SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு “மிகவும் வழக்கத்துக்கு மாறானது” என்றார்.
எதற்காக இந்த நடவடிக்கை?
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் “தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான” அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார்.
பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது.
அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், “இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்” என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல்
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது.
இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, “அவசர நடவடிக்கை தேவைகளுக்காக” அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன.
F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம்.
இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான “அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்” என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார்.
பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு
இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator – MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் “பங்கர் பஸ்டர்ஸ்” என்றும் அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும்.
டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும்.
“[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.” என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை.
வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
“இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்.”
மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU