Home தேசிய national tamil 17 ஆண்டு லண்டனில் தஞ்சம்… வங்கதேசம் திரும்பிய 50 நாட்களில் ஆட்சி – யார் இந்த...

17 ஆண்டு லண்டனில் தஞ்சம்… வங்கதேசம் திரும்பிய 50 நாட்களில் ஆட்சி – யார் இந்த தாரிக் ரஹ்மான்?

14
0

SOURCE :- BBC NEWS

இந்த முறை, தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை பி.என்.பி. எதிர்கொள்ளவில்லை.

பட மூலாதாரம், @BNPBdMediaCell

வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பெரும்பான்மை பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 297 இடங்களில் பிஎன்பி கூட்டணி 209 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வங்கதேச தேசியவாதக் கட்சியை (பி.என்.பி), தாரிக் ரஹ்மான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்திச் சென்றார். அவர் முதல்முறையாகத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.

தாரிக்கின் தலைமையின் கீழ், பி.என்.பி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகக் கூடும்.

ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத நிலையில், பி.என்.பி வெற்றியை நோக்கி நகர்கிறது.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது தாயார் காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, தாரிக் கட்சியின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் திட்டங்களையும், ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரத்தையும் அவரே மேற்பார்வையிட்டார். தாரிக்கின் ஆதரவாளர்கள் அவரை வங்கதேசத்தின் சாத்தியமான பிரதமராக முன்னிறுத்துகின்றனர்.

பி.என்.பி தாரிக்கை கட்சியின் ஒரே தலைவராகச் சித்தரிக்கிறது. இருப்பினும், அரசியல் எதிரிகள் ரஹ்மானின் கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் ரஹ்மானும் அவரது கட்சியான பி.என்.பி-யும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர். மேலும் இதை முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் பிரசாரம் என்று அழைத்துள்ளனர்.

ரஹ்மான் சுமார் 17 ஆண்டுகளாக லண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார்.

பி.என்.பி முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானால் உருவாக்கப்பட்டது மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது.

பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அவர் கட்சியை ஆட்சிக்கு வழிநடத்தினார். இப்போது, முழுப் பொறுப்பும் தாரிக் ரஹ்மானின் தோள்களில் உள்ளது.

அவாமி லீக் ஆட்சியின் போது கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார்.

அவாமி லீக் மீதான தடைக்குப் பிறகு, பி.என்.பி-யின் நண்பராக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி அதன் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

ரஹ்மானின் தலைமை

தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், Parvez Ahmad/Drik/Getty Images

ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், 2007-ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்த அவர், 2008 செப்டம்பரில் விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றார்.

அங்கு சுமார் 17 ஆண்டுகள் தங்கியிருந்த தாரிக், கடந்த ஆண்டு டாக்கா திரும்பினார்.

காலிதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 26 அன்று தாரிக் ரஹ்மான் டாக்கா திரும்பினார். அந்த வருகை, 18 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகும், 17 ஆண்டுகள் லண்டனில் கழித்த பிறகும், வங்கதேச அரசியலுக்கு அவர் திரும்புவதைக் குறித்தது.

சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 30 அன்று காலிதா ஜியா காலமானார். பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, பி.என்.பி-யின் தேசிய நிலைக்குழு தாரிக்கை முறைப்படி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

இருப்பினும், 2018-இல் ஊழல் வழக்கில் காலிதா ஜியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து, லண்டனில் வசித்து வந்த தாரிக் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

அதற்கு முன்னதாக, 2002-இல் காலிதா ஜியா அவரை கட்சியின் மூத்த இணைச் செயலாளராக நியமித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-இல் பி.என்.பி-யின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் அவர் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

தாரிக் ரஹ்மானின் ஆளுமை

வங்கதேசத்தின் முதல் ராணுவ ஆட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஆகியோரின் மூத்த மகனாக, நவம்பர் 20, 1965 அன்று தாரிக் பிறந்தார்.

பி.என்.பி இணையதளத்தில் அவரது பிறந்த தேதி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதே தேதியைக் குறிப்பிட்டாலும், அவரது தேர்தல் வாக்குமூலத்தில் அவர் பிறந்த ஆண்டு 1968 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டக்காவில் உள்ள பி.ஏ.எஃப் ஷாஹீன் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, தாரிக் டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் சேர்ந்ததாக பி.என்.பி இணையதளம் தெரிவிக்கிறது. எனினும், அவர் அங்கு படிப்பை முடித்தாரா என்பது தெரியவில்லை.

மறுபுறம், தேர்தல் ஆணையத்திடம் அளித்த வாக்குமூலத்தில், தாரிக் தனது கல்வித் தகுதியை மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) என்று குறிப்பிட்டுள்ளார்.

பி.என்.பி வழங்கிய தகவல்களின்படி, விடுதலைப் போரின் போது ஜியாவுர் ரஹ்மானின் குடும்பம் மற்றும் பல ராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் சிறையில் அடைக்கப்பட்டன.

அவரது இரு மகன்களான தாரிக் ரஹ்மான் மற்றும் அராபத் ரஹ்மான் (மறைந்த) ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், Parvez Ahmad/Drik/Getty Images

கட்சி வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி, ராணுவ ஆட்சியாளர் உசேன் முகமது எர்ஷாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாரிக் பங்கேற்றார். மேலும், 1988-ஆம் ஆண்டு பகுடா மாவட்ட பி.என்.பி-யின் காவதாலி துணை மாவட்டப் பிரிவில் உறுப்பினராக முறைப்படி கட்சியில் சேர்ந்தார்.

இருப்பினும், பல கட்சித் தலைவர்களும் அதிபரின் ஆலோசனைக் குழுவின் சில உறுப்பினர்களும், தாரிக்கின் அரசியல் பயணம் 1991 நாடாளுமன்றத் தேர்தலில்தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர். அப்போது காலிதா ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டார். அவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பு தாரிக்கிடம் இருந்தது.

ஆனால், 2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சி அரசியலில் அவரது பிடி வலுவடையத் தொடங்கியது. அந்தத் தேர்தலில் பி.என்.பி தலைமையிலான நான்கு கட்சிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அதே பி.என்.பி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், ஹவா பவன் விவகாரத்தில் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது பின்னர் நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது.

அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்பூப் உல்லா இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் கூறுகையில், “2001 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஹவா பவன் ஒரு தேர்தல் அலுவலகமாகவும், தேர்தல் உத்திகளை வகுப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் தாரிக் ரஹ்மான் முக்கியப் பங்கு வகித்தார்” என்றார்.

பி.என்.பி தலைமையிலான அரசு அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், பி.என்.பி தொடர்ந்து ஹவா பவனின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது சர்ச்சைக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

2001 தேர்தலுக்குப் பிறகு கட்சியில் தாரிக் ரஹ்மானின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 22, 2002 அன்று, அவர் மூத்த இணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அரசியல் ஆய்வாளரும் ஆராய்ச்சியாளருமான மொஹியுதின் அகமது பிபிசி பங்களாவிடம் கூறுகையில், “இது கட்சி அரசியலில் அவரது பெரிய பாய்ச்சலாகும். ஜியா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. பின்னர், அவரைச் சுற்றி ஒரு இணைத் தலைமை உருவானது” என்றார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள்

தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

இந்த முறை, பி.என்.பி தனது முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமியைத் தேர்தலில் எதிர்கொண்டது. ரஹ்மானை “விடுதலைப் போர் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின்” ஒரே ஆதரவாளராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பினர்.

முன்னதாக, பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் (2001-06) பதவிக்காலத்தில், பனானியில் உள்ள கட்சித் தலைவரின் அலுவலகமான ‘ஹவா பவன்’ சர்ச்சைகளில் சிக்கியது.

2001-இல் பி.என்.பி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் காலிதா ஜியா அதிகாரத்தில் இருந்தபோதிலும், ரஹ்மானின் தலைமையிலான ஹவா பவன் ஒரு இணை அதிகார மையமாக மாறியதாக விவாதிக்கப்பட்டது.

ரஹ்மான் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின, இருப்பினும் அவரும் அவரது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து அரசியல் எதிரிகளின் பிரசாரம் என்று கூறி வந்தனர்.

பி.என்.பி அரசாங்கத்தின் அதே பதவிக்காலத்தில், 2004-ஆம் ஆண்டு டாக்காவில் எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவின் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாரிக் ரஹ்மான் மற்றும் ஹவா பவன் தான் காரணம் என்று அவாமி லீக் குற்றம் சாட்டியது.

பின்னர், அவாமி லீக் ஆட்சியின் போது, தாரிக் ரஹ்மான் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சி, தாரிக் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து நிம்மதியை அளித்துள்ளது. பி.என்.பி ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

தாரிக் ரஹ்மானின் தேர்தல் வாக்குமூலத்தில் மொத்தம் 77 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அவர் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார் அல்லது குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.

பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் நிலவிய பரவலான அரசியல் வன்முறை மற்றும் மோதல்களுக்குப் பிறகு, ஜனவரி 2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது.

 தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் 18 மாதங்கள் சிறையில் கழித்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, குண்டு துளைக்காத ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.

இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, பிரதமரின் மகனாக, கட்சி மற்றும் நிர்வாகத்தில் அவருக்கு அளவற்ற மரியாதையும் செல்வாக்கும் இருந்தது.

தான் கைது செய்யப்பட்ட பிறகு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ரஹ்மான் குற்றம் சாட்டுகிறார்.

“எனது ஆராய்ச்சியின் போது, பல்வேறு தரப்பினருடனான உரையாடல்களின் மூலம் தாரிக் ரஹ்மான் உண்மையில் சித்திரவதை செய்யப்பட்டதை அறிந்தேன். அவரது தாயார் காலிதா ஜியாவை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது”என்று ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகிறார்.

தாரிக் ரஹ்மான் செப்டம்பர் 11, 2008 அன்று நாட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்துடன் லண்டன் சென்றார்.

காலிதா ஜியா அந்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும், ராணுவத் தலைமையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஹ்மான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரஹ்மான் ஒரு உறுதிமொழிப் பத்திரம் வழங்கியதாக ஊடகச் செய்திகள் அப்போது வெளிவந்தன.

மொஹியுதீன் அகமது கூறுகையில், “தாரிக் இனி அரசியல் செய்ய மாட்டார். அவர் லண்டனில் படிப்பார் என்று காலிதா ஜியாவே அப்போது கூறியிருந்தார்,” என்றார்.

மறைந்த பி.என்.பி தலைவர் மௌதுத் அகமது தனது ‘கரகரே கெமோன் சிலாம் (சிறையில் நான் எப்படி இருந்தேன்) 2007-2008’ என்ற புத்தகத்தில், “தாரிக் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்று காலிதா ஜியா ராணுவ ஜெனரல்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க வாய்ப்புள்ளது… ஒருவேளை ரஹ்மானும் அத்தகைய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்,” என்று எழுதியுள்ளார்.

தாரிக் ரஹ்மான் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் இருப்பதாக பி.என்.பி நீண்ட காலமாக கூறி வந்தது.

இருப்பினும், ஏப்ரல் 24, 2018 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், ரஹ்மான் 2012-இல் பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததையும், ஓராண்டுக்குள் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையும் முதன்முதலில் ஒப்புக்கொண்டார்.

மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார்

தாரிக்

பட மூலாதாரம், Munir Uz Zaman / AFP via Getty Images

அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இராணுவ ஆதரவுடன் ஒரு தற்காலிக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பி.என்.பி தலைவர் கலீதா ஜியாவும் கைது செய்யப்பட்டார்.

காலிதாவுடன் அவரது மகன் அராபத் ரஹ்மானும் (தற்போது இறந்துவிட்டார்) கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், அராபத் பின்னர் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் சிகிச்சைக்காக தாய்லாந்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் மலேசியாவிற்குச் சென்றார், அங்கு 2015 ஜனவரியில் மாரடைப்பால் காலமானார்.

அரசியல் ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகையில், “பாதகமான சூழ்நிலையிலும் தாரிக் ரஹ்மான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முடிந்தது. இவை அனைத்தையும் மீறி, கட்சித் தலைவராக அவர் நாட்டிற்குத் திரும்புவது எனது பார்வையில் ‘சிதைவுகளில் இருந்து எழுவதற்கு’ ஒப்பானது,” என்றார்.

அவர் பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், “தாரிக் அரசியலின் இருண்ட பக்கங்களை மட்டும் பார்க்கவில்லை, நாட்டில் நிலவும் மோதல் மற்றும் பழிவாங்கும் அரசியலிலும் அவர் அனுபவத்தைப் பெற்றுள்ளார்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU