Home Latest news tamil சமீபத்திய செய்தி வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?

வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?

3
0

SOURCE :- BBC NEWS

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 7 ஏப்ரல் 2025, 02:45 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 ஏப்ரல் 2025, 06:34 GMT

எதிர்க்கட்சியினரின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கிஷண்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான, காங்கிரஸைச் சேர்ந்த முகமது ஜாவேத் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஓவைசி ஆகிய இருவரும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த வாரத்தில் வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்த போது, இஸ்லாமிய அமைப்புகளும் தலைவர்களும் அதற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வக்ஃப் வாரியத்தின் கட்டமைப்பு, சொத்துரிமை மற்றும் நீதி செயல்முறை போன்ற முக்கிய அம்சங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வக்ஃப் சொத்துகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல் போன்றவற்றை ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியினர் இது மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜாவேத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அனஸ் தன்வீர் பிபிசி இந்தியிடம் இது குறித்து பேசும் போது, “இந்த திருத்த சட்டத்தின் அடிப்படையானது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 25 (டி) மற்றும் 26 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது. இந்த சட்டத்திற்கு பிறகு வக்ஃப் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

சட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் என்ன?

இந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சில் போன்றவற்றின் கட்டமைப்பை மாற்றியுள்ளது அரசாங்கம். இஸ்லாமியர் அல்லாதவர் அந்த குழுவில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பை இந்த சட்டம் உருவாக்கியுள்ளது.

வக்ஃப் சொத்துகளை கணக்கெடுப்பதற்கான உரிமை வக்ஃப் ஆணையரிடம் இருந்து பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஆக்கிரமித்திருக்கும் நிலம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவே இறுதியானது.

இதற்கு முன்னதாக சொத்துகள் சம்பந்தமாக வக்ஃப் தீர்ப்பாயம் எடுக்கும் முடிவே இறுதியானதாக கருதப்பட்டது. தற்போது, இந்த முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட இயலும்.

மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சொத்துக்கள் (Waqf by User) இனி வக்ஃபாக கருதப்படாது. புதிய சட்டத்திருத்தத்தில் இதற்கான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதாவது மசூதி, கல்லறை உள்ளிட்ட மதம் மற்றும் சேவை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சொத்துகள் முறையாக வக்ஃப் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் அது வக்ஃப்வாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய சட்டத்தின் கீழ் இனி அவ்வாறு கருதப்பட மாட்டாது.

இறைத்தொண்டுக்காக ஒருவர் சொத்தை வக்ஃபாக வழங்க வேண்டும் என்றால் அவர் கடந்த ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றும் நபராக இருந்திருக்க வேண்டும்.

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்

பட மூலாதாரம், ANI

வக்ஃப் வாரியம் மற்றும் கவுன்சிலில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு இடம்

திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள திருத்தங்களில் பலத்த எதிர்ப்பைப் பெற்றது வக்ஃப் கட்டமைப்புகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.

இதற்கு முன்னதாக வக்ஃப் சட்டம் 1995-ன் கீழ், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களாக இருக்க இயலும்.

ஆனால் இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. வருங்காலங்களில் அரசாங்கமே இந்த இரண்டு அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிக்கும். வாரியங்கள் மற்றும் கவுன்சிலில் குறைந்தது இரண்டு இஸ்லாமியர் அல்லாதோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த கைரானா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இக்ரா ஹாசன் இந்த மாற்றம் தொடர்பாக, “இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃப்-க்கு நன்கொடை வழங்க இயலாது. ஆனால் வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியத்தின் உறுப்பினராக முடியுமா,” என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.

அரசு சார்பில் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த மாற்றம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் எத்தகைய இடையூறையும் ஏற்படுத்தாது என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபுசால் அஹ்மது அயூபி இது தொடர்பாக பேசிய போது, “சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக இருப்பார்கள்,” என்று நம்புவதாக தெரிவித்தார்.

முந்தைய சட்டத்தில் அமைச்சர் தவிர்த்து கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க இயலும். ஆனால் திருத்தச் சட்டத்திற்கு பிறகு, மத்திய வக்ஃப் கவுன்சிலில் 22 உறுப்பினர்களில் 12 பேரும், மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் 11-ல் 7 பேரும் இஸ்லாமியர் அல்லாதோர் இடம் பெறக் கூடும். இது குறித்த கவலையை சில இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படுத்தின.

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்

பட மூலாதாரம், ANI

வக்ஃப், நன்கொடை, பயனர்களால் அளிக்கப்பட்ட வக்ஃப் மீது எழும் கேள்விகள்

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, வக்ஃப் என்பது சேவைகளுக்காக வழங்கப்படும் நன்கொடையாக கருதப்படுகிறது. மசூதி, கல்லறை, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வறியவர்களுக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

வக்ஃப் சொத்தை நன்கொடையாளர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, மசூதியின் பராமரிப்பு தேவைகளுக்காக ஒருவர் இடத்தை நன்கொடையாக வழங்குகிறார் என்றால் அந்த நிலத்தை வேறெந்த தேவைகளுக்காகவும் பயன்படுத்தக் கூடாது.

ஆனால் தற்போது இந்த அம்சமும் கேள்விக்குறியாகியுள்ளது. “வக்ஃப் சொத்துகளில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்குவது மற்றும் விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் (Waqf by User) என்ற பிரிவு, மத தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட சொத்து வக்ஃபாக கருதப்படுவதை உறுதி செய்தது. ஆனால் புதிய திருத்தச் சட்டத்தின் படி, இதுபோன்ற சொத்துகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும் வரை அந்த சொத்து வக்ஃபாக கருதப்படாது.

“இது தொடர்பாக ஏற்கனவே, எம்.சித்திக் vs சுரேஷ் தாஸ் வழக்கில், 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது,” என்று அனஸ் தன்வீர் கூறினார்.

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்

பட மூலாதாரம், Getty Images

ஆட்சியருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறித்த குற்றச்சாட்டு

இதற்கு முன்னதாக வக்ஃப் சொத்தை கணக்கெடுக்கும் பொறுப்பு வக்ஃப் ஆணையரிடம் இருந்தது. தற்போது திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் வக்ஃப் சொத்துகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதியானதாக கருதப்படும்.

அரசாங்கத்தின் சொத்துகள் ஏதேனும் வக்ஃப் என்று அடையாளம் காணப்பட்டால், அது வக்ஃபாக கருதப்படாது என்று திருத்தச் சட்டம் கூறுகிறது.

தீர்க்கமான முடிவு இதில் எட்டப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அந்த சொத்து யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்து அது தொடர்பான அறிக்கையை மாநில அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பார்.

உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மஹமூத் ப்ரச்சா இது தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். “வருவாய் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஒரு வாதியாக இருக்கும் போது, அவர் எப்படி நடுநிலைத் தன்மையுடன் செயல்படுவார்? எந்த ஒரு நிலத்தையும் வக்ஃபாக அறிவிப்பதற்கு முன்பு, நிலத்தை அளவீடு செய்யும் அரசாங்க ஊழியர் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பிவைப்பார். அதில் ஏதேனும் பிரச்னை இருக்கும் போது அது சரி செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

புதிய திருத்தச் சட்டத்தின் கீழ், வக்ஃப் தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானது அல்ல. தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். இது வழக்கில் தீர்ப்பு கிடைப்பதை மேலும் தாமதப்படுத்தும்.

இருப்பினும், முன்பும் தற்போதும் உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அங்கே மேல் முறையீடு செய்ய இயலும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வக்ஃப்

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பிரிவு, ஒருவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் சொத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அவரால் அந்த சொத்துக்கு உரிமை கோர இயலும் என்பதாகும்.

இந்த பிரிவு இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரச்சா இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய போது, “ஒரு சமூகத்தின் பொது நிலமே வக்ஃபாகும். இது போன்ற ஒரு பிரிவு அரசாங்க நிலத்திற்கு எப்படி பொருந்தாதோ அப்படியே வக்ஃப் சொத்துகளுக்கும் பொருந்தாது,” என்று தெரிவித்தார்.

இது நாள் வரை வக்ஃப் சொத்துகள் நில உச்ச வரம்பு சட்டத்திற்கு வெளியே இருந்தன. அதாவது எப்போது வக்ஃப் வாரியம், ஒரு சொத்து அதற்கு உரியது என்று கண்டுபிடிக்கிறதோ அப்போது அந்த சொத்திற்கு உரிமை கொண்டாடும் நபர்களை அங்கிருந்து வெளியேற்ற வழக்கு பதிவு செய்ய இயலும்.

ஆனால் இந்த புதிய பிரிவு காராணமாக, ஒருவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அவர் அந்த சொத்திற்கு உரிமை கொண்டாட இயலும்.

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்

பட மூலாதாரம், ANI

அரசாங்கம் கூறுவது என்ன?

இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்ஃப் நிர்வாகத்தை புதுமைப்படுத்தி சிறப்பான மேலாண்மையை ஏற்படுத்தவே இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு கூறுகிறது.

இரண்டு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த தருணத்தை மிகவும் முக்கியமானது என்றும் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய மேம்பாட்டை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிகப்பெரிய அடி இது என்றும் வர்ணித்தார் பிரதமர் நரேந்திர மோதி.

“பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பானது வெளிப்படைத்தன்மை அற்றும், பொறுப்புக்கூறல் இல்லாத ஒன்றாகவும் இருந்தது. இஸ்லாமிய பெண்கள், வறிய இஸ்லாமியர்கள் மற்றும் பஸ்மந்தா இஸ்லாமியர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்,” என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் மோதி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC