Home தேசிய national tamil மோதியின் இஸ்ரேல் பயணம் மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்குமா?

மோதியின் இஸ்ரேல் பயணம் மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்குமா?

7
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

காஸா போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது மோதி இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றுவார் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பயணத் திட்டத்தில் பாலத்தீனத் தலைவர்களுடன் எந்தச் சந்திப்பும் இல்லை.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் உறவுகளை வலுப்படுத்த முனையும் நிலையில் இந்தப் பயணம் அமைகிறது. மோதி பத்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது முதல் இந்த உறவு கணிசமாக வளர்ந்துள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவைச் சமநிலைப்படுத்த இந்தியா முயற்சிப்பதால், இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைச் சோதனையாக அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமரானார் மோதி. அந்தப் பயணம் இரு நாட்டு உறவில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.

இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமாகப் பணியாற்றுகின்றன. இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

மோதியின் இந்த பயணத்தை ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க” பயணம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்பு இரு உலகத் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சக்திவாய்ந்த கூட்டணியாகும். புதுமை, பாதுகாப்பு மற்றும் மூலோபாயப் பார்வையில் நாங்கள் பங்காளிகளாக இருக்கிறோம். ஒன்றாக இணைந்து, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாடுகளின் குழுவை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள மோதி, “நம்பிக்கை, புதுமை மற்றும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட இஸ்ரேலுடனான நீடித்த நட்பை இந்தியா ஆழமாக மதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

வெளியுறவு விவகார நிபுணர் ஹர்ஷ் வி பந்த் கூறுகையில், “இஸ்ரேலுடன் தனக்குள்ள கூட்டாண்மையில் இந்தியா உறுதியாக இருப்பதை காட்ட விரும்புகிறது”, அதே நேரத்தில் மத்திய கிழக்கில் “தனது முன்னுரிமைகளை சமநிலைப்படுத்தவும் முயற்சிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்தியா - இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Amir Ohana/X

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், காஸாவில் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியா, இரு நாட்டுத் தீர்வுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில் பிரதமர் மோதியின் இந்தப் பயணம் அமைகிறது.

இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்துவதும், அது ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் முக்கிய கவலையாக உள்ளது.

இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில், கடந்த சில தசாப்தங்களில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் அமெரிக்க ராணுவ இருப்பை அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா சமீப காலமாக வலுப்படுத்தி வருகிறது.

ஆனால், மோதியின் இந்த பயணத்தின் மையம் இருதரப்பு உறவுகளிலேயே இருக்கும் என்றும், பிராந்திய பதற்றங்கள் குறித்த விவாதங்கள் ரகசியமாகவே இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரான் மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளுடனும் இந்தியா வலுவான உறவைப் பேணி வருவதால், இது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமாகவே உள்ளது.

“இந்தியா 1988-ல் பாலத்தீனத்தை அங்கீகரித்தது. அரசியல் ரீதியாக என்ன செய்ய முடியுமோ, அவை பெரும்பாலும் செய்யப்பட்டுவிட்டன… இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டின்படி, பிராந்திய மோதல்கள் அந்தந்தப் பிராந்தியங்களாலேயே தீர்க்கப்பட வேண்டியவை” என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு அலுவலக நிர்வாக இயக்குநர் கபீர் தனேஜா கூறினார்.

“தன்னுடைய சொந்த விவகாரங்களில் வெளிப்புறத் தலையீட்டை இந்தியா எப்படி எதிர்பார்ப்பதில்லையோ, அதே கொள்கையையே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அது பயன்படுத்துகிறது.”

டெல் அவிவ் நகரில் இஸ்ரேலியப் பிரதமரைச் சந்தித்த பிறகு மோதி மற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ள ஜெருசலேமுக்கு பயணம் மேற்கொள்வார்.

மோதி பயணத்தை முன்னிட்டு இஸ்ரேலிய நாடாளுமன்றம் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மோதி, புதன்கிழமை அங்கு உரையாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், அவரது உரை இஸ்ரேலில் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைவர் ஐசக் அமித் அழைக்கப்படாவிட்டால், மோதியின் உரையைப் புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன. அவரை அழைக்காதது நீதித்துறை சீர்திருத்தங்களைச் சுற்றியுள்ள அரசியல் விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மோதியின் இந்தப் பயணத்தை விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்தப் பயணத்தைக் கண்டித்துள்ளதுடன், மோதி அரசு பாலத்தீன விவகாரத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா - இஸ்ரேல், மத்திய கிழக்கு

இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், இந்தப் பயணம் இந்தியாவின் நீண்டகால மூலோபாயக் கணக்கீடுகளைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோதியின் பயணம், “பெரும்பாலும் இருதரப்புத் தேவைகளால் தூண்டப்படுகிறது” என்கிறார் தனேஜா.

“போர் முறைகள் அதிகளவில் தானியங்கி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிவரும் நிலையில், இந்தியாவின் உள்நாட்டுத் தற்காப்புத் தொழில்நுட்பம் இன்னும் பல துறைகளில் பின்தங்கியே உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான பதற்றங்களைக் கருத்தில் கொள்ளும் போது, சிறந்த தொழில்நுட்ப உபகரணங்களைத் தேடாமல் இருக்கும் சூழலில் இந்தியா இல்லை. அந்தத் தேவையை இஸ்ரேல் மிகச் சரியாகப் பூர்த்தி செய்கிறது” என்று தனேஜா விளக்குகிறார்.

ஆனால், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவின் பரந்த நலன்களுக்கு மத்திய கிழக்கில் பிராந்திய நிலைத்தன்மை “மிகவும் முக்கியமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-இஸ்ரேல் உறவை மோதி புகழ்ந்து பேசினாலும், இஸ்ரேலை விமர்சிக்கும் மத்திய கிழக்கின் பிற கூட்டாளிகளுடனான இந்தியாவின் நீண்டகால உறவைப் பாதிக்காத வகையில் அவர் கவனமாக இருப்பார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU