SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Pritam Roy/BBC
- எழுதியவர், அருணோதய் முகர்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
-
6 ஜூன் 2025
கடந்த சில நாட்களை நினைக்கும்போது ஷோனா பானுவுக்கு இன்னமும் நடுக்கமாக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் வசிக்கும் 58 வயதான அவர், மே மாதம் 25ஆம் தேதி உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் துப்பாக்கி முனையில் வங்கதேச எல்லைக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அங்கிருந்து அவருடன் சேர்த்து 14 பேர் வங்கதேசத்திற்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.
என்ன காரணம் எனத் தனக்குச் சொல்லப்படவில்லை என அவர் கூறுகிறார். ஆனால் இது அவர் எதிர்பார்த்து அச்சத்துடன் காத்திருந்த ஒரு சூழ்நிலைதான். பானு தனது வாழ்நாள் முழுவதும் அசாமில் வசித்திருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தான் “நான் ஓர் இந்திய குடிமகள்தான்” என்றும் “வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறி அல்ல” என்றும் நிரூபிக்க கடுமையாக முயன்று கொண்டிருக்கிறார்.
“அவர்கள் என்னைத் துப்பாக்கி முனையில் தள்ளிவிட்டனர். நான் அட்டைகளும் கொசுகளும் நிறைந்த முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்த வயல்வெளியில் உணவும், தண்ணீரும் இல்லாமல் இரண்டு நாட்களைக் கழித்தேன்,” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறுகிறார் பானு.
இரண்டு நாட்களை இந்தியா- வங்கதேசம் இடையிலான ‘நோ மேன்ஸ் லேண்ட்’ எனப்படும் யாருக்கும் சொந்தமில்லாத பகுதியில் கழித்த பின்னர் அவர் வங்கதேசத்தில் உள்ள பழைய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
அங்கு இரண்டு நாட்களைக் கழித்த பிறகு, அவரும் வேறு சிலரும் (அவர்கள் அனைவரும் தன்னுடன் அனுப்பப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தானா என்பது அவருக்கு சரியாகத் தெரியவில்லை), வங்கதேச அதிகாரிகளால் எல்லை தாண்டி அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இந்திய அதிகாரிகள் அவர்களைச் சந்தித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Alahi Shahriar Nazim/BBC
பானு திடீரென ஏன் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் ஏன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் என்பதில் தெளிவு இல்லை. ஆனால், கடந்த காலங்களில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ‘அந்நியர்கள்’ என தீர்ப்பாணையங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட மக்களை அசாம் அதிகாரிகள் பிடித்து எல்லையைத் தாண்டி அனுப்பி வைக்கும் சம்பவங்களில் அவரது சம்பவமும் ஒன்று.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு எல்லை நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எல்லையைத் தாண்டி தள்ளி விடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் ஆறு நபர்களிடம் பிபிசி பேசியது.
பிபிசியின் கேள்விகளுக்கு இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை, அசாம் காவல்துறை மற்றும் மாநில அரசு பதிலளிக்கவில்லை.
இரண்டு நாடுகளுக்கு இடையில் 4,096 கிலோ மீட்டர் (2,545 மைல்கள்) நீள எல்லையில் சில முக்கியப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு இருந்தாலும் எல்லையைக் கடப்பது எளிதாக இருப்பதால், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது இந்தியாவில் புதிதல்ல.
ஆனாலும் வீடுகளில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு எல்லைக்கு வெளியே அனுப்பப்படும் போக்கு அரிதாகவே நடப்பதாக இந்த வழக்குகளில் வாதாடி வரும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களில் இந்தப் போக்கு அதிகரித்து வந்துள்ளது.
தற்போதைய நடவடிக்கை மூலம் எவ்வளவு பேர் எல்லை தாண்டி அனுப்பப்பட்டனர் என்பதை இந்திய அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் மே மாதத்தில் மட்டும் வங்கதேசத்திற்குள், இந்தியா சட்டவிரோதமாக அசாம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் இருந்தும் 1200க்கும் மேற்பட்டோரை எல்லை தாண்டித் அனுப்பியிருப்பதாக வங்கதேச நிர்வாகத்தில் இருக்கும் உயர்மட்ட வட்டாரங்கள் சொல்கின்றன.
அவர்களில் சுமார் 100 பேரை இந்தியர்களாக அடையாளம் கண்ட வங்கதேசம் அவர்களைத் திருப்பி அனுப்பியிருப்பதாக அவர்கள் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தனர்.
குடியுரிமை மற்றும் இன அடையாளத்தால் பிணைக்கப்பட்ட அசாம்

பட மூலாதாரம், Alahi Shahriar Nazim/BBC
இந்த நடவடிக்கையைத் தடுக்க எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியை அதிகரித்து இருப்பதாக வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்புப் படையான பார்டர் கார்டு பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அண்மையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை மற்ற மாநிலங்களில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டாலும், குடியுரிமை, அடையாளம் ஆகியவை அரசியலில் முக்கியப் பங்காற்றும் அசாமில் நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது.
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள வங்கதேசத்துடன் சுமார் 300 கி.மீ. எல்லையைப் பகிரும் அசாம், மதரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் வாய்ப்பு தேடுவோர், அலை அலையாக அண்டை நாட்டிலிருந்து குடியேறியதை அதிகம் பார்த்துள்ளது.
இது அசாம் மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் இது மக்கள்தொகையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும், உள்ளூர் மக்களிடம் இருந்து வளங்களைப் பறிப்பதாகவும் நினைக்கிறார்கள்.
தேசிய அளவிலும் அசாமிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அண்மைக் காலங்களில் மாநிலத்தின் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முக்கியத்துவம் அளித்து சட்டவிரோத குடியேற்றப் பிரச்னைக்கு முடிவு கட்டப்போவதாக உறுதியளித்துள்ளது.
குடிமக்கள் பதிவேடு என்பது வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்ற தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 1971 மார்ச் 24ஆம் தேதிக்குள் அசாமுக்கு வந்ததாக நிரூபிக்க முடிவோரின் பட்டியல். இந்தப் பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் ஆவணங்கள் மூலம் வெளிநாட்டினர் ஆணையங்களிடம் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு பட்டியல் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.
குழப்பமான நடவடிக்கைக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வரைவுப் பட்டியலில் சுமார் 2 மில்லியன் அசாம் குடியிருப்புவாசிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என்று வெளிநாட்டினரின் தீர்ப்பாயம் மற்றும் குவாசி நீதிமையங்கள் (Foreigners’ Tribunals – Quasi-Judicial Forums) அறிவித்த பிறகு அவர்களில் பலர் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறுகின்றனர்.
முறையான அரசிதழ் அறிவிப்பு வந்தால் மட்டுமே இறுதி வரைவுப் பட்டியலில் விடுவிக்கப்பட்டவர்கள், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இயலும். ஆனால் அரசிதழ் இன்னும் வெளியிடப்படவில்லை.
தனது வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இருப்பினும் அதிகாரிகள் தன்னை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் பானு கூறுகிறார்.
அனைவரும் இஸ்லாமியர்கள்
பானுவுக்கு நிகழ்ந்ததைப் போன்றே, அசாமில் மேலும் 6 பேருக்கு இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பதை பிபிசி கண்டறிந்தது. அவர்கள் ஆறு பேருமே இஸ்லாமியர்கள்.
பானு வங்கதேசத்திற்கு அனுப்பட்ட அதே நேரத்தில், தேவையான ஆவணங்கள் இருந்தும் பல தலைமுறைகளாக இந்தியாவில் வசித்து வந்தாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவர்களில் குறைந்தது நான்கு பேர், ஏன் தாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம் என்ற கேள்விக்குப் பதில் தெரியாமலேயே தற்போது சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்கள்.
அசாம், 32 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. அதில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாமியர்கள். அவர்களில் பலர் ஆங்கிலேயர் ஆட்சியில் அங்கு குடியேறியவர்களின் வாரிசுகள்.

இன்னமும் வங்கதேசத்தில் தங்கியிருக்கும் அசாமின் பார்பேட்டாவை சேர்ந்த 67 வயதான மலேகா காதுன், தனக்கு ஓர் உள்ளூர் குடும்பம் தற்காலிகமாக வசிக்க இடம் அளித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
“எனக்கு இங்கு யாருமில்லை,” என வருந்துகிறார் அவர். அவரது குடும்பத்தினர் அவருடன் பேசியிருக்கிறார்கள், ஆனால் அவரால் எப்போது எப்படித் திரும்ப வர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் வெளிநாட்டினர் ஆணையத்திலும், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் தோல்வியடைந்திருக்கிறார். அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
அண்மைக்கால நடவடிக்கை தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்நியர்கள் என அறிவிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு இருப்பவர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உத்தரவிட்டதை முதலமைச்சர் ஹிம்மண்டா பிஸ்வா சர்மா சுட்டிக்காட்டுகிறார்.
“அந்நியர்களாக அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில்கூட மேல்முறையீடு செய்யாதவர்களை, நாங்கள் திருப்பி அனுப்பிறோம்,” என்றார் சர்மா. நீதிமன்ற மேல்முறையீடு செய்துள்ளவர்கள் “பிரச்னைக்கு” உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் பலவற்றில் இந்தியாவும் வங்கதேசமும் ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று பல குடியுரிமை தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் அப்துர் ரசாம் புயான் குற்றம் சாட்டுகிறார்.
“நீதிமன்ற உத்தரவு திட்டமிட்டு வேண்டுமென்றே தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது,” என்கிறார் அவர்.
வலுக்கட்டாய சட்டவிரோத வெளியேற்றக் கொள்கைக்கு எதிராக மாணவர் அமைப்பு சார்பாக அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் புயான் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் முதலில் அசாம் உயர் நீதிமன்றத்தை நாடும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பட மூலாதாரம், Aamir Peerzada/BBC
பார்பேட்டாவுக்கு 167 கி.மீ. தொலைவில் உள்ள மோரிகோவனில் கத்தையாக காகிதங்கள் குவித்து வைக்கபட்டிருந்த ஒரு மேசையின் அருகே ரீட்டா கானும் அமர்ந்திருந்தார்.
அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பானு அடங்கிய அதே குழுவில் அவரது கணவரான 51 வயது பள்ளி ஆசிரியர் கைருல் இஸ்லாமும் இடம்பெற்றிருந்தார். அவரை ஒரு அந்நியராக 2016இல் தீர்ப்பாயம் அறிவித்திருந்தது. அதன் பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். பானுவை போலவே அவரது மேல்முறையீடும் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைருல் இஸ்லாமின் பட்டச் சான்றிதழ் மற்றும் நில ஆவணங்கள் என அவர் சொல்லிக்கொண்ட சிலவற்றைப் புரட்டிக்கொண்டே “எனது கணவர் ஓர் இந்தியர்தான் என்பதற்கு ஒவ்வோர் ஆவணமுமே ஆதாரம் என்று கானும் கூறினார். “ஆனால் என் கணவரது குடியுரிமையை நிரூபிக்க அதிகாரிகளுக்கு அது போதுமானதாக இல்லை.”
அவரது கணவர், அவரது தந்தை, தாத்தா ஆகிய எல்லோரும் இந்தியாவில்தான் பிறந்தனர் என்கிறார் அவர். இருந்தும் மே 23ஆம் தேதி, அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் எந்த விளக்கமும் அளிக்காமல் இஸ்லாமை அழைத்துச் சென்றதாக கானும் தெரிவித்தார்.
ஆனால் சில நாட்கள் கழித்து வங்கதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இஸ்லாமை நோ மேன்ஸ் லேண்ட் பகுதியில் பேட்டி எடுத்த வீடியோ வைரலான பிறகுதான் அவர் எங்கிருக்கிறார் எனபதை குடும்பத்தினர் தெரிந்துகொண்டனர். பானுவை போலவே, இஸ்லாமும் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் திரும்புவதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தபோதும், அவர் வருவது குறித்து தகவல் எதுவும் தெரியாது என காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தனது தந்தை தவறான அடையாளத்தின் காரணமாகத்தான் அந்நியராக அறிவிக்கப்பட்டதாக உறுதியாகக் கூறுகிறார் சஞ்சிமா பேகம். அவரும் இஸ்லாம் அழைத்துச் செல்லப்பட்ட அதே இரவு அழைத்துச் செல்லப்பட்டார்.
“எனது தந்தையின் பெயர் அப்துல் லத்தீஃப். எனது தாத்தா அப்துல் சுப்ஹான். (வெளிநாட்டினர் ஆணையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்) வந்த நோட்டீஸில் சுகூர் அலியின் மகன் அப்துல் லத்தீஃப், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது எனது தாத்தா அல்ல, எனக்கு அவரைத் தெரியாது,” என்கிறார் பேகம். தனது தந்தையின் அடையாளத்தை நிரூபிக்கப் பயன்படும் ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார் சஞ்சிமா பேகம்.
லத்தீஃப் அசாம் வந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் இன்னமும் அவர் வீடு வந்து சேரவில்லை. ஒரு சிலர் வீடு திரும்பியிருந்தாலும், அவர்கள் திடீரென அழைத்துச் செல்லப்படலாம் என அச்சப்படுகின்றனர்.
“நாங்கள் விளையாட்டுப் பொருட்கள் அல்ல,” என்கிறார் பேகம்.
“இவர்கள் மனிதர்கள், நீங்கள் அவர்களை உங்கள் விருப்பம் போல் அலைக்கழிக்க முடியாது.”
கூடுதல் செய்தி சேகரிப்பு ஆமிர் பீர்ஜாடா மற்றும் பிரீத்தம் ராய்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC