Home தேசிய national tamil பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?

பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?

4
0

SOURCE :- BBC NEWS

பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.

பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது புவியீர்ப்பு விசைக்கு உதவுவதால், பிரசவம் எளிதாகிறது.

அப்படியிருக்க, இன்று பல பெண்கள் மல்லாந்து படுத்து பிரசவிப்பது ஏன்?

பிரசவம் இயற்கையாக எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என இருவரிடமும் புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் என்று ஆக்டிவ் பர்த் சென்டரின் நிறுவனர் ஜேனட் பலஸ்காஸ் விளக்குகிறார்.

மேலும், பெண்கள் தங்கள் பிரசவ அனுபவத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். 1982இல் அவர் ஒரு “செயல்திறன் பிரசவ அறிக்கையை” வெளியிட்டார். அதுவே அவரது பணிக்கான முக்கியக் கருத்தாக அமைந்தது.

அவரது அறிக்கை, “உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் ஏதேனும் ஒரு வகையான நிமிர்ந்த அல்லது குனிந்த நிலையில் இயல்பாகவே பிரசவ வலியை அனுபவித்து, குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இனம் அல்லது கலாசாரம் என எதுவாக இருந்தாலும், இதுவே மேலோங்கி இருந்துள்ளது,” என்று கூறுகிறது.

இருப்பினும், பல நவீன, வளர்ந்த நாடுகளில், மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது பெண்கள் இப்போது படுக்க வைக்கப்படுகிறார்கள் என்று பலஸ்காஸ் கூறுகிறார். அவர் இந்த நடைமுறையைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

“இந்த நடைமுறை தர்க்கமற்றது. இது பிரசவத்தை தேவையற்ற முறையில் சிக்கலானதாகவும் செலவுமிக்கதாகவும் ஆக்குகிறது. ஓர் இயற்கையான செயல்முறையை ஒரு மருத்துவ நிகழ்வாகவும், பிரசவிக்கும் பெண்ணை ஒரு செயலற்ற நோயாளியாகவும் மாற்றுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

மேலும் அவர், “இத்தகைய முக்கியமான நேரத்தில், வேறு எந்த உயிரினமும் இப்படிப்பட்ட பாதகமான நிலையில் இருப்பதில்லை” என்றும் தெரிவித்தார்.

மற்ற நிபுணர்களும் அவரது கருத்துடன் உடன்படுகின்றனர். உதாரணமாக, மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹன்னா டேலன், படுத்த நிலையில் பிரசவிப்பது உண்மையில் “ஒப்பீட்டளவில் நவீனமான நிகழ்வு” என்று 2013ஆம் ஆண்டில் தி கான்வர்சேஷன் இதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, அவரது கூற்றுப்படி, இதுவொரு பாரம்பரியமான அல்லது இயற்கையான முறை அல்ல, மாறாக, அண்மைக் காலத்தில் உருவான ஒரு முறையாகும்.

பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

வரலாற்றில் பிரசவ முறையில் நிகழ்ந்த மாற்றம்

கடந்த 300 முதல் 400 ஆண்டுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் மல்லாந்து படுத்தபடியே பிரசவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றத்திற்கான ஒரு முக்கியக் காரனம், ஃபிரான்சுவா மௌரிசோ என்ற பிரெஞ்சு மருத்துவர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு படுத்துக்கொள்வது மிகவும் வசதியாகவும், பிரசவத்திற்கு உதவும் ஆண் மருத்துவருக்கு மிகவும் சௌகரியமாகவும் இருக்குமென மௌரிசோ கூறினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில், பிரசவத்தின்போது மருத்துவச்சிகளுக்குப் (பொதுவாக பெண்கள் இருந்தார்கள்) பதிலாக ஆண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மெதுவாகப் பணியமர்த்தப்படும் மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

மௌரிசோ கர்ப்பம் ஒரு நோயைப் போன்றது என்றும் நம்பினார். 1668இல் வெளியான ‘கர்ப்பிணிகள் மற்றும் பிரசவப் படுகையில் உள்ள பெண்களின் நோய்கள்’ என்ற தனது புத்தகத்தில் அவர், “பிரசவித்த பிறகு அங்கே தூக்கிச் செல்லப்படும் அசௌகரியத்தையும் சிரமத்தையும் தவிர்ப்பதற்காக, தங்கள் படுக்கையிலேயே பிரசவிப்பதே சிறந்த, உறுதியான தீர்வு,” என்று அறிவுறுத்தினார்.

எளிதாகக் கூறுவதெனில், பெண்கள் படுக்கையில் பிரசவிப்பது நல்லது, அதனால் பிரசவத்திற்குப் பிறகு அவர்களை வேறு இடத்திற்கு நகர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என்பதே அவரது கருத்தாக இருந்தது.

இருப்பினும், இந்த மாற்றத்தில் மற்றொரு பிரெஞ்சு ஆளுமையான 14ஆம் லூயி மன்னரும் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த 1987இல் இதைப் பற்றி எழுதிய லாரன் டண்டஸின் கூற்றுப்படி, “14ஆம் லூயி, பெண்கள் பிரசவிப்பதைப் பார்ப்பதை ரசித்ததாகக் கூறப்படுவதால், பிரசவ நாற்காலியில் பிரசவம் நிகழும்போது பார்வை மறைக்கப்படுவதால் அவர் விரக்தியடைந்து, புதிய சாய்ந்த நிலையை ஊக்குவித்தார்.”

மேலும் அவர், “மன்னரின் கொள்கையின் தாக்கம் அறியப்படவில்லை. இருப்பினும் அரச குடும்பத்தினரின் நடத்தை மக்களை ஓரளவுக்கு பாதித்திருக்க வேண்டும். 14ஆம் லூயியின் மாற்றத்திற்கான கோரிக்கை, பிரசவ நிலை மாற்றத்துடன் ஒத்துப்போனது. மேலும் அது தாக்கம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் எப்படித் தொடங்கியிருந்தாலும், படுத்துக்கொண்டு பிரசவிக்கும் வழக்கம் பொதுவானதாகிவிட்டது.

பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

அறிவியல் கூறுவது என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்கள் நிமிர்ந்து நின்ற நிலையில் பிரசவிப்பதற்கான முக்கியக் காரணம் மிகவும் எளிமையானது: புவியீர்ப்பு விசை. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது பிறப்புக் குழாய் வழியாக கீழ்நோக்கி நகர வேண்டும். ஈர்ப்பு விசை இந்தச் செயல்முறைக்கு உதவுவதுடன், அதை எளிதாக்கவும் செய்கிறது.

பெண்கள் இயற்கையாகத் தேர்வு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டால், அவர்கள் பிரசவத்தின்போது படுத்துக்கொள்வதைத் தேர்வு செய்வதில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மாறாக, அவர்கள் முன்னோக்கிச் சாய்ந்து நிற்கலாம், குத்தவைத்து உட்காரலாம், கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி நிற்கலாம் அல்லது நாற்காலி அல்லது படுக்கை போன்ற தாழ்வான பொருளின் மீது முன்னோக்கிச் சாயலாம். இந்த நிலைகள் உடலுக்கு மிகவும் இயல்பானவையாக உணரப்படுகின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டில் 5,200க்கும் மேற்பட்ட பெண்களை உள்ளடக்கிய 25 ஆய்வுகளின் ஒரு மதிப்பாய்வு, படுக்கையில் படுத்துக் கொள்வதற்குப் பதிலாக நிமிர்ந்த மற்றும் நகரக்கூடிய நிலைகளில் பிரசவித்த பெண்களுக்குப் பல முக்கியமான நன்மைகள் இருப்பதைக் கண்டறிந்தது.

அந்த ஆய்வு, “பெண்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகவும், கடுமையான வலி நிவாரணி தேவைப்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகவும், அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்த பிறகான சிறப்புப் பராமரிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகவும்” தெரிவித்தது.

இருப்பினும், அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் உள்ள பெண்களுக்கு மேலதிக ஆய்வு தேவை என்றும் இந்த ஆய்வறிக்கை கூறியது. சில ஆய்வுகள் நிமிர்ந்த நிலையில் இருக்கும்போது அதிக ரத்த இழப்பு ஏற்படக்கூடும் என்று காட்டியுள்ளன. எனவே இதுகுறித்து மருத்துவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

அதேவேளையில், நிமிர்ந்து நின்ற நிலையில் பிரசவிப்பது, ஒரு பெண் பிரசவத்திற்குச் செலவிடும் நேரத்தைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குழந்தை வேகமாகப் பிறக்க முடியும்.

ஹன்னா டேலன், “நிமிர்ந்து நின்ற நிலையில் பிரசவிப்பது தாய், சேய் இருவருக்கும் நன்மைகளைக் கொண்டுள்ளதாக” ஹன்னா டேலன் 2013இல் எழுதினார். அவர் பல நன்மைகளை விளக்கினார். தாய்க்கு குறைந்த வலி, ஃபோர்செப்ஸ், எபிசியோடோமி போன்ற குறைவான மருத்துவ நடைமுறைகள், கருப்பையில் உள்ள குழந்தைக்கு சிறந்த ஆக்ஸிஜன் விநியோகம் போன்றவை அந்த நன்மைகளில் சில என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் நிமிர்ந்த நிலையில் இருக்கும்போது, ஒரு முக்கியமான ரத்த நாளம் (பெருந்தமனி) கருப்பையால் அழுத்தப்படாததால் இது நிகழ்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டில், ஒரு பெண் பிரசவிக்கும் இடம், அவர் பயன்படுத்தும் நிலையைப் பாதிக்கிறதா என்பதைப் பார்க்க, டேலனும் அவரது குழுவும் மற்றோர் ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் இரண்டு இடங்களை ஒப்பிட்டனர்: பிரசவ மையங்கள் மற்றும் மருத்துவமனை பிரசவ வார்டுகள். பிரசவ மையங்களில் உடற்பயிற்சி பந்துகள், பிரசவ நாற்காலிகள், பீன் பேக்குகள் போன்ற பயனுள்ள உபகரணங்கள் இருந்தன. பிரசவ வார்டுகளில் பொதுவாக மருத்துவமனைப் படுக்கை மட்டுமே இருந்தது.

அவர்கள் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கண்டார்கள். பிரசவ மையங்களில், 82% பெண்கள் பிரசவத்தின்போது நிமிர்ந்த நிலையில் இருந்தனர். ஆனால் மருத்துவமனை பிரசவ வார்டுகளில், 25% பெண்கள் மட்டுமே அவ்வாறு செய்தனர். பெண்கள் எவ்வாறு பிரசவிக்கிறார்கள் என்பதை, சூழலும் அங்குள்ள உபகரணங்களும் பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மேற்கத்திய நாடுகளில் “செயல்திறன் மிக்க பிரசவம்” (active birth) எனப்படும் ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் ஜேனட் பலஸ்காஸ். இந்த அணுகுமுறை, பிரசவத்தின்போது பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்களின் இயற்கையான உள்ளுணர்வுகளைப் பின்பற்றவும் ஊக்குவிக்கிறது. மல்லாந்து படுத்துக்கொண்டு இயந்திரங்கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதற்குப் பதிலாக, பெண்கள் நிமிர்ந்து நிற்கவும், தங்களுக்கு வசதியாக இருக்கும் நிலைகளைத் தேர்வு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த விழிப்புணர்வு இருந்தபோதிலும், சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இன்னும் “கவலைக்குரிய வகையில்” அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் ஜேனட் பலஸ்காஸ்.

பிரிட்டனில் செயல்திறன் மிக்க பிரசவம் என்ற கருத்து சில நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளதாக விளக்குகிறார் பலஸ்காஸ். உதாரணமாக, இப்போது பெண் பிரசவ நிபுணர்களால் வழிநடத்தப்படும் பிரசவ மையங்கள் உள்ளன. இவை பொதுவாக மருத்துவமனைகளுக்கு உள்ளே அமைந்திருந்தாலும், பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், பிரசவக் குளம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

“இந்த வாய்ப்பு ஒப்பீட்டளவில் புதியவை எனவும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இது இருந்ததில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு நிறுவனத்தின் (NICE) வழிகாட்டுதல்களும் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. பிரசவத்தின் இரண்டாம் கட்டத்தில், பெண்கள் மல்லாந்து அல்லது சாய்ந்த நிலையில் படுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களுக்கு மிகவும் வசதியான வேறு எந்த நிலையையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பிரசவத்தின்போது தங்களுக்குள்ள வாய்ப்புகளைப் பெண்கள் புரிந்துகொள்வது, அவர்கள் சிறந்த வாய்ப்புகளைத் தேர்வு செய்ய உதவும் என்றும் அவர்கள் அதிக நம்பிக்கையுடனும் வசதியாகவும் உணர முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு கல்வித் திட்டத்தை வழிநடத்தும் எய்லீன் ஹட்டன், “பிரசவ விருப்பங்கள் குறித்த பொதுக் கல்வி எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார். பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் பிரசவத்தை தவறான அல்லது நம்ப முடியாத வகையில் சித்தரிப்பதாகவும் அவர் விளக்குகிறார்.

“பிரபல இலக்கியங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பிரசவம் சித்தரிக்கப்படும் விதத்தைப் பார்த்தால், பிரசவ செயல்முறை எப்படியெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே சரியான தகவல்களை வழங்குவது மட்டுமே பெண்கள் சிறந்த முடிவுகளை எடுக்க உண்மையிலேயே உதவியாக இருக்கும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU