Home தேசிய national tamil இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – இதுவரை...

இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – இதுவரை நடந்தது என்ன?

27
0

SOURCE :- BBC NEWS

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters

28 பிப்ரவரி 2026, 16:58 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் “முக்கிய போர் நடவடிக்கைகள்” குறித்து விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அரசுப் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, இரான் மீது இஸ்ரேல் “தற்காப்புத் தாக்குதலை” நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல வாரங்களாக நீடித்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இரானில் என்ன நடந்தது?

இரான் நேரப்படி காலை 09:30 மணிக்குச் சற்று முன்னதாக (06:00 GMT), தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

பிபிசி பார்த்த புகைப்படங்கள் நகரத்தின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்திற்கு மேல் புகை மூட்டம் இருப்பதைக் காட்டுகின்றன.

இஸ்பஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்தவர்கள் பீதியில் ஓடுவதைக் காட்டுகின்றன. அலறல் சத்தங்களும் அழுகை சத்தங்களும் பின்னணியில் கேட்கின்றன. உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை.

உள்ளூர் அதிகாரி ஒருவர் அரசு ஊடகத்திடம் கூறுகையில், இரானின் தெற்கு மாகாணமான மினாப்பில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை பிபிசியால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை.

தாக்குதல்களுக்குப் பிறகு இரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters

“பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான” நடவடிக்கை என்று இதனை டிரம்ப் விவரித்துள்ளார்.

பல சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் டெஹ்ரான் முழுவதும் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன.

இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. கட்டடம் நேரடியாகத் தாக்குதலுககு இலக்கானதா என்பது வீடியோ கோணத்தில் தெளிவாகத் தெரியவில்லை.

இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சரிபார்க்கப்பட்ட புகைப்படம், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் சிறிய மளிகைக் கடைகளுக்கு மேலே அடர்த்தியான, இருண்ட புகை மண்டலம் எழுவதைக் காட்டுகிறது. நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூட்டுத் தாக்குதல்களை “முற்றிலும் தூண்டப்படாத, சட்டவிரோதமான தாக்குதல்” என்று விவரித்தார்.

முன்னதாக, இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள “தனது அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவத் திறன்களையும் சட்டப்பூர்வமான சுய பாதுகாப்பு உரிமையின் கீழ்” பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.

அருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் தொலைபேசி அழைப்புகளில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் “அந்த நாடுகளின் வசதிகள் மற்றும் நிலப்பரப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறுப்பு உண்டு” என்பதை நினைவூட்டினார் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன?

அமெரிக்காவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்றை டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டார்.

“சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரான் மீது பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது” என்று அவர் கூறினார்.

“இரானிய ஆட்சியிடமிருந்து வரவிருக்கும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்” என்று கூறிய அவர், “இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை உறுதி செய்வதே” அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

மேலும், இரானிய மக்கள் தங்குமிடங்களிலேயே இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்,” என்று கூறிய அவர், “அதைப் பெற்றுக்கொள்வது உங்கள் கையில் இருக்கும். தலைமுறை தலைமுறையாக உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்”என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அனைத்து இரானிய மக்களும் “அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான மற்றும் அமைதியான இரானைக் கொண்டு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், இரான் ” மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது” என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.”

மேலும், இஸ்ரேலிய குடிமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் “சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை” அறிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இரான் எவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது?

இரான் சார்பில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது, மேலும் “தேவைப்படும் இடங்களில் அச்சுறுத்தல்களை இடைமறித்து தாக்க” தாங்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மற்றும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன, ஆனால் அவை ஏவுகணைகள் விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டதா என்பது குறித்துத் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் சேவை மையம் “ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக” பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரகால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது.

அத்தியாவசியத் தேவையின்றி இஸ்ரேலியர்கள் கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல் திங்கள்கிழமை இரவு 20:00 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இஸ்ரேலின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU