Home Latest news tamil சமீபத்திய செய்தி கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன?

கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன?

4
0

SOURCE :- BBC NEWS

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி, தக் லைஃப் திரைப்படம், ராஜ் கமல் ஃபிலிம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 ஜூன் 2025, 01:58 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 ஜூன் 2025, 05:32 GMT

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார்.

கமல்ஹாசன் அவரைப் பற்றிப் பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என்று பேசியிருந்தார். சிவராஜ்குமார் இதைக் கேட்டுப் புன்னகைத்தார்.

ஆனால், கமல்ஹாசனின் கன்னட மொழித் தோற்றம் குறித்த இந்தக் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சரில் துவங்கி, கன்னட அமைப்புகள் வரை இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இருந்தபோதும், தனது பேச்சுக்காகப் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

இப்போது இந்தப் பிரச்னையின் காரணமாக ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது.

திராவிட மொழிகளில் பல மொழிகள் அல்லது அனைத்து மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்து புதிதானதல்ல. நீண்ட காலமாகவே தமிழ்த் தேசிய கருத்தாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்பதில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியா, சகோதர மொழியா?

திராவிட மொழிகள் குறித்த ஒரு விரிவான ஒப்பீட்டு ஆய்வை முதன்முதலில் செய்தவராக 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயப் பரப்பாளரும் மொழியியலாளருமான ராபர்ட் கால்ட்வெல்லை குறிப்பிடலாம்.

இவருடைய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) நூல் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை முறையாக ஒப்பிட்டு, சில கருத்துகளை முன்வைத்தது.

“தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், இந்தோ – ஆரிய மொழிகளில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்த, திராவிடம் எனும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை” என்ற கருத்தை கால்ட்வெல் முன்வைத்தார்.

மேலும், தொல் திராவிட மொழி என்ற மொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும் இந்த தொல் திராவிட மொழியோடு, தமிழே கூடுதல் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் ராபர்ட் கால்ட்வெல்.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் தமிழ் திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருத்தை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்வைத்தனர். இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கருத்து ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மொழியியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே பேசுகின்றனர்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி,

பட மூலாதாரம், Getty Images

திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்பதையும் தனித்துவமான இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் ஏற்கும் இவர்கள், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது என்பதை ஏற்பதில்லை.

செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் ஸ்வலபில், திராவிட மொழிகளின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் தொல் தென் திராவிட மொழிகள் சிதற ஆரம்பித்தன.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக நிலை பெற ஆரம்பித்தது என்ற கருத்தை திராவிட மொழிகளின் வரலாற்றாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில், பழங்கால தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டத்தில், செய்யுள் என்ற வடிவத்தை உருவாக்குவதில் இலக்கணவாதிகள் கவனம் செலுத்தினார்கள்,” எனத் தன்னுடைய The Smile of Murugan நூலில் குறிப்பிடுகிறார்.

இவரது இந்தப் புத்தகத்தில், “தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்” என்ற சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் துவக்க கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் பிரதி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி,

பட மூலாதாரம், Getty Images

ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது.

“கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. இலக்கண ரீதியாக இந்த இரு மொழிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழில் இருந்து கன்னடம் வேறுபடுவதைவிட, தெலுங்கு மொழியிடம் இருந்து கூடுதலாக வேறுபடுகிறது” என்கிறார் ஆர். நரசிம்மாச்சார்யா.

தொல் திராவிட மொழியில் இருந்தே, பிற திராவிட மொழிகள் தோன்றியதாக ஒரு கருதுகோள் வைக்கப்படும் நிலையில், அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரின் இயக்குநரான எம்.டி. முத்துக்குமாரசாமி.

“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் பிற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை எனக் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக தொல் திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி, தமிழ்தான் என்றார்.

அவரைப் பொறுத்தவரை, எல்லா திராவிட மொழிகளும் சகோதர மொழிகள் எனக் குறிப்பிட்டார். இவருக்குப் பிறகு வந்த மொழியியலாளர்கள் இந்த தொல் திராவிட மொழிகளை வடக்கு தொல் திராவிடம், தெற்கு தொல் திராவிடம் என்பன உள்படப் பல வகைகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்,” என்று விளக்கினார் எம்.டி.முத்துக்குமாரசாமி.

மேலும், “திராவிட வேர்ச்சொல் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டது. இந்த வேர்ச்சொல் அகராதியில் இடம்பெற்ற பெரும்பாலான சொற்களின் மூலம் தமிழாகவே இருந்தது. அது தவிர, கன்னட மொழியில் உரைநடையே 10ஆம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது.

ஆகவே இப்போதைய கேள்வி, தமிழ் கன்னடத்துக்கு அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லோரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது,” என்றும் அவர் விவரித்தார்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி,

பட மூலாதாரம், Getty Images

எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் தமிழிலில் இருந்து பிற திராவிட மொழிகள் தோன்றின என்று கூறுவது சரியான கருத்தல்ல என்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், “மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது.

மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிற்சில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது. மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் ‘தாய்-சேய் உறவு’ என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியில் இருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒரு வகையில் ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்கிறார் அவர்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி, தக் லைஃப் திரைப்படம், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் , நடிகர் சிவராஜ்குமார்

பட மூலாதாரம், NimmaShivanna/X

தமிழ்நாட்டில் உள்ள பல மொழியியலாளர்கள் இந்தச் சர்ச்சையில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள். எதிர்பார்த்தபடியே கன்னட மொழியியலாளர்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

“தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறான கருத்து. தமிழும் கன்னடமும் சகோதர மொழிகள். ஒரு மூத்த மொழியில் இருந்து பிறந்த மொழிகள். தொல் திராவிட மொழியில் இருந்துதான் கன்னடம் தோன்றியதே தவிர, தமிழில் இருந்து தோன்றவில்லை,” என்கிறார்.

இந்த இரு மொழிகளிலும் தொல் திராவிட மொழியின் வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதே இதற்குக் காரணம். “உதாரணமாக, காதைக் குறிப்பிட கன்னடத்தில் கிவி என்கிறோம். தமிழில் செவி என்கிறார்கள். இந்த இரண்டு சொற்களும் ஒரே தொல் திராவிட மொழியில் இருந்து உருவான இருவேறு ஒலிப்புகள். ஆகவே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறானது” என்கிறார் கன்னட மொழி வளர்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ்.ஜி. சித்தராமைய்யா.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி, தக் லைஃப் திரைப்படம், ராஜ் கமல் ஃபிலிம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள், தென் மத்திய திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

தென் திராவிட மொழிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், இருளா, கொடவா, தோடா, கோட்டா, படகா, கொரகா, துளு உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன.

தென் மத்திய திராவிட மொழிப் பிரிவில் தெலுங்கு, கோண்டி, குயி, கோயா உள்ளிட்ட மொழிகளும் மத்திய திராவிட மொழிப் பிரிவில் கோலமி, துருவா, ஒல்லரி, நாய்க்கி ஆகிய மொழிகளும் வட திராவிட மொழிப் பிரிவில் குருக், மால்டோ, ப்ராஹுவி ஆகிய மொழிகளும் இடம்பெற்றுள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC