SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
-
2 மணி நேரங்களுக்கு முன்னர்
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளத்தில் 140 தொகுதிகளில் சுமார் 2.7 கோடி பேரும், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் சுமார் 9.5 லட்சம் பேரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்காக கேரளாவில் 30,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 1000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
இவற்றில் முறையே 2040 மற்றும் 209 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கேரளத்தில் 883 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 294 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படை கம்பெனிகள் கேரளத்தில் 160, புதுச்சேரியில் 45 என்ற எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கேரளா மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர் வெளியிட்ட தகவல்களின்படி தேர்தல் குறித்த பல்வேறு விவரங்கள்:
சட்டப்பேரவைத் தொகுதிகள் –140
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,71,42,952
ஆண் வாக்காளர்கள்: 1,32,20,811
பெண் வாக்காளர்கள்: 1,39,21,868
மூன்றாம் பாலினம்: 273
முதல் முறையாக வாக்களிப்பவர்கள் (18–19 வயது): 4,66,408
வெளிநாடு வாழ் வாக்காளர்கள்: 2,23,558
தபால் வாக்காளர்கள்: 53,984
மொத்த வாக்குச்சாவடிகள்: 30495
பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டவை: 2040
கூடுதலாக இம்முறை அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள்: 5000
பெண் வேட்பாளர்கள்: 92
மொத்த வேட்பாளர்கள்: 883
தேர்தல் பணியில் ஈடுபடுவோர்: 1.46 லட்சம் பேர்
பட மூலாதாரம், Getty Images
மாநிலம் முழுவதும் 160 மத்திய பாதுகாப்புப் படை கம்பெனிகள் உட்பட மொத்தம் 76 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் விபரங்கள்:
இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) – 86 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) – 25 தொகுதிகள்
கூட்டணிக் கட்சிகள் – 29 தொகுதிகள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்)
இந்திய தேசிய காங்கிரஸ் – 95 தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 27 தொகுதிகள்
கேரள காங்கிரஸ் (ஜோசப் பிரிவு) – 8 தொகுதிகள்
ஆர்எஸ்பி (ஆர்.எஸ்.பி), ஃபார்வர்ட் ப்ளாக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள்– 10 தொகுதிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ)
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) – 99 தொகுதிகள
பாரத தர்ம ஜனசேனா (பி.டி.ஜே.எஸ்) – 22 தொகுதிகள்
டுவென்டி-20 கட்சி: 19 தொகுதிகள்

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
கேரளாவில் 130 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகமாகவுள்ளனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் பெண் வாக்காளர்களே அதிகம். மலப்புரம் மாவட்டமே அதிக ஆண் வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாகவுள்ளது. .
காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம், மலப்புரம் மாவட்டத்தின் கொண்டோட்டி, ஏரநாடு, மலப்புரம், வேங்கரா, வள்ளிக்குன்னு, திரூரங்காடி, திரூர், கோட்டைக்கல் ஆகிய தொகுதிகளில் மட்டுமே ஆண் வாக்காளர்கள் பெண்களை விட அதிகமாக உள்ளனர்.
இந்த முறை மொத்தம் 2,23,558 வெளிநாடு வாழ் வாக்காளர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 1,90,090 ஆண்கள், 33,458 பெண்கள் மற்றும் 10 திருநங்கைகள் அடங்குவர். அதிக வெளிநாடு வாழ் வாக்காளர்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் (57,679) உள்ளனர். அடுத்ததாக கண்ணூரில் 52,163, மலப்புரத்தில் 39,501, திருச்சூரில் 22,249 பேர் உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டியிடுகின்றன. போட்டியிடும் 3 கூட்டணிகளில், இடது ஜனநாயக முன்னணி மட்டுமே முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பினராயி விஜயனை முன் நிறுத்தியுள்ளது. மற்ற இரு கூட்டணிகளிலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய வேட்பாளர்களாக கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் (நேமம் தொகுதி), வி.முரளீதரன் (கழக்கூடம்), ஷோபா சுரேந்திரன் (பாலக்காடு) ஆகியோர் களம் காண்கின்றனர்.
10 லட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களை கொண்ட புதுச்சேரி!
பட மூலாதாரம், Getty Images
மாநில அந்தஸ்து கேட்டு வரும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இன்று சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ள தகவலின்படி தேர்தல் குறித்த சில விபரங்கள்:
மொத்தமுள்ள தொகுதிகள்: 30
புதுச்சேரி மாவட்டம்: 7,21,296 வாக்காளர்கள்
காரைக்கால் மாவட்டம் : 1,55,515 வாக்காளர்கள்
ஏனாம் தொகுதி: 37,664 வாக்காளர்கள்
மாஹே : 29,736 வாக்காளர்கள்
மொத்த வாக்குச்சாவடிகள்: 1099
பதற்றமான வாக்குச்சாவடிகள்: 209
மொத்த வேட்பாளர்கள்: 294
சுயேச்சை வேட்பாளர்கள்: 117

புதுச்சேரியின் பெரிய தொகுதியாக வில்லியனூர் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 42,679 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக உழவர்கரை தொகுதியில் 39,879 பேரும், ஏனாம் தொகுதியில் 37,664 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதியான ராஜ்பவனில் 20,962 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக – லஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் – திமுக – விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி மாஹே, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுகின்றன. பெரிய கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரும், இந்தத் தேர்தலில் சுயேச்சையாக நிற்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



