Home தேசிய national tamil “சிஐஏவின் ஏமாற்றும் உத்தி” – இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?

“சிஐஏவின் ஏமாற்றும் உத்தி” – இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?

7
0

SOURCE :- BBC NEWS

எஃப்15 போர்விமானம்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமை அன்று தெற்கு இரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் காணாமல் போன வீரரை அமெரிக்கா மீட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைதளத்தில் இந்த மீட்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே “மிகவும் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றைச் செய்து முடித்துள்ளது” என்று கூறினார். அந்த அதிகாரி “இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்!” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்தனர், இருவரும் விமானத்திலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்தார்.

தங்களது வான் பாதுகாப்பு அமைப்பால் அந்தப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கை மற்றும் அது எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே:

அந்த அதிகாரி எப்படி மீட்கப்பட்டார்?

தெற்கு இரானில் விமானம் வீழ்த்தப்பட்ட பிறகு, காணாமல் போன வீரரைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஒரு போட்டியே நடந்தது.

அமெரிக்க மீட்பு நடவடிக்கையின் துல்லியமான விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த நடவடிக்கையை நன்கு அறிந்த ஒருவர், இது தெற்கு இரானில் நடந்த ஒரு “மிகப்பெரிய” போர் காலத் தேடல் மற்றும் மீட்புப் பணி(combat search and rescue mission) என்று விவரித்தார்.

மீட்புப் பணியின் போது அமெரிக்க மற்றும் இரான் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், விமானத்திலிருந்து குதித்தபோது அந்த விமானிக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிபிசி புரிந்துகொள்கிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீரர்களை மீட்பது என்பது – ‘காம்பாட் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ’ (சிஎஸ்ஏஆர்) என அழைக்கப்படும் – அமெரிக்க ராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள் தயாராகும் மிகவும் சிக்கலான மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

சிஎஸ்ஏஆர் பணிகளுக்குப் பின்னால் உள்ள விமானப்படைப் பிரிவுகள், ராணுவத்தின் மிகவும் பயிற்சி பெற்ற மற்றும் சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டவை.

இந்தத் தேடுதல் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன, அவை எதிரி நிலப்பரப்பிற்கு மேல் தாழ்வாகப் பறக்கும். அவற்றுடன் தாக்குதல் நடத்தும் மற்றும் அப்பகுதியைக் கண்காணிக்கும் பிற ராணுவ விமானங்களும் உடன் செல்லும்.

டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், அந்த விமானி – ஒரு கர்னல் – “இரான் மலைப்பகுதிகளில் எதிரிகளால் வேட்டையாடப்படும் நிலையில், எதிரி எல்லைக்குள் இருந்தார், அவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்” என்று கூறினார்.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் கூறுகையில், அந்த விமானப் படை வீரர் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கைத்துப்பாக்கியுடன் மலைப்பகுதிகளில் மறைந்து கொண்டு, தனியாகவே நேரத்தைக் கழித்ததாகத் தெரிவித்தனர்.

அந்த விமானியின் இருப்பிடம், மீட்புத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த மூத்த அமெரிக்க அதிகாரிகளால் “24 மணி நேரமும்” கண்காணிக்கப்பட்டதாக அதிபர் மேலும் கூறினார்.

அமெரிக்க ராணுவம் இரானுக்குள் டஜன் கணக்கான விமானங்களை அனுப்பியதாகவும், அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

சிஐஏவின் பங்கு என்ன?

மலை இடுக்குகளில் மறைந்திருந்த அந்த விமானப் படை வீரரைக் கண்காணித்து, அவரது சரியான இருப்பிடத்தைப் பென்டகனுக்குத் தெரிவித்ததன் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையில் சிஐஏ மிக முக்கியப் பங்காற்றியதாக மூத்த அதிகாரி ஒருவர் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தார்.

அதே சமயம், அந்த முகமை இரான் நாட்டுக்குள் ஒரு ஏமாற்றும் உத்தியையும் (Deception campaign) கையாண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு முயற்சி நடந்து கொண்டிருந்தபோதே, அந்த வீரர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு இரான் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார் என்ற செய்தியை அந்த முகமை பரப்பியது.

காணாமல் போன விமானியைத் தேடிக்கொண்டிருந்தபோது இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் வீரர்கள் அமெரிக்க ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்க ட்ரோன் இரானின் தெற்கு இஸ்பஹான் மாகாணத்தில் விழுந்து நொறுங்கியதாக ஐஆர்ஜிசியின் மக்கள் தொடர்பு அலுவலகம் கூறியதாக பகுதி அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, காணாமல் போன அமெரிக்க வீரரை உயிரோடு கண்டுபிடிக்க விரும்புவதாக இரான் கூறியிருந்ததுடன், அவரை கண்டுபிடிக்க உதவும் குடிமக்களுக்கு வெகுமதி அளிப்பதாகவும் அறிவித்திருந்தது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீரர்கள் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள உயர் பயிற்சி பெற்றவர்கள்.

“அவர்களின் முதல் முன்னுரிமை உயிரோடு இருப்பதும், பிடிபடுவதைத் தவிர்ப்பதும்தான்” என்று பாதுகாப்பு முன்னுரிமைகள் என்ற சிந்தனை அமைப்பின் ராணுவ ஆய்வு இயக்குநர் ஜெனிஃபர் கவானாக் பிபிசியிடம் தெரிவித்தார்.

“அவர்கள் உடல் ரீதியாகத் தகுதியுடன் இருந்தால் – நகர முடியாத அளவுக்குக் காயம் ஏற்படவில்லை என்றால் – விமானம் விழுந்த இடத்திலிருந்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிச் செல்லவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மறைந்து கொள்ளவும் பயிற்சி பெற்றுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் எவ்வளவு காலம் இருக்க முடியும் அல்லது உள்ளூர் நிலப்பரப்பில் இருந்து ஆதாரங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது போன்ற உயிர்வாழும் நுட்பங்களிலும் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கவானாக் கூறினார்.

விமானம் எங்கே, எப்போது சுட்டு வீழ்த்தப்பட்டது?

தெற்குப் பகுதியில் அமெரிக்க விமானத்தை தங்கள் நாட்டுப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக இரான் அரசு ஊடகங்கள் முதலில் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

எஃப்-15 வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் துல்லியமான இடம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இரானின் அரசு ஊடகங்களில் கோகிலுயே மற்றும் போயர்-அகமது, மற்றும் குசெஸ்தான் ஆகிய இரண்டு மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்தனர். விமானத்தின் ஒரு வீரர் முன்னதாகவே மீட்கப்பட்டார். அந்த நடவடிக்கையில் வளைகுடாப் பகுதியில் தாக்கப்பட்ட ஏ-10 வார்தாக் விமானமும் அடங்கும், அதன் விமானி விமானத்திலிருந்து குதித்து தப்பிய பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

எஃப்-15இ விமானத்திலிருந்து மீட்கப்பட்ட வீரரை ஏற்றிச் சென்ற ஒரு ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அதிலிருந்த வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது – ஆனால் அது பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்க மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை, மலைப்பகுதிகளில் வசிக்கும் நாடோடிப் பழங்குடியினர் சுட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

குறைந்தது இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை நோக்கி மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் சுடுவதைக் காட்டும் வெள்ளிக்கிழமை வெளியான வீடியோவை பிபிசி வெரிஃபை (BBC Verify) சரிபார்த்தது.

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது புதிய இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் என்று இரானின் கூட்டு ராணுவ தலைமை கூறியதாக இரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோகிலுயே மற்றும் போயர்-அகமது பகுதி ஒரு மலைப்பாங்கான தென்மேற்கு மாகாணமாகும், இங்கு நாடோடிகள் உட்பட 7,00,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள நாடோடிகள் தங்கள் கால்நடைகளையும் முகாம்களையும் வனவிலங்குகள் மற்றும் திருட்டுகளிலிருந்து பாதுகாக்க துப்பாக்கிகளை வைத்திருப்பதாக அறியப்படுகிறது.

குசெஸ்தான் மாகாணம் எண்ணெய் மற்றும் பல தொழில்களின் மையமாக உள்ளது. இங்கு அரேபியர்கள், பெர்சியர்கள், லோர்கள் மற்றும் பிற இனக்குழுக்கள் உட்பட 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அந்த விமானத்தின் நோக்கம் பற்றி நமக்கு என்ன தெரியும்?

எஃப்-15இ (F-15E) விமானம் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரானில், அவை பெரும்பாலும் இரானிய ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கலாம்.

வானிலிருந்து தரையை தாக்குதல் பணியில், இந்த விமானம் லேசர் மற்றும் ஜிபிஎஸ் (GPS) மூலம் வழிநடத்தப்படும் துல்லியமான ஆயுதங்களையும் பிற குண்டுகளையும் வீசும் திறன் கொண்டது.

இந்த விமானத்தில் இரண்டு பேர் இருப்பார்கள்: விமானி மற்றும் பின் இருக்கையில் இருக்கும் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரி. “விஸோ” (Wizzo) என்று அழைக்கப்படும் ஆயுத அதிகாரி, இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆயுதங்கள் சரியான தாக்குதலுக்குத் தயார் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவர்.

இந்த இருவர் அமைப்பு, வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது, குறிப்பாக விமானி அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு நெருக்கடியான சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த அமெரிக்க விமானத்தை எது வீழ்த்தியது என்று நமக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை, ஆனால் அது இரானியர்களால் வீழ்த்தப்பட்டிருந்தால், அதற்கு தரையிலிருந்து இருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணை தான் பெரும்பாலும் காரணமாக இருந்திருக்கும்.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU