Home தேசிய national tamil நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

6
0

SOURCE :- BBC NEWS

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

வான்கெடேவில் நடந்த இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹர்திக் பாண்டியாவின் அணி.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அரைசதம் அடித்தனர். மும்பைக்காக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான்.

இந்தப் போட்டியில் அந்த அணியை வெற்றி பெறவைத்த 3 வீரர்கள் யார்?

ஷார்துல் தாக்கூர்: கேகேஆர் பிடியைத் தளர்த்தினார்

நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின்போது தான் முதல் முறையாகப் பந்துவீச வந்தார் ஷார்துல் தாக்கூர். மும்பைக்காரரான அவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதுவும் முதல் போட்டியே சொந்த மண்ணில். இதுவே அவருக்கு நெருக்கடியான தருணமாக இருந்திருக்கும்.

சொல்லப்போனால், அப்போது ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் நெருக்கடியில் இருந்தது. ஏனெனில், முதல் 5 ஓவர்களின் முடிவில் 68/0 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அந்த அணியின் முன்னணி பௌலர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஒரு டி20 போட்டியின் ஆறாவது ஓவரை வீசுவது எப்போதுமே சற்று சிக்கலானது. ஏனெனில், பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் பேட்டிங் செய்யும் அணிகள் அதை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள்.

இப்படி ஷார்துல் பந்துவீச வந்த தருணத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல்.

புற்கள் அதிகம் இருந்த வான்கெடே மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் ‘ஸ்விங் & சீம் மூவ்மென்ட்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி பெரிய அளவில் இல்லாததால், பேட்டர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். இந்நிலையில், மும்பை பௌலர்கள் ‘ஸ்லோ பால்கள்’ வீசத் தொடங்கினார்கள்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஷார்துல் தன்னுடைய முதல் பந்தை வீசியபிறகு, வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்கள் வீசுவதுதான் சரியாக இருக்குமென்று முடிவு செய்திருக்கிறார்கள். முந்தைய ஓவரில் (ஆட்டத்தின் 5வது ஓவர்) பும்ரா சுமார் 4 ஸ்லோயர் பால்கள் வீசினார். இப்போது ஷார்துலும் அதையே செய்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷார்துல் அதையே அடுத்த பந்திலும் செய்து ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றி கொல்கத்தாவின் அதிரடிக்கு முதல் வேகத்தடையைப் போட்டார்.

ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.

9வது ஓவரில் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷார்துல், அதன்பிறகு 14வது ஓவர் மீண்டும் பந்துவீச வந்தார். இம்முறை ஃபுல் லென்த்தில் ‘கிராஸ் சீம்’ பந்தை வீசினார். சற்று திரும்பிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே அதை சரியாக அடிக்காததால் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

ஆலன், கிரீன், ரஹானே என்று மூன்று பெரிய விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் வீழ்த்தி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸின் பிடியைத் தளர்த்தினார் ஷார்துல். இல்லாவிட்டால் கேகேஆர் இன்னும் பெரிய ஸ்கோரைப் பதிவு செய்திருக்கும். அது மும்பைக்கு ஆபத்தாக அமைந்திருக்கும்.

இப்படி அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

ஜஸ்ப்ரித் பும்ரா: வழக்கம்போல் நெருக்கடியை ஏற்படுத்தினார்

ரன்மழை பொழியும் பெரும்பாலான டி20 போட்டிகளில் தன் சிக்கனமான ஸ்பெல்களால் மாற்றத்தை ஏற்படுத்துவது ஜஸ்ப்ரித் பும்ராவின் வழக்கம். உதாரணம், இதே வான்கெடே மைதானத்தில் மார்ச் 5ம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி.

40 ஓவர்களில் 499 ரன்கள் அடிக்கப்பட்ட அந்தப் போட்டியில் 8.25 என்ற எகானமியில் பந்துவீசினார் பும்ரா. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய சஞ்சு சாம்சன், “பும்ரா இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்று இவ்விருதை வாங்கியிருக்கமாட்டேன்” என்று கூறினார்.

காரணம், அவர் வீசிய சிக்கனமான ஓவர்கள். 16வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அது இங்கிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது.

அப்படியொரு செயல்பாட்டைத் தான் நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் பும்ரா கொடுத்தார்.

11 ஓவர்கள் முடிவில் 131/2 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அப்போது தன்னுடைய இரண்டாவது ஓவரைப் பந்துவீச வந்த பும்ரா அந்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முதலிரு பந்துகளையும் ஸ்லோயர் பால்களாக வீசிய அவர், அதன்பிறகு வேகத்தை அதிகப்படுத்தினார். ஆனால், முதல் பந்தைத் தவிர்த்து அனைத்து பந்துகளையுமே யார்க்கர்களாக வீச முயற்சி செய்தார். அதை சிறப்பாகவும் அரங்கேற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

கேகேஆர் அணியின் ரன் விகிதம் அப்போதுதான் குறையத் தொடங்கியது. அடுத்த ஓவரில் போல்ட்டும் 8 ரன்கள் மட்டுமே கொடுக்க, கேகேஆர் பேட்டர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுதான் ரஹானே ஆட்டமிழக்க காரணமாக அமைந்தது.

இதன் பிறகு 18வது ஓவர் பந்துவீச வந்தார் பும்ரா. ரகுவன்ஷி – ரிங்கு சிங் இணை அதற்கு முந்தைய 3 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் எடுத்திருந்தனர். அப்படி அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். முதல் பந்தில் பவுண்டரி கொடுத்திருந்தாலும், அடுத்த 5 பந்தையும் சவால் தரும் வகையில் வீசினார். பின்னர் 20வது ஓவரிலும் அவர் 11 ரன்கள் மட்டும் கொடுக்க, ஒருவழியாக கேகேஆர் இன்னிங்ஸ் 220 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பும்ரா. இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் இவர் மட்டுமே.

ரோஹித் ஷர்மா: பவர்பிளேவிலேயே ஆட்டத்தை மாற்றினார்

221 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது ரோஹித் ஷர்மா – ரியான் ரிக்கில்டன் கூட்டணி. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்தங்கவைத்தார்கள். இதில் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இதில் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், கடினமான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தியைக் கூட அநாயசமாகக் கையாண்டார். பவர்பிளே முடியும்போதே அரைசதம் கடந்திருந்தார் அவர்.

வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பதம் பார்த்த ரோஹித், புல், டிரைவ், ஸ்கூப் என பலவகையான ஷாட்களையும் ஆடினார். அவருடைய முதல் பவுண்டரி ஒரு எட்ஜ் மூலம் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ஷாட்டும் மிகத் துல்லியமாக, அவரது பேட்டின் நடுப்பகுதியில் பட்டே பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாறியது.

இந்த இன்னிங்ஸ் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், “ரோஹித் சர்மா தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் தன்னைத்தானே மறுவரையறை செய்துகொள்வது மற்ற வீரர்களுக்கு உண்மையிலேயே ஒரு உத்வேகம் அளிக்கும் விஷயமாகும். தனது உடல் தகுதிக்காக கடினமாக உழைத்து, 38 வயதில் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்திருப்பது, அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு மிகச்சிறந்த செயல்பாடு.” என்று கூறியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சனும் இதே கருத்தை முன்வைத்து, நீண்ட காலம் ஆடுவது எப்படி என்பதற்கு ரோஹித் பாடம் எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இன்னிங்ஸ் தொடக்கத்தில் 11ஆக இருந்த மும்பையின் தேவைப்படும் ரன்ரேட், ரோஹித் அவுட் ஆகும்போது 9க்கு குறைவாக ஆனது. அந்த அளவுக்கு அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றிருந்தார் ரோஹித்.

ரிக்கில்டன் கூட இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்தார். ஆனால், பவர்பிளேவிலேயே அரைசதம் அடித்து அதிரடி தொடக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தது, வருண் சக்கர்வர்த்தி போன்ற கேகேஆர் அணியின் முன்னணி பௌலருக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடித்து அந்த அணியை அப்போதே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது போன்றவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU