SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மைக் வெண்ட்லிங்
- பதவி, பிபிசி நியூஸ்
-
6 ஜூன் 2025, 13:55 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையே தற்போது வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் ஒன்றை ஈலோன் மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரையொருவர் அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இரண்டு கோடீஸ்வரர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், மஸ்க்கும் வியாழக்கிழமை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான சமூக ஊடக தளங்களில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
அதையடுத்து, ஒன்றாக இருந்த அவர்களின் கூட்டணி, தற்போது கசப்பான முடிவை நெருங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. தனது நிர்வாகத்தின் முக்கியமான வரி மற்றும் செலவுத் திட்டத்தை மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, “அவரால் ஏமாற்றமடைந்தேன்” என்று டிரம்ப் கூறினார். இது அவர்களின் “நல்லுறவை” முடிவுக்குக் கொண்டு வருமா என்ற கேள்வியும் எழுந்தது.
பின்னர் டிரம்பை “நன்றியில்லாதவர்” என்று குற்றம் சாட்டிய மஸ்க், “நான் இல்லாவிட்டால், டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பார்” என்று கூறினார்.
பல மணிநேர வாக்குவாதத்திற்குப் பிறகு, டிரம்ப் அந்த நிலைமையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். “அது பரவாயில்லை, எல்லாம் நன்றாக நடக்கிறது. முன்பைவிட நன்றாக நடக்கிறது” என்று பொலிட்டிகோ என்ற செய்தித் தளத்திடம் டிரம்ப் கூறினார்.
அவரது உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை மஸ்க் உடன் ஒரு தொலைபேசி அழைப்பைத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதே செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

டிரம்ப், மஸ்க் உறவு மீண்டும் மலருமா?
மறுபுறம் மஸ்க் தரப்பிலும் இந்த விஷயத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம் என நம்புவதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை இரவு, டிரம்பை ஆதரிக்கும் பில் அக்மன், இவர்கள் இருவரும் சமாதானம் செய்ய வேண்டும் எனப் பதிவிட்டார்.
அதற்கு, “நீங்கள் நினைப்பது தவறல்ல” என்று மஸ்க் பதிலளித்தார்.
கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது செனட் வாக்கெடுப்புக்காக காத்திருக்கும் டிரம்பின் “பிக், பியூட்டிஃபுல்” செலவுத் திட்டத்திற்கு எதிராக மஸ்க் பல வாரங்களாகப் பரப்புரை செய்து வந்தார். அதன் பின்னர், டிரம்ப் மற்றும் அவர் ஒரு காலத்தில் நம்பியிருந்த மஸ்க் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மொத்தமாக 129 நாட்கள் மட்டுமே பணியாற்றி அரசாங்க செயல்திறன் துறையை (Doge) விட்டுச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, மஸ்க் தனது சமூக ஊடகமான எக்ஸில் இந்த மசோதாவை “அருவருப்பானது” என்று கூறி, “இதற்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும், நீங்கள் தவறு செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிட்டார்.
இந்த மசோதா பொறுப்பற்ற முறையில் அமெரிக்காவின் தேசிய கடனை அதிகரிக்கும் என்று கூறிய ஈலோன் மஸ்க், செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தங்கள் பிரதிநிதிகளை தொலைபேசியில் அழைக்குமாறு தனது ஆதரவாளர்களை ஊக்குவித்தார்.
வியாழக்கிழமையன்று ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, டிரம்ப் அந்த மசோதாவை ஆதரித்துப் பேசினார்.
“இந்த மசோதாவின் உள் செயல்பாடுகளை ஈலோன் இங்குள்ள பலரையும்விட நன்றாக அறிந்திருந்தார். அதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். திடீரென அவருக்குப் பிரச்னை ஏற்பட்டது” என்று கூறினார்.
மின்சார வாகனங்களுக்கான மானியங்கள் மற்றும் உத்தரவுகள் நீக்கப்பட்டதால் மஸ்க் வருத்தமடைந்ததாகவும், இது அவரது டெஸ்லா வணிகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
“எண்ணெய் மற்றும் எரிவாயு மானியங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை (இது மிகவும் நியாயமற்றது). இருந்தாலும் மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைகளை மசோதாவில் வைத்திருங்கள். ஆனால், அந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள எல்லா ‘தேவையற்ற செலவுகளையும்’ நீக்குங்கள் (MOUNTAIN of DISGUSTING PORK)” என்று டிரம்பின் கூற்றை மறுத்து ஈலோன் மஸ்க் பதிவிட்டார்.
“பன்றி இறைச்சி” (Pork) என்பது அமெரிக்க அரசியலில், அரசாங்கம் வீணாகச் செலவழிக்கும் தொகைகளைக் குறிப்பிடும் சொல். குறிப்பாக, குறிப்பிட்ட குழுக்கள் அல்லது உள்ளூர் பகுதிகளின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் செய்யப்படும் அவசியமற்ற செலவுகள் இதில் அடங்கும்.
டிரம்ப் குறித்து ஈலோன் மஸ்க் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில், டிரம்புக்கு எதிராக நடந்த படுகொலை முயற்சிக்குப் பிறகு மஸ்க் டிரம்பை ஆதரித்தார். அதில் இருந்து இருவருக்கும் இடையிலான உறவு மலரத் தொடங்கியது.
டெஸ்லா நிறுவன தலைவர் ஈலோன் மஸ்க், டிரம்பை மீண்டும் அதிபராகப் பதவியில் அமர்த்துவதற்காக சுமார் 290 மில்லியன் டாலர்களை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பல பதிவுகளை வெளியிட்ட மஸ்க், கடந்த நவம்பர் மாத தேர்தலில் குடியரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குத் தானே காரணம் எனக் கூறினார்.
“நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பார். ஜனநாயகக் கட்சி அமெரிக்க நாடளுமன்றத்தைக் கட்டுப்படுத்தியிருக்கும். குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் 51-49 என்ற விகிதத்தில் மட்டுமே இருந்திருப்பார்கள்”என்று பதிவிட்டார். அதோடு, “டிரம்புக்கு நன்றியுணர்வு இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் தன்னைப் பின்தொடர்பவர்களிடம், “அமெரிக்காவில் நடுநிலையில் உள்ள 80% மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” என்று மஸ்க் கேள்வி எழுப்பினார்.
அதே நாளில், டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்ட ஒரு ட்வீட்டை மீண்டும் பகிர்ந்த மஸ்க், டிரம்பின் உலகளாவிய வரித் திட்டம் அமெரிக்காவில் மந்தநிலையை ஏற்படுத்தும் என்று கூறினார்.
மேலும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய வெளியிடப்படாத ஆவணங்களில் டிரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதை எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூலை 2019இல் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். அப்போது டிரம்ப் அதிபராக இருந்தார்.
“பாம் பீச்சில் உள்ள அனைவருக்கும் அவரைத் தெரிந்தது போல” எப்ஸ்டீனை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் “நீண்ட காலத்திற்கு முன்பே அவருடன் கருத்து வேறுபாடு இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார்.
வெள்ளை மாளிகை, ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டைக் கண்டித்தது. “இது ஈலோனின் துரதிர்ஷ்டவசமான அத்தியாயம், அவர் விரும்பிய கொள்கைகள் அதில் இல்லாததால் ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவில் அதிருப்தி அடைந்துள்ளார்” என்று பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், மஸ்க் “பைத்தியமாகிவிட்டார்” என்று கூறிய டிரம்ப், “நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களில் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும். பைடன் அதைச் செய்யாதது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருந்தது” என்று பதிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் போன்ற மஸ்கின் நிறுவனங்கள் அமெரிக்க அரசுடன் நேரடித் தொடர்புகளில் இருக்கின்றன. மேலும் பல தொழில்களைப் போலவே, மானியங்கள் மற்றும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் மூலம் பயனடைகின்றன.
அதற்குப் பதிலளித்த மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் “அதன் டிராகன் விண்கலத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவதற்கான பணிகளைத் தொடங்கும்” என்று கூறினார்.
இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மக்களையும் பொருட்களையும் அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அச்சுறுத்தும் விதமாகக் கூறிய அந்தக் கருத்தைப் பின்னர் மஸ்க் திரும்பப் பெற்றார்.
அவரை அமைதியடையுமாறு, எக்ஸ் தளத்தில் கூறப்பட்ட ஒரு பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, “சரி, நாங்கள் டிராகன் விண்கலத்தின் பணிகளை நிறுத்த மாட்டோம்” என்று மஸ்க் பதிவிட்டார். இந்த விவகாரம் பொதுவெளியில் பரவிய சில மணிநேரங்களுக்குள் டெஸ்லாவின் பங்கு 14% வீழ்ந்தது.
எந்தக் கட்சிகளுக்கும் சார்பாக இல்லாத காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகத்தின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ள செலவு மசோதா 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் தேசிய கடனை 2.4 டிரில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என்றும், சுமார் 11 மில்லியன் மக்கள், அரசு ஆதரவு கொண்ட சுகாதாரக் காப்பீடு இல்லாமல் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.
ஆனால் அந்தப் புள்ளிவிவரங்களை மறுக்கும் வெள்ளை மாளிகை, அதிகரித்த கட்டணங்களால் கிடைக்கும் வருவாயைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறுகிறது.
அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறையில் (Department of Government Efficiency) அரசாங்கத்தின் செலவுகளைத் தீவிரமாகக் குறைக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட மஸ்க், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) போன்ற துறைகளில் பெருமளவில் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊழியர்களை மொத்தமாக நீக்கத் தொடங்கினார்.
மொத்தமாக, 180 பில்லியன் டாலர் பணத்தை சேமித்ததாக, அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறை கூறுகிறது. ஆனால் சர்ச்சைக்குரியதாக உள்ள அந்த எண்ணிக்கை, 2 ட்ரில்லியன் டாலர் வரை செலவினங்களைக் குறைக்கும் மஸ்க்கின் ஆரம்ப இலக்கைவிட மிகவும் குறைவாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU