SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், TN DIPR
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், விழா மேடையிலேயே கீழ்க்கண்ட 3 உத்தரவுகளை பிறப்பித்தார்.
- 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்
- சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை
- போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை
தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் சிலவற்றை சுருக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மின் கட்டண சலுகை
த.வெ.க. தேர்தல் அறிக்கையில்,”தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் அரசாணைகளில் ஒன்றாக மின் கட்டண சலுகை உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனவும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற நடைமுறை தொடரும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடுவது அமல்படுத்தப்படும் என்றும் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
“மதிப்புமிகு மகளிர் திட்டம்”
ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும் வரையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடர வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்
“அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும், என த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
பட மூலாதாரம், TNDIPR
அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்
தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் நகரப் பேருந்து உள்ளிட்ட குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் “வெற்றிப் பயணம்” திட்டம் செயல்படுத்தப்படும், என த.வெ.க. தேர்தல் அறிக்கை உறுதியளித்திருந்தது.
“அண்ணன் சீர் திட்டம்”
ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம்(சவரன்) தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும் என த.வெ.க. உறுதியளித்திருந்தது.
“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்”
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் மென்மையான துணி, டயப்பர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என த.வெ.க. உறுதியளித்திருந்தது.
“காமராஜர் கல்வி உறுதித் திட்டம்”
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் அல்லது காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக வரவு வைக்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம்
தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட துரிதப் பணியாளர்களின் நலன் கருதி (GIG Workers), தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும் என தேர்தல் அறிக்கை கூறுகிறது.
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : BBC



