Home தேசிய national tamil டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் ‘குழப்பம்’ – சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் ‘குழப்பம்’ – சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

20
0

SOURCE :- BBC NEWS

உச்சி மாநாட்டில் இடம்பெற்ற ஒரு ரோபோ

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் “முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு” என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன.

குழப்பங்களுக்கு மத்தியில் சில பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்கள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர்.

ரோபோ நாய் குறித்த சர்ச்சை

தவிர, இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் ஏஐ உச்சிமாநாட்டில் ஒரு ரோபோ நாயைத் தன்னுடைய தயாரிப்பு என்று கூறிக்கொண்டது, ஆனால் அது சீனாவைச் சேர்ந்தது.

இது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ரோபோ நாயைத் தாங்கள் உருவாக்கவில்லை என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது. முன்பு வெளியான செய்தியை “தகவல் தொடர்பு பிழை” என்று கூறியது. மேலும் மாநாட்டில் இருந்த தனது ஸ்டாலில் இருந்து வெளியேறியது.

நியோசேபியன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அரங்கைக் காலி செய்யச் சொன்னதாகவும், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் எழுதியுள்ளார்.

பின்னர் நிறுவனத்தின் சில அணியக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், “யோசித்துப் பாருங்கள், நாங்கள் விமானம், தங்குமிடம் மற்றும் பூத் வரை அனைத்திற்கும் செலவழித்துள்ளோம். பலத்த பாதுகாப்பு இருந்த இடத்திலிருந்தே எங்களது அணியக்கூடிய சாதனங்கள் மாயமாகிவிட்டன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குழுவினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்றால், இது எப்படி நடந்தது? இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ரீஸ்கில் நிறுவனர் புனீத் ஜெயின் ஆரம்பக்கால குழப்பங்களை விமர்சித்து, பல பிரதிநிதிகள் தண்ணீர் மற்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி வெளியே நின்று கொண்டிருந்ததாகக் கூறினார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை நிலைமை மேம்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார்.

தொழில்முனைவோர் பிரியான்ஷு ரத்னாகர் என்பவரும் நீண்ட வரிசைகள், அரங்குகளை அணுகுவதில் சிரமங்கள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் பதிவு தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டு, செயல்பாட்டை விட ‘காட்சிப்படுத்தல்’ (Show-off) அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதம்

இது ஒரு சர்வதேச நிகழ்வு மற்றும் இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையும் இந்த உச்சிமாநாட்டின் மீது உள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களில் இந்த உச்சிமாநாடு பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிறது.

அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க், “சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடு இந்த வாரம் குழப்பத்தில் சிக்கியது. திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கித் தவித்தனர். ஏஐ துறையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அந்த நிகழ்விற்கு இது ஒரு பின்னடைவாகும்,” என எழுதியது.

“இந்தியா ஏஐ உச்சிமாநாட்டின் முதல் நாளில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நிலைமை சீராவது தெரிந்தது. செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான கண்காட்சி வளாகத்தின் ஹால்களுக்கு இடையே தடையின்றி நடமாடுவதைக் காண முடிந்தது.”

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், “கென்யாவிலிருந்து வந்த மோசஸ் திகாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அளவு வியக்கத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு அவரைக் கவர்ந்தது. தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் பல மணிநேரம் வளாகத்திற்குள் அடைக்கப்பட்டு அல்லது வெளியே நிறுத்தப்பட்டதால் நிலவிய குழப்பங்கள் குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை,” என்று எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி அங்கு வரும் வரை அனைத்தும் சீராக நடந்ததாக திகா கூறினார்.

மோதியுடன் வந்த பாதுகாப்புப் படை முழு வளாகத்தையும் சீல் வைத்தது. நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோதி செல்லும் வரை தாங்கள் பல மணிநேரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி உள்ளேயே இருந்ததாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

‘திறன் குறித்து சந்தேகம்’

ராய்ட்டர்ஸ் தனது செய்தியில், இந்தியா எந்த நோக்கத்திற்காக ஏஐ உச்சிமாநாட்டை நடத்தியதோ, அதற்கு மாறாகத் திங்கள்கிழமை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எழுதியுள்ளது.

பங்கேற்பாளர்கள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் குறித்துப் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.

“பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு, சர்வதேச அளவிலான இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் என்பது வெறும் பிம்பம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மாறாக ஏற்பாட்டு ரீதியான குறைபாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் குறித்த செய்தியையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியது.”

ஏஐ வாய்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘போல்னா’ வின் இணை நிறுவனர் மைத்ரேய வாக் எக்ஸ் தளத்தில், “வாயில்கள் மூடப்பட்டுள்ளன, எனவே ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த பூத் வரை கூட என்னால் செல்ல முடியவில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்து போல்னா குழுவைச் சந்திக்க விரும்பினால், எனக்கு டிஎம் செய்யுங்கள்” என்று எழுதியுள்ளார்.

அவர் கிண்டலாக, “ஒருவேளை நாம் கன்னாட் பிளேஸில் உள்ள ஏதேனும் ஒரு கஃபேயில் ஒரு சிறிய மினி-பூத் அமைத்துக் கொள்ளலாம்” என்றார்.

உச்சி மாநாட்டில் ஒரு ரோபோவைக் காண குவிந்த மக்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா எதைச் சாதிக்க முடியும்?

பைனான்சியல் டைம்ஸ் இந்தியாவின் ஏஐ குறிக்கோள்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது செய்தியில், “இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு கடந்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது, இது சீனாவின் 2.5 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு” என்று எழுதியுள்ளது.

“இதில் பெரும்பகுதி செலவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்குச் செலவிடப்படுகிறது, இதனால் மக்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குக் குறைந்த அளவிலான வளங்களே மிஞ்சுகின்றன. 2022-இல் மின்னணு அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிடைத்தது.”

“இந்தியாவின் தனியார் துறையும் ஏஐ விவகாரத்தில் மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு வரை கூட தொழில்துறையின் சில மூத்த தலைவர்கள் இந்தியா தனது சொந்த பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினர் மற்றும் ஏஐ வளர்ச்சியை சிப் தயாரிப்பாளர்களால் பெரிதாக ஊதப்பட்ட பிரசாரம் என்று குறிப்பிட்டனர்.” என எழுதியுள்ளது

“இந்தியா உலகத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து வளர்ச்சிக்காக ஏஐ-யை ஆதரிக்க முடியும். ஆனால் நிகழ்வை நடத்துவதால் மட்டும் ஏஐ பந்தயத்தில் சமநிலையைப் பெற முடியாது,”

“ஏஐ உச்சிமாநாட்டை ஒரு ராஜீய காட்சியிலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்தியா உறுதியான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சூழலைச் சார்ந்து இருந்துகொண்டு இந்தியா உலகளாவிய தெற்கு பகுதியில் செயற்கை நுண்ணறிவில் முன்ன்னிலையில் இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.” என பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

உச்சி மாநாட்டு வளாகம்

பட மூலாதாரம், Getty Images

‘சவால் விடுவதற்கான ஒரு படி’

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ், “அமெரிக்கா மற்றும் சீனாவுடனான ஏஐ இடைவெளியைக் குறைப்பதற்கான பந்தயத்தில், இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்த ஒரு பிரமாண்டமான புதிய ‘டேட்டா சிட்டி’ திட்டத்தைத் தீட்டி வருகிறது.” என கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெய்ஜிங் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தின் மனித-இயந்திர தொடர்பு மற்றும் அறிவாற்றல் பொறியியல் ஆய்வகத்தின் இயக்குநர் லியூ வெய் செவ்வாய்க்கிழமை குளோபல் டைம்ஸிடம், ”இந்த உச்சிமாநாடு உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியாவின் தீவிரப் பங்களிப்பு முயற்சிகளையும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கான ஒரு படியாகும்” என்றார்.

“ஏஐ துறையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது,” என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது,

“இந்தியா ஈர்க்கக்கூடிய ஒரு செயல் திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அடிப்படை ஆராய்ச்சி, கணினி ஆதாரங்கள், திறமைகளின் ஆழம் மற்றும் சூழல் அமைப்பின் முதிர்ச்சி தொடர்பான சவால்கள் காரணமாகத் தனது முழுமையான ஏஐ திறனை அடையத் தொடர்ச்சியான முயற்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படும்,” என்று லியூ கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU