Home தேசிய national tamil நியாண்டர்தால் மனிதர்களின் கலைத் திறனை அறிய உதவும் கைரேகையில் தெரிய வந்த அதிசயம்

நியாண்டர்தால் மனிதர்களின் கலைத் திறனை அறிய உதவும் கைரேகையில் தெரிய வந்த அதிசயம்

5
0

SOURCE :- BBC NEWS

நியாண்டர்தால் மனிதர்கள்

பட மூலாதாரம், Álvarez-Alonso et al

தாங்கள் உலகின் மிகப் பழமையான, முழுமையான மனித கைரேகையைக் கண்டறிந்துள்ளதாக, ஸ்பெயின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித முகத்தை ஒத்திருக்கும் வடிவிலான பெருங்கல்லைத் தோண்டி எடுத்ததைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் இதைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், நியாண்டர்தால் மனிதர்கள் கலைப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுமார் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நியாண்டர்தால் மனிதர், சிகப்பு நிறச் சாயத்தை விரலில் நனைத்து, மனித முகத்தை ஒத்திருக்கும் அந்தக் கல்லில் மூக்கு போன்று ஒரு புள்ளியை வரைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஸ்பெயினின் செகோவியாவில் உள்ள சான் லாஸரோ பாறைக் குகைகளில் இருந்து இக்கல்லை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அந்தப் புள்ளி “எங்கு அமைந்துள்ளது என்பது” நியாண்டர்தால் மனிதர்களின் “உருவகரீதியான நடத்தைக்கான” ஆதாரமாக விஞ்ஞானிகள் காண்பதற்கு வழிவகுத்திருக்கிறது. அதன் வாயிலாக நியாண்டர்தால் மனிதர்கள் கலைரீதியிலான விஷயங்களை சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நியாண்டர்தால் மனிதர்களின் ‘கலைப் படைப்புத் திறன்’ குறித்து தற்போது நடைபெறும் விவாதங்களுக்கு இது வலு சேர்ப்பதாக, இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மரியா டீ ஆண்ட்ரே-ஹெர்ரெரோ தெரிவித்தார்.

ஆச்சர்யமான விஷயம்

நியாண்டர்தால் மனிதர்கள்

பட மூலாதாரம், Pedro A. Saura Ramos

பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில், மாட்ரிட்டில் உள்ள காம்ப்ளூட்டென்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன்ட்ரே-ஹெர்ரெரோ, அந்தப் பாறை குகைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகழ்வாராய்ச்சி தொடங்கிவிட்டதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டில் நியாண்டர்தால் குழுக்களைச் சேர்ந்த படிமங்களை 1.5 மீட்டருக்கு அடியில் கண்டெடுத்ததாகவும் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் நாங்கள் பார்த்ததை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஏனெனில், அந்த அகழாய்வுத் தளத்தில் மற்ற கற்களைவிட அளவில் பெரிய, நடுவில் சிகப்பு நிறப் புள்ளியைக் கொண்ட, மனித முகத்தை ஒத்த அந்தக் கல்லைக் கண்டோம்.”

அந்தப் புள்ளி, ஓக்ரே (ochre) எனப்படும் இயற்கையான களிமண் சாயத்தால் உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதுவொரு சாயப்பொருள்தான் என்பதை உறுதி செய்த பின்னர், ஆய்வுக் குழுவினர் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஸ்பெயினின் தடயவியல் அறிவியல் பிரிவைத் தொடர்புகொண்டதாக பேராசிரியர் ஆண்ட்ரே கூறுகிறார்.

அந்தக் குழுவினர், பல நிறமாலை பகுப்பாய்வின் (multi-spectrum analysis) மூலம் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு கைரேகையைக் கண்டுபிடித்தனர்.

அந்தக் கல்லில் இருந்த கைரேகை ஒரு வயது வந்த ஆணுடையது என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தொல்லியல் ஆய்வாளரும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான டேவிட் ஆல்வாரெஸ் அலோன்சோ கூறுகையில், இந்தக் கைரேகையை ஒப்பிடுவதற்கு வேறு எந்த நியாண்டர்தால் கைரேகைகளும் இல்லை என்பதால், அதை உறுதியாகச் சொல்வது கடினம் என்றார்.

தனித்துவமான பொருள்

இந்த அறிவியல் ரீதியான கண்டுபிடிப்பு குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பெயின் அதிகாரி கோன்ஸாலோ சன்டோன்ஜா, “ஐரோப்பிய கண்டத்தில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் வரையப்பட்ட மிகப் பழமையான பொருள் இந்தக் கல்தான்” என்றும் “நியாண்டர்தால் மனிதரால் வரையப்பட்ட, வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரேயொரு பொருள் இதுதான்” எனவும் தெரிவித்தார்.

நியாண்டர்தால் மனிதர்கள்

பட மூலாதாரம், Álvarez-Alonso et al

பேராசிரியர் ஆண்ட்ரே கூறுகையில் தங்கள் ஆய்வுக்குழுவின் முடிவுகள், “நியாண்டர்தால்களின் உருவகத் திறன் குறித்த விவாதத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஏனெனில், தொல்லியல் ரீதியாக, முதன்முறையாக அறியப்பட்ட சாயம் பூசப்பட்ட பொருளாக இது உள்ளது” என்றும் “இது நியாண்டர்தால் மனிதர்களின் (அகழாய்வு) தளம் என்பது உறுதி” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தக் கைரேகை, பயன்பாடற்ற ஒரு பொருளில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய அவர், கல்லில் உள்ள அந்தப் புள்ளி கலைரீதியான நோக்கத்தைக் கொண்டது என்று தெரிவித்தார்.

மேலும், அகழாய்வுத் தளத்தில் சிவப்புச் சாயத்தில் புள்ளி வரையப்பட்ட கல் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார். அதாவது நியாண்டர்தால் மனிதர்கள் அந்தக் கல்லைத் தாங்களாகவே அந்தத் தளத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அதாவது, “நியாண்டர்தால் மனிதர் ஒருவர் அந்த கல்லைக் கண்டறிந்து, அதிலுள்ள பிளவுகள் அவரின் கவனத்தை ஈர்த்து, இயற்கை களிமண் சாயத்தால் வேண்டுமென்றே அந்தப் பொருளின் நடுவே புள்ளி வைத்திருக்கலாம்,” என்று பேராசிரியர் அலோன்சோவை மேற்கோளிட்டு ஸ்பெயின் செய்தி முகமையான யூரோப்பா பிரெஸ் கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்தப் புள்ளி தற்செயலாக வைக்கப்படவில்லை என நம்பும் ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு முடிவுகளின்படி அந்தப் பாறைக் குகைகளில் சிவப்பு நிறச் சாயம் இயற்கையாக இருக்கவில்லை என்கின்றனர். அதாவது, “அந்தச் சாயம் யாரோ ஒருவரால் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.”

தொல்லியல் மற்றும் மானுடவியல் தொடர்பான ஆய்விதழான ஆர்க்கியாலஜிக்கல் அண்ட் ஆந்த்ரோபாலஜிக்கல் சயின்சஸில் வெளியான இதுகுறித்த ஆய்வுக் கட்டுரையில், “சான் லஸாரோவில் பாறைக் குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல், அதன் தனித்துவமான பல குணங்களால், மற்றவற்றில் இருந்து விதிவிலக்கானதாக உள்ளது.

அதை நாங்கள் காட்சி உருவகமாக வகைப்படுத்துகிறோம். சில சந்தர்ப்பங்களில் அது எடுத்துச் செல்லக்கூடிய விதத்திலான கலைப் படைப்பாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறோம்,” எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU