிய உதவியாளர்கள் மூவரும் அவர்களில் ஒருவரின் தாயும் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகமது குழு கூறியுள்ளது.

பட மூலாதாரம், BBC Urdu
இந்திய தூதரக அதிகாரியிடம் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
இந்தியாவின் உயர் தூதரக அதிகாரியை வரவழைத்து, இந்தியாவின் வான் தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள், குழந்தைகள் உட்பட குடிமக்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மை மீது நிகழ்த்தப்பட்ட தெளிவான விதிமீறல், சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை நிர்வகிக்கும் மரபுகள் மீதான அப்பட்டமான மீறல் என்றும் தூதரக அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய “பொறுப்பற்ற” நடவடிக்கை பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை தீவிர அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர்தப்பினோம்’

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைக்கு பிபிசி நேரில் சென்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையேயான தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் இந்த மருத்துவமனைக்கு இன்று காலை அனுமதிக்கப்பட்டனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள உரியில் உள்ள தன் வீட்டின் முதல் தளத்தில் 18 வயதான மன்சூர் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஷெல் குண்டுகளின் சிதறல்கள் ஜன்னல் வழியாக நுழைந்து அவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.

அதே மருத்துவமனையில் படார்டின் நாய்க் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை அதிகாலையில் சலாமாபாத்தில் உள்ள அவர்களின் வீட்டில் குண்டு தாக்கியதால் அவர்கள் காயமடைந்தனர்.
நாய்க் மற்றும் அவருடைய எட்டு வயது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது, அவரின் சகோதரரின் மனைவிக்கு மார்புப்பகுதியில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது.
“எங்கள் வீடு எரிந்து நாசமாகிவிட்டது, அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர்தப்பினோம்,” என நாய்க் தெரிவித்தார்.
‘யாரும் போரை விரும்பவில்லை, ஆனால்..’ – ஒமர் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images
இந்த பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட வேண்டும் என யாரும் விரும்பவில்லை என்றும், ஆனால் பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு என்றும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியாவின் வான் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு “தகுந்த பதிலடி” கொடுக்க இந்திய அரசு “சரியான வழியை” தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என இந்தியா கூறிய நிலையில், இந்தியாவின் குற்றச்சட்டை பாகிஸ்தான் மறுத்தது.
ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “பாகிஸ்தானில் ராணுவம் அல்லது குடிமக்கள் பகுதிகள் அல்லாமல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன, ஆனால் இந்தியாவில் குடிமக்கள் வசிக்கும் சில பகுதிகளிலும் பாகிஸ்தான் குண்டு வீசியுள்ளது” என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என ஒமர் அப்துல்லா தெரிவித்தார். தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்

பட மூலாதாரம், Gurdev Singh
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பஞ்சாபின் சில கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
தங்களுடைய உடைமைகளை டிராக்டர் ட்ராலிகளில் ஏற்றிக்கொண்டு, எல்லையிலிருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் அல்லது தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
எல்லையிலிருந்து வெளியேறும் சில குடும்பங்களிடம் பிபிசி பேசியது. பாதுகாப்பான இடங்களை நோக்கி தாங்கள் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை பாதுகாக்க குடும்பத்தில் ஓரிரு பேர் வீட்டில் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தானுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் ஹுசைனிவாலா எல்லையில் சுமார் 12-14 கிராமங்கள் உள்ளன.
ஜுகே ஹஸாரா சிங் கிராமத்தை சேர்ந்த ஜீத் சிங் கூறுகையில், “இங்கு பயம் நிறைந்த சூழல் உள்ளது. இங்குள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்.” என்றார்.

பட மூலாதாரம், Gurdev Singh
வயதான பெண்மணியான பஞ்சோ பாய் கூறுகையில், “நாங்கள் எங்கள் தானியங்களை எடுத்துக்கொண்டு மோகா மாவட்டத்துக்கு செல்கிறோம். இங்கு போர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது, மேலும் பாகிஸ்தான் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்.” என்றார்.

பட மூலாதாரம், Reuters
இந்திய அரசு தனது அறிக்கையில், “இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன,” என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : BBC